காதலியை பார்க்க சென்ற காதலன் அடித்து படுகொலை..!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காதலியை பார்க்க சென்ற காதலன் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புது பட்டியை சேர்ந்த பாரதிராஜா பரமேஸ்வரி என்பவரை 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த பரமேஸ்வரியின் குடும்பத்தினர் அவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் வேறொருவருக்கு கட்டாயத் திருமணம் நடத்தி வைக்க முயன்று வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாரதிராஜா நண்பர்கள் உதவியுடன் பரமேஸ்வரியை தனியாக வரவழைத்து தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். வழியில் அவர்களை மடக்கி பரமேஸ்வரியின் குடும்பத்தார் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் பரமேஸ்வரியின் அண்ணன் மலைச்சாமி என்பவர் கல்லால் அடித்து பாரதிராஜாவை கொலை செய்துள்ளார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






