நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் நாளை தொடக்கம்..!
அரசு பள்ளி மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் கல்வி தொலைக்காட்சியில் நாளை முதல் தொடங்கப்பட உள்ளன. கல்வி தொலைக்காட்சியில் 2021- 2022 ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய பாடங்கள் அடங்கிய வீடியோக்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து புதிய கல்வியாண்டுக்கான பாடங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதேபோல அரசுப் பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா பாடநூல்கள் வழங்கும் திட்டமும் நாளை தொடங்க உள்ளது.
இதன் மூலம் இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன் வழியே தொடங்குவது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கடந்த 14ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 55 லட்சம் மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில் இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 60 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






