பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!
பிகார் – தமிழ்நாடு இடையே பகையை ஏற்படுத்த முயற்சிப்பதாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பிகார் மாநிலம் முசாபர்பூரில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பேசிய பிரதமர் மோடி, வடமாநிலங்களில் கொண்டாடப்படும் சாத் பண்டிகையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்க முயற்சி செய்து வருவதாகக் கூறினார்.
ஆனால், வாக்கு அரசியலுக்காக காங்கிரஸும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும் சாத் தேவியை அவமதித்து விட்டதாகவும், அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் பிகார் தொழிலாளர்களை திமுகவினர் அவமதிப்பதாக பிகார் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
இதனிடையே பிரதமர் மோடியின் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடி அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஒடிசா – பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.க.,வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.





