இன்று இரவு ஓநாய் சந்திர கிரகணம்: வெறும் கண்ணால் பார்க்கலாமா?
2020 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று இரவு நிகழவுள்ளது. இதற்கு ஓநாய் சந்திரகிரகணம் என நாசா பெயர் சூட்டியுள்ளது. சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் பூமி வரும் நிகழ்வு சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது.
இந்த நிகழ்வின் போது சூரிய ஒளியை சந்திரன் பெற விடாமல் பூமி தடுக்கிறது. இன்று நிகழவுள்ள சந்திர கிரகணம் புறநிழல் சந்திரகிரகணம் என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வின்போது நிலவு முழுவதுமாக இருள் அடைவதும் சிவப்பு நிறமாகவும் மாறாது. பௌர்ணமியின் போது வழக்கமாக அதிகப்பிரகாசமாக ஜொலிக்கும் நிலவு இன்று மங்கிய நிலையில் காணப்படும்.
பூமியின் புறநிழல் நிலவின் சில பகுதிகளை மறைத்தபடியே பயணிப்பதால் புறநிழல்கிரகணத்தின்போது நிலவின் ஒளி மங்கிய நிறத்தில் இருக்கும். வெறும் கண்களால் பார்க்கும்போது பிரகாசம் குறைந்த நிலவை மட்டுமே பார்க்க முடியும். தொலைநோக்கி மூலம் சந்திரகிரகணத்தை தெளிவாக கண்டு ரசிக்கலாம். இந்தியாவில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சந்திர கிரகணம் தெரியும்.
இரவு 10.37 மணிக்கு தொடங்கி அதிகாலை 2. 42 மணி வரை ஏறக்குறைய நான்கு மணி நேரம் ஐந்து நிமிடங்களுக்கு இந்த சந்திர கிரகணம் நீடிக்கும். நள்ளிரவு 12.41 மணி அளவில் சந்திரகிரகணம் உச்ச நிலையை எட்டும். இந்தநிலையில் 90% இரவின் பகுதியில் பூமியின் நிழலால் மறைக்கப்பட்டு இருக்கும்.






