பாகிஸ்தான் புறக்கணிப்பு – ஐ.சி.சி எச்சரிப்பு

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற பிப்ரவரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள், அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். அதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதியில் மோதும். அரைஇறுதியில் வென்ற இரு அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

 

இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கும் இன்னும் 20 நாட்களே உள்ள சூழலில், பிப்ரவரி 15 அன்று கொழும்பில் நடைபெறும் இத்தொடருக்கான லீக் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக விளையாட வேண்டாம் என தங்களது அணிக்கு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. தொடரில் பங்கேற்க அனுமதி அளித்துள்ள பாகிஸ்தான் அரசு இந்தியாவுக்கு எதிராக மட்டும் ஆட வேண்டாம் என்று நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

 

2026 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமானை இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவின் பேரில் அந்த அணி நிர்வாகம் விடுவித்தது. வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்ததை தொடர்ந்து அவருக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வங்கதேசம் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க இந்தியாவுக்கு செல்லமாட்டோம். அங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை போட்டியை நடத்தும் மற்றொரு நாடான இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது.

 

ஆனால், இந்தியாவில் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை எனவும், கடைசி நேரத்தில் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்ய முடியாது என்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான (ஐ.சி.சி.) மறுத்து விட்டது. இதன் தொடர்ச்சியாக வங்கதேச அணி டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்டது. மாற்று அணியாக ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது.

 

ஏற்கனவே வங்கதேசத்துக்கு ஆதரவாக பேசி வந்த பாகிஸ்தான், டி20 உலகக் கோப்பையை புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியது. எனினும், இது தொடர்பாக பாகிஸ்தான் முடிவை எடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டே வந்தது. இந்நிலையில், இலங்கையில் டி20 உலகக் கோப்பையில் விளையாடுவோம். ஆனால் இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் நேற்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்தியா தவிர இதர அணிகளுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்கும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “2026 ஐ.சி.சி டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தான் அரசாங்கம் ஒப்புதல் அளிக்கிறது. இருப்பினும், பிப்ரவரி 15 அன்று இந்தியாவுக்கு எதிராக திட்டமிடப்பட்ட போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி களமிறங்காது.” என்று தெரிவித்தது. இருப்பினும், பாகிஸ்தான் அரசின் முடிவு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) இன்னும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி) இன்னும் தெரிவிக்கவில்லை.

 

 

இந்த நிலையில், பாகிஸ்தான் அரசின் அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ள ஐ.சி.சி, ‘டி20 உலகக் கோப்பை தொடரில் குறிப்பிட்ட போட்டிகளில் மட்டுமே ஆடுவோம்’ என்று கூறுவது இத்தொடரின் மீது கொண்டுள்ள உணர்வையும், புனிதத்தையும் கொச்சைப்படுத்துகிறது என்றும், இந்த செயல் எதிர்காலத்தில் கடும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

 

“ஐ.சி.சி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவலுக்காகக் காத்திருக்கிறது. அதேவேளையில், தகுதிபெற்ற அனைத்து அணிகளும் சமமான அடிப்படையில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு உலகளாவிய விளையாட்டு போட்டியின் அடிப்படைக் கொள்கையுடன், இந்தத் தேர்ந்தெடுத்துப் பங்கேற்கும் நிலைப்பாட்டை ஒத்துப் பார்ப்பது கடினம். இந்த முடிவு தங்கள் சொந்த நாட்டில் கிரிக்கெட்டிற்கு ஏற்படக்கூடிய குறிப்பிடத்தக்க மற்றும் நீண்டகால விளைவுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கருத்தில் கொள்ளும் என்று ஐ.சி.சி நம்புகிறது.

 

ஏனெனில் இது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் ஒரு உறுப்பினராகவும் பயனாளியாகவும் இருக்கும் உலகளாவிய கிரிக்கெட் சூழல் அமைப்பைப் பாதிக்கக்கூடும். தேசிய கொள்கை விஷயங்களில் அரசாங்கங்களின் பங்கை ஐ.சி.சி மதித்தாலும், இந்த முடிவு உலகளாவிய கிரிக்கெட் விளையாட்டுக்கோ அல்லது பாகிஸ்தானில் உள்ள மில்லியன் கணக்கானோர் உட்பட உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் நலனுக்கோ உகந்தது அல்ல. ஐ.சி.சி-யின் முன்னுரிமை, ஐ.சி.சி ஆடவர் டி20 உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்துவதே ஆகும். இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உட்பட அதன் அனைத்து உறுப்பினர்களின் பொறுப்பாகவும் இருக்க வேண்டும். அனைத்து பங்குதாரர்களின் நலன்களையும் பாதுகாக்கும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆராயும் என்றும் ஐ.சி.சி எதிர்பார்க்கிறது.” என்று அந்த அறிக்கையில் ஐ.சி.சி தெரிவித்து இருக்கிறது.

