கோவை: கொசு மருந்து புகையால் மூச்சுத்திணறி 2 பேர் உயிரிழப்பு
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட சத்தி சாலை பகுதியைச் சேர்ந்த மோகன் (வயது 65) மற்றும் ராணி (வயது 74). இவர்கள் அந்தப் பகுதியில் வசித்து வரும் நிலையில் இன்று இவர்கள் வசிக்கக்கூடிய பகுதியில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையாக கொசு மருந்து அடிக்கப்பட்டுள்ளது.
கொசு மருந்து அடிக்க வந்த பேரூராட்சி ஊழியர்கள் குடியிருப்புகளுக்குள் அதிக புகை வரும் வகையில் கொசு மருந்துகளை அடித்ததாக தெரிகிறது. அப்பொழுது வீட்டில் இருந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த மோகன் மற்றும் ராணி ஆகிய முதியவர்கள் இரண்டு பேர் அதனை சுவாசித்ததில் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அவர்களை வீட்டிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் அன்னூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கக்கூடிய சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் இதனை சரியாக கண்காணிக்கவும் உடனிருந்து கண்காணிக்கவும் தவறி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




