முதன்முறையாக பிரதமர் மோடி புருனே பயணம்..!
அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி புருனே, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இன்று புறப்பட்டு செல்கிறார். இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியா – புருனே நாடுகளுக்கு இடையே நட்புறவு ஏற்பட்டதன் 40ஆவது ஆண்டை ஒட்டி, அந்நாட்டு சுல்தான் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இன்று புருனே செல்வதாக கூறப்பட்டுள்ளது.
புருனேவில் சுல்தான் ஹாஜி ஹஸ்னல் போல்கியாவை சந்திக்கும் பிரதமர் மோடி, அனைத்து துறைகளிலும் இருநாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளார்.மேலும் இந்திய பிரதமர் ஒருவர் முதன் முறையாக புருனேவிற்கு செல்லும் பெருமையை மோடி பெற உள்ளார்.
புருனே பயணத்தை தொடர்ந்து பிரதமர் மோடி, 2 நாட்கள் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் செல்கிறார்.6 ஆண்டுகளுக்கு பிறகு சிங்கப்பூர் செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் தர்மன் சண்முகரத்தினம் மற்றும் தொழிலதிபர்களை சந்திக்க உள்ளார்.
இரு நாடுகள் உடனான தூதரக உறவை பலப்படுத்தம் புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் வகையிலும் பிரதமர் மோடியின் பயண திட்டம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






