நடிகை மீரா மிதுன் கேரளாவில் கைது..!
பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் கேரளாவில் கைது செய்யப்பட்டார். தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றின் பட்டியல் சமூகத்தினரை இழிவு படுத்தி பேசியதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து சென்னை காவல் ஆணையரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு அளித்த புகாரையடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர்.
அதன்படி வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 7 பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை கோரி சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் தலைமறைவானதாக தகவல் வெளியான நிலையில் தன்னை யாரும் கைது செய்ய முடியாது எனவும் மற்றொரு வீடியோவை வெளியிட்டார்.
இந்த நிலையில் அவர் கேரளாவில் இருப்பதை கண்டுபிடித்த தனிப்படையினர் அங்கு சென்று நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அவரை பெண் காவலர்களின் உதவியுடன் கைது செய்தனர்.
கைது நடவடிக்கையின்போது காவல்துறையினர் தன்னை துன்புறுத்துவதாகவும் வீடியோ வெளியிட்டார். இதனிடையே அவரை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.







