--- --:--:-- --

சட்டசபைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு? டி. ராஜேந்தர் பரபரப்பு அறிக்கை

T Rajendar

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் லட்சிய திமுகவானது, எந்த கட்சியையும் ஆதரிக்கவில்லை, அரவணைக்கவும் இல்லை என, அதன் தலைவரான நடிகர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக, டி.ராஜேந்தர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

ஜெயலலிதா காலத்திலிருந்து தொடங்கி, இந்நாள் துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் எனது நீண்டநாள் நண்பர். 2021 சட்டப்பேரவைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பு ஓபிஎஸ் என்னை அழைத்தார். மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்தேன். கையில் பூங்கொடுத்து ஒன்றைத் தந்தேன். கண்ணியமாய் விடைபெற்று வந்தேன்.

ஜெயலலிதா இல்லாமல் அதிமுக சந்திக்கின்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தல் களம். அதைப்போல் கருணாநிதி இல்லாமல் திமுக சந்திக்கின்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தல் களம். இரண்டு கட்சிகளுக்குமே இருக்கிறது அவரவர் பலம். இதைத் தவிர கூட்டணியென்று சேர்த்திருக்கிறார்கள் பக்க பலம். அதைத் தவிர அவர்களிடத்தில் இருக்கிறது பலபலம்.

 

இரண்டு கட்சிகளுமே பார்த்துக் கொள்ளப்போகிறது பலப்பரீட்சை. இதில் நான் போய் என்ன செய்யப் போகிறேன். புது சிகிச்சை, ஒருவருடைய வாக்கு வன்மை, அவர் வார்த்தையில் இருக்கும் தன்மை, அதில் வெளிப்படும் உண்மை. அதற்கு ஒரு சக்தி இருக்கிறது என்று சில முன்னாள் முதல்வர்கள் நம்பினார்கள். அதன் அடிப்படையில் என்னைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்தார்கள். அது ஒரு காலம்.

கொள்கையைச் சொல்லி ஓட்டு கேட்டதெல்லாம் அந்தக் காலம். கொடுக்க வேண்டியதைக் கொடுத்து ஓட்டு வாங்கிக் கொள்ளலாம் என்பது இந்தக் காலம். காலமும் சரியில்லை. களமும் சரியில்லை. கரையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம் என்று முடிவெடுத்துவிட்டேன். பத்தும் பத்தாதற்கு இது கொரோனா காலம். பாதுகாப்பு வேண்டுமென்றால் அணிந்துகொள்ள வேண்டும் முகமூடி. பக்குவப்பட்டவனாய் வாழ வேண்டுமென்றால் அமைதி காக்க வேண்டும் வாய்மூடி.

 

இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் லட்சிய திமுக நாங்கள் யாரையும் ஆதரிக்கவும் இல்லை. அரவணைக்கவும் இல்லை. நடுநிலைமையோடு இருக்க விரும்புகிறோம். நாடும், நாட்டு மக்களும் நன்றாக இருக்க வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம் என்று டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon