--- --:--:-- --

பிரதமர் மோடி நாளை கோவைக்கு வருகை..!

1

கோவையில் நடைபெறும் தென் மாநில இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருவதை முன்னிட்டு 3000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை கொடிசியாவில் தென் மாநில இயற்கை விவசாயிகள் மாநாடு நாளை புதன்கிழமை தொடங்குகிறது. 21ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

 

இந்த விழாவில் சிறப்பாக செயல்பட்ட 18 விவசாயிகளுக்கு விருது வழங்குகிறார். இந்த மாநாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர். ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலம் நாளை பிற்பகல் 1.25 மணிக்கு பிரதமர் மோடி கோவை விமான நிலையம் வருகிறார். கோவை விமான நிலையத்தில் பாஜக சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

 

வரவேற்பினை ஏற்றுக்கொண்டு, விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு 1.40 மணிக்கு கொடிசியா அரங்கம் வந்து விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் , மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு 3.30 மணிக்கு கோவை விமான நிலையத்தை அடைகிறார். பின்னர் தனி விமானம் மூலம் கோவையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

 

பிரதமர் மோடியின் கோவை வருகையை முன்னிட்டு கோவையில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 3000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விழா நடைபெறும் கொடிசியா வளாகம் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

 

கோவை விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வாகனங்கள் நிறுத்த தற்காலிக தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இன்று முதல் நாளை மாலை 6 மணி வரை விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டது.

 

மேலும் பிரதமர் வருகை நேரத்தில் அவினாசி சாலையில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் ஏர்போர்ட் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டு, இந்த வாகனங்கள் ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் வழியாக நகருக்குள் செல்ல அறிவுறுத்தபட்டுள்ளது.

 

நாளை பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை விமான நிலையத்திற்குள் வாகனங்கள் மற்றும் கால் டாக்சிகள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளதுடன், நாளை விமான நிலையத்திற்கு வருபவர்கள் 12 மணிக்கு முன்னதாக வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் 12 மணிக்கு மேல் வருபவர்கள் சிட்ரா சந்திப்பில் இறங்கி விமான நிலையத்திற்கு நடந்து செல்லவும் அறிவுறுத்தபட்டுள்ளது.

 

நாளை ஜி.டி.நாயுடு மேம்பாலம் பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை மூடப்படும் எனவும், வாகன ஓட்டுனர்கள் அதற்கு ஏற்றபடி பாதையை தேர்வு செய்து கொள்ளவும் அறிவுறுத்தபட்டுள்ளது. நாளை. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வர முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் கோவை நகரில் ஏற்கனவே டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளுடன், சிங்காநல்லூர், சின்னியம்பாளையம், SIHS காலனி, நேரு நகர், காளப்பட்டி, கொடிசியா அரங்கம், பீளமேடு , சரவணம்பட்டி, ராமநாதபுரம், ரேஸ்கோர்ஸ் ஆகிய பகுதிகள் ரெட்ஜோன்னாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் நாளை இரவு 7 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon