இன்று இந்த மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு..!
நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தெற்கு குஜராத்திலிருந்து மத்திய கேரளா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் எனவும், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவித்துள்ள வானிலை மையம், நகரின் ஒருசில பகுதிகளில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது. இதற்கிடையே, அந்தமான் கடல் பகுதிகளில் நாளை முதல் 12ஆம் தேதி வரை மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





