புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முதல்வர் இன்று ஆலோசனை..!
சென்னை உள்ளிட்ட வேறு இடங்களில் கொரொனா அதிகரித்து வரும் சூழலில் மருத்துவத் துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், மருத்துவத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மேலும் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் மற்றும் மருத்துவத் துறை சார்ந்த நிபுணர்களும் பங்கேற்க உள்ளனர்.
கொரொனா தடுப்பு நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும் 6 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு இன்று மாலை ஊரடங்கு தொடர்பான புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





