கோவை மண்டல டாஸ்மாக் மாநில தொழிற்சங்கங்களின் சார்பில் நவம்பர் 26 பொது வேலை நிறுத்தத்திற்கான ஆயத்த கூட்டம் !!!
கோவை மண்டல டாஸ்மாக் மாநில தொழிற்சங்கங்களின் சார்பில் நவம்பர் 26 அன்று பொது வேலை நிறுத்தத்திற்கான ஆயத்த கூட்டம் மாவட்ட திமுக அலுவலகத்தில் தொமுச மாநில டாஸ்மாக் பொதுச்செயலாளர் சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழக அரசுக்கும், நிர்வாகத்திற்கும் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பாக வழங்கப்பட்ட பணி நிரந்தரம்,காலமுறை ஊதியம் உள்பட 14 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 30 சதவீதம் வழங்கிட வேண்டும்,பணி நேரம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றி பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும், டாஸ்மாக் பணியாளர்களுக்கு அரசுப் பணியாளர்களுக்கு இணையான சம்பளம் மற்றும் இதர சலுவைகள் வழங்கிடவேண்டும், டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் விற்பனைத் தொகையினை சென்னையைப் போல் வங்கிகள் மூலம் நேரடியாக கடைகளுக்கு வந்து வசூல் செய்யும் முறையினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்திட வேண்டும்.
கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப வாரிசு வேலை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பதினான்கு அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி வரும் நவம்பர் 26 – ம்தேதியில் டாஸ்மாக் பணியாளர்கள் பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் அனைத்து சங்க கூட்டு குழு உறுப்பினர்களும் ஆதரவு தர வேண்டும் என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இறுதியாக மாவட்ட டாஸ்மாக் LPF செயலாளர் தமிழ்ச்செல்வன் நன்றி தெரிவித்து கூட்டத்தை முடித்து வைத்தார்.இந்த கூட்டத்தில் தொமுச துணைப்பொதுச் செயலாளர் இரத்தினவேல், டாஸ்மாக் அனைத்து கூட்டு நடவடிக்கை குழு கோவை மண்டல தலைவர் ராக்கிமுத்து, ஏஐடியுசி – ஆறுமுகம், சிஐடியு மூர்த்தி மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.







