பிகார் தேர்தல் முடிவுக்கு பின் திடீர் அறிவிப்பு..!
பிகார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரியா ஜனதா தளம் படுதோல்வியடைந்த நிலையில், அக்கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத்தின் இளைய மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலை விட்டு விலகியுள்ளார்.
பிகார் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் வெறும் 25 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று படுதோல்வியடைந்தது. இந்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தள நிறுவனர் லாலு பிரசாத்தின் இளைய மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், லாலு குடும்பத்தினருடனான உறவை கைவிடுவதாகவும் தெரிவித்துள்ளார். தனது சகோதரர் தேஜஸ்வியின் நெருங்கிய ஆதரவாளரான சஞ்சய் யாதவ் மற்றும் ரமீஸ் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், அனைத்து விமர்சனங்களையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.
ரோகிணி ஆச்சார்யா தனது தந்தை லாலுவுக்கு சிறுநீரகத்தை தானம் அளித்து மறு வாழ்வளித்திருந்தார்.கடந்த மக்களவைத் தேர்தலில் சரண் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில், ரோகிணி ஆச்சார்யா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.






