--- --:--:-- --

கோவை : தடாகம் பகுதியில் இரவு நேரத்தில் சுற்றித் திரியும் ஒற்றைக்காட்டு யானை.சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளதால் மக்கள் பீதி !!!

21

கோவை மாவட்டம் தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ளன. தடாகம் பகுதியில் கடந்த சில நாள்களாக ஒற்றை காட்டு யானை சுற்றித்திரிவதாக அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளனர்.இதனால் யானை ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தினர்.

 

இந்த நிலையில் நேற்றிரவு தடாகம், நஞ்சுண்டாபுரம் பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து சாலை வழியே சர்வ சாதாரணமாக நடந்து வந்துள்ளது.இச்சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.சம்பவம் குறித்து அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து ஒற்றை காட்டு யானையை பத்திரமாக வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.

 

இரவு நேரத்தில் சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானை சாலை வழியே நடந்து செல்வது அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. அதில் யானை நடமாட்டம் உள்ள நேரத்தில் மக்கள் வாகனங்களில் செல்வதும் பதிவாகியுள்ளது.

 

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில் இரவு நேரங்களில் ஒற்றை காட்டு யானை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon