ஐபிஎஸ் அண்ணாமலை ஒரு சிங்கம்… நடிகை நமீதா பிரசாரம்!
அண்ணாமலை அவர்கள் ஒரு நேர்மையான ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றியவர். அவருக்காக தாமரைச் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில், நடிகையும் பாஜக பிரமுகருமான நமீதா பிரச்சாரம் செய்தார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஐபிஎஸ் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரசாரம் செய்தார். இந்த நிலையில், திரைப்பட நடிகையும் பாஜக பிரமுகருமான நடிகை நமீதா, இன்று வாக்கு சேகரித்தார்.

அரவக்குறிச்சி ஏ.வி.எம் கார்னர் மற்றும் சின்னதாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட நடிகை நமிதா, அண்ணாமலையை புகழ்ந்து தள்ளினார். நமீதா பேசுகையில், வாழ்க்கையில் நான் முதன்முதலாக பிரச்சாரம் செய்கிறேன். நமது அண்ணாமலை கர்நாடகாவில் சிங்கம் போல செயல்பட்டு வந்த ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார்.
சிங்கம் மாதிரியான ஒரு காவல் அதிகாரி நமது தொகுதியில் இருந்தால் சூப்பராக இருக்கும். அவர் நன்கு படித்தவர், நல்லவர், நேர்மையானவர். அரவக்குறிச்சி தொகுதியானது தற்போது வறண்டு காணப்பட்டு உள்ளது.
அரவக்குறிச்சி பூமியை பசுமையாக்க வேண்டுமானால், இங்கு தாமரை மலர வேண்டும் எனவே தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள். மீண்டும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி தான் வரவேண்டும். ஆகவே அவரையும் நாமெல்லாம் ஆதரிக்க வேண்டும் என்றார்.
பின்னர் நிருபர்களுக்கு நமிதா அளித்த பேட்டியில், அரவக்குறிச்சியை சேர்ந்த அண்ணாமலை ஐபிஎஸ் சிறந்த, திறமையான நேர்மையான ஐ.பி.எஸ் அதிகாரி. காய்ந்து போன மண்ணை செல்வ செழிப்பாகவும், விவசாய நிலமாகவும் மாற்ற படித்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலையால் மட்டுமே முடியும் என்றார்.





