எஸ்.ஐ.ஆர் பணிக்காக 8 நாட்களுக்கு 947 சிறப்பு முகாம்கள்..!
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (Special Intensive Revision – SIR) 2026 பணியை விரைவுபடுத்தும் நோக்கில், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து 947 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் உதவி மையங்கள் (Voter Helpdesks) இன்று (நவ.18) முதல் நவ.25ம் தேதி வரை செயல்படும் என்று மாவட்டத் தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான குமாரகுருபரன் அறிவித்துள்ளார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, மாவட்டத்தின் 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் தற்போது வாக்காளர் திருத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பூத் நிலை அலுவலர்கள் (BLOs) வீடுகளுக்குச் சென்று படிவங்களை விநியோகித்துத் திரும்பப் பெற்று வருகின்றனர். இந்த 8 நாட்களிலும், காலை 10 முதல் மாலை 6 மணி வரை செயல்படும் இந்த உதவி மையங்களில் வாக்காளர்கள் உதவிகளைப் பெறலாம்.
சந்தேகம் தீர்த்தல்: படிவங்களைப் பூர்த்தி செய்வதில் உள்ள சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். விவர சரிபார்ப்பு: வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் மற்றும் EPIC விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
உடனடி சேவை: ஆவணத் தேவைகள் குறித்து விளக்கம் பெறுவதுடன், கணினி மூலம் வாக்காளர் விவரங்களை உடனடியாகச் சரிபார்க்க முடியும். சிறப்பு சலுகை: வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஒரு உதவியாளருடன் மையங்களுக்கு வரலாம்.
அரசியல் கட்சிகளின் பூத் நிலை முகவர்கள் (BLAs) வரைவுப் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்பு வரை, ஒரு நாளைக்கு அதிகபட்சம் 50 பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைச் சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. தவறான தகவல்கள் அளிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று உறுதிமொழிப் பத்திரத்துடன் இந்த படிவங்களை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த 8 நாட்களும் திருத்தப் பணியில் மிக முக்கியமான கட்டம் என்பதால், பொதுமக்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்டத் தேர்தல் அலுவலர் கேட்டுக் கொண்டார்.





