கொரோனா ஊரடங்கு இனி தேவையில்லை… அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டம்!!
கொரோனா ஊரடங்கு இனி தேவையில்லை. மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 6 மாதங்களாக இந்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு இம்மாதம் 30-ந் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. முதலில் ஊரடங்கில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டு பின்னர் படிப்படியாக பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன.
தற்போதைய நிலையில், கொரோனா பாதிப்பு குறையா விட்டாலும் பேருந்து, ரயில் போக்குவரத்து உள்பட அனைத்தும் இயங்கத் தொடங்கியுள்ளன. ஒரு பக்கம் கொரோனா பரவல் இருந்தாலும் ஒரு சில கட்டுப்பாடுகள் தவிர்த்து நாட்டில் சகஜ நிலை திரும்பத் தொடங்கியுள்ளது.
தமிழகத்திலும் தற்போதைய நிலையில் சென்னை, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கூடிக் கொண்டே வந்தாலும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் தொடர்கிறது .
இதனால் வரும் செப்டம்பர் 30-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீடிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், சென்னை புரசைவாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீடிக்கப்பட தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியும் பணி நடைபெறுவதாகவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.






