முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமனம்!!
நாட்டின் முதல் முப்படை தளபதியாக, ராணுவ தளபதி பொறுப்பில் இருந்து நாளை ஓய்வு பெற உள்ள பிபின் ராவத்தை, மத்திய அரசு நியமித்துள்ளது.
நாட்டின் முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தலைமை தளபதியை நியமிக்கும் முடிவுக்கு, மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. ராணுவம், கப்பற்படை மற்றும் விமானப் படைகளை ஒருங்கிணைத்து சேவைகள் தொடர்பான விவகாரங்களை கவனித்துக் கொள்வதுடன், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு ஆலோசகராகவும் ராணுவத்தின் தலைமை தளபதி செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
போர்போன்ற நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடாமல், முப்படைகளுக்கும் ஆலோசனை வழங்குவதுடன், ஆயுதங்கள் கொள்முதல் செய்வது, புதிய யுக்திகளை வகுப்பது போன்றவற்றிலும் ராணுவ தலைமை தளபதி முக்கியப் பங்கு வகிப்பார் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், முப்படைகளின் முதல் தலைமை தளபதி பொறுப்பில், ராணுவ தளபதியாக உள்ள பி பின் ராவத்தை நியமிக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.கடந்த 1978 முதல் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ராணுவத்தில் பல்வேறு பொறுப்புகள் வகித்து, தற்போது ராணுவ தளபதி பொறுப்பில் இருக்கும் பிபின் ராவத், நாளையுடன் ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில் அவர் இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முப்படைகளின் தலைமை பதவிக்கான வயது வரம்பு 65 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், 62 வயதாகும் பிபின் ராவத் 3 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.






