கோவிஷில்டு தடுப்பு மருந்துக்கு இன்று ஒப்புதல் தரப்படும்..!
இந்தியாவில் கோவிஷில்டு தடுப்பு மருந்துக்கு இன்று ஒப்புதல் தரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் நிறுவனத்துடன் கை கோர்த்து இந்தியாவிலுள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் கொரொனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது.
இந்தியாவின் அவசரத் தேவைக்கு இந்த மருந்தை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கும்படி மத்திய சுகாதார துறையிடம் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் தடுப்பு மருந்து குறித்து மேலதிக தகவல்களை வழங்குமாறு சீரம் இன்ஸ்டிடியூட்டிற்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பிரிட்டனில் இந்த மருந்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட சூழலில் சீரம் இன்ஸ்டியூட் நிறுவன அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத் துறையின் வல்லுனர் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. இதனால் கோவிஷீல்டு தடுப்பு மருந்துக்கு இந்தியாவிலும் இன்று ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் மற்றும் அஸ்ட்ராஜெனகா ஆகிய நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய தடுப்பு மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த பிரிட்டன் அரசு அனுமதியளித்துள்ளது. 4 முதல் 12 வார இடைவெளிகளில் கோவிஷீல்டு தடுப்பு மருந்தை இரண்டு நாட்களாக செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.







