--- --:--:-- --

டெல்லியில் அதிகாலையில் நிகழ்ந்த சோகம்..! பயங்கர தீ விபத்தில் 35 பேர் உயிரிழப்பு!!

tdu

தலைநகர் டெல்லியில் உள்ள சந்தைப் பகுதியில் இன்று அதிகாலை நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 35 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். பலரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

 

புது டெல்லியின் ஜான்சிராணி சாலையில் உள்ள மனோஜ் மண்டி பகுதி, சிறு சிறு தொழிற்சாலைகள், கடைகள், மார்க்கெட், மண்டிகள் என நெரிசல் மிகுந்த பகுதியாகும். இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் பலர் தாங்கள் பணிபுரியும் இடத்திலேயே தூங்கிக் கொண்டிருந்தனர்.

 

இங்கு, துணிப்பை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ, அருகிலுள்ள பகுதிகளுக்கும் பரவி, புகை மண்டலமாக காட்சியளித்தது. தீ விபத்து தகவல் அறிந்து 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

 

மேலும், தீயில் சிக்கிக் கொண்ட 100-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணியிலும் வீரர்கள் ஈடுபட்டனர். இதில் தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்டவர்களில் 35 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

 

டெல்லியில், நெரிசல் மிகுந்த மார்க்கெட் பகுதியில் நடந்த இந்த தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon