சென்னையில் 2வது ஏசி புறநகர் ரயில் சேவை எப்போது தொடக்கம்..?
சென்னையில் 2ஆவது ஏ.சி. புறநகர் மின்சார ரயில் சேவை விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் முதல் ஏ.சி. மின்சார ரயில் சேவை கடந்த ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கப்பட்டது. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்பட்டு வரும் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ஏ.சி. மின்சார ரயில் சேவையை விரிவுபடுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மற்றும் கடற்கரை – செங்கல்பட்டு ஆகிய மார்க்கங்களில் காலை பணிக்கு செல்வோர் கூடுதல் ஏ.சி. மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என நீண்ட நாட்களாகக் கோரி வந்தனர்.
அதன்படி பெரம்பூர் ஐ.சி.எஃப் ஆலையில் இரண்டாவது ஏ.சி. மின்சார ரயில் தயாரிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கி, இரண்டு மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. கோடை வெயில் தகிக்கும் நிலையில் இந்தப் புதிய ரயிலை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கத்தில் இயக்குவது குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். அதேபோல், செங்கல்பட்டு – கடற்கரை தடத்திலும் மற்றுமொரு ரயிலை இயக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.





