கொரொனாவால் பாதிக்கப்பட்ட பாடகி கனிகா கபூர்! விழாக்களில் கலந்து கொண்டதால் வழக்குப்பதிவு!
கொரொனா அறிகுறிகள் இருப்பது தெரிந்தும் விருந்துகளில் கலந்து கொண்டு அலட்சியமாக செயல்பட்டதாக பிரபல பாலிவுட் படத்தில் கணிகா கபூர் மீது உத்தரபிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொரோனா பரவலைத் தவிர்க்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது.
ஆனால் இந்த விஷயத்தில் மிகுந்த அலட்சியத்தோடு செயல்பட்டதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார் இந்தி திரையுலகின் முன்னணி பாடகி கனிகா கபூர். உத்தர பிரதேசத்தை சேர்ந்த கனிகா கபூருக்கு கொரொனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட முதல் பிரபலம் இவர் தான்.
கடந்த மார்ச் 11ஆம் தேதி லண்டனில் இருந்து திரும்பிய கணிகா கபூர் கொரொனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்ட போதும் அதனை பொருட்படுத்தாமல் பல்வேறு இடங்களுக்குச் சென்றதாகவும், மூன்று விருந்துகளில் கலந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விருந்துகளில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட விஐபிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

அவர்களிடையே தற்போது கொரொனா குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. விருந்துகளில் அவர் அருகே இருந்த பாஜக எம்பி துஸ்யன் சிங் மற்றும் அவரது தாயாரும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான வசுந்தரராஜே சிந்தியா ஆகியோர் தங்களை தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். மேலும் தனி கணிகா கபூரின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
லக்னோவில் கணிகா கபூர் பங்கேற்ற விருந்து நடைபெற்ற நட்சத்திர ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விருந்தில் யார் யார் கனிகா கபூர் அருகே இருந்தார்கள் என்பதை தெரிந்துகொண்டு அவர்களிடமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் முயன்று வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கொரொனா அறிகுறிகள் இருப்பது தெரிந்தும் அலட்சியமாக நடந்து கொண்டதால் கணிகா கபூர் மீது உத்தரபிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நோயை பரப்பும் விதமாக அலட்சியமாக செயல்படுதல், அரசு உத்தரவுகளை மீறி நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் கணிகா கபூர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.







