பண மோசடி செய்ததாக விஷ்ணு விஷால் தந்தை மீது சூரி அளித்த புகார்..!
நடிகர் சூரி அளித்த பண மோசடி புகாரில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீதான வழக்கு விசாரணையை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது.
தன்னை ஏமாற்றி பணமோசடி செய்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி வழக்கு விசாரணையை சிபிசிஐடியிடம் மாற்ற வேண்டும் என சூரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கோடிக்கணக்கில் இந்த பண மோசடி நடைபெற்றதால் இந்த வழக்கின் விசாரணையை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு மாற்றி உத்தரவிடுவதாகவும் துணை ஆணையர் பொறுப்பில் ஐபிஎஸ் அதிகாரி விசாரணை நடத்த வேண்டும் எனவும் இதனை கூடுதல்ஆணையர் பொறுப்பில் உள்ள அதிகாரி மேற்பார்வையிட வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் விசாரணையை 6 மாதங்களுக்குள் முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.