 

 

முன்னதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டபடி, வங்கதேசத்திற்கு ஆதரவாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) டி20 உலகக் கோப்பையை முழுமையாகப் புறக்கணிக்கப் போவதாக அச்சுறுத்தியபோது, ​​இருதரப்புத் தொடர்களை நிறுத்துவது மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் சர்வதேச வீரர்கள் பங்கேற்பதற்குத் தடை விதிப்பது உட்பட பாகிஸ்தான் மீது கடுமையான தடைகள் விதிக்கப்படலாம் என்று ஐ.சி.சி வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

 

நேற்று ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் அரசு வெளியிடப்பட்ட அறிக்கையில், பிப்ரவரி 15 ஆம் தேதி அன்று நடக்குப்போகும் போட்டி என குறிப்பிடப்பட்டிருந்தாலும், இந்தத் தொடரின் பிற்பகுதியில் இந்தியாவுக்கு எதிரான நாக்-அவுட் போட்டியில் பாகிஸ்தான் களமிறங்காமல் இருப்பது அவர்களின் திட்டமாக இல்லை என்று லாகூரில் உள்ள கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன. “இது எங்கள் முடிவு அல்ல. எங்கள் அரசாங்கமும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரும் என்ன முடிவு செய்கிறார்களோ, அதைத்தான் நாங்கள் செய்ய வேண்டும்,” என்று பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா லாகூரில் கூறினார்.

 

கொழும்பில் நடைபெறவுள்ள போட்டிக்கான ஏற்பாடுகளை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது. “எங்கள் ஹோட்டல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் ஐ.சி.சி இந்திய அணிக்கான விமான டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்துள்ளது. பாகிஸ்தானின் முடிவு குறித்துத் தெரிவிக்கும் எந்த இ-மெயிலையும் பி.சி.சி.ஐ ஐ.சி.சி-யிடமிருந்து பெறவில்லை. நாங்கள் ஐ.சி.சி-யிடம் விசாரித்தோம், அவர்களுக்கும் இது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ இ-மெயிலும் வரவில்லை,” என்று பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.

 

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டி புறக்கணிப்பு என்ற பாகிஸ்தானின் இந்த முடிவு களத்திலும், களத்திற்கு வெளியேயும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு போட்டிக்கு ரூ. 138.7 கோடி செலுத்தும் ஒளிபரப்பு நிறுவனம், பெரும் இழப்பைச் சந்திக்கும் அபாயத்தில் உள்ளது. ஏனெனில், இத்தொடரில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிதான் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாகும். இது அதிகபட்ச பார்வையாளர்களை ஈர்த்து, விளம்பரங்கள் மூலம் அதிக வருவாயை ஈட்டுகிறது.

 

பாகிஸ்தான் இந்த முடிவில் உறுதியாக இருந்தால், அடுத்த சுற்றுக்கு தகுதி பெற அந்த அணி நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் நமீபியா ஆகிய அணிகளுக்கு எதிரான மீதமுள்ள மூன்று லீக் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். ஏனெனில், இந்த முடிவால் அவர்கள் இரண்டு புள்ளிகளை இழக்க நேரிடும், மேலும் அவர்களின் நெட் ரன்ரேட்டும் பாதிக்கப்படும். அதேநேரத்தில், இந்திய அணிக்கு விளையாடமலே இரண்டு புள்ளிகள் கிடைக்கும்.

 

கடந்த காலங்களில், ஐ.சி.சி போட்டிகளில் அரசின் முடிவுகளைக் காரணம் காட்டி அணிகள் விளையாட மறுத்த சம்பவங்கள் நடந்துள்ளன. 1996-ல், ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இலங்கையில் விளையாடவில்லை. இதன் விளைவாக, இலங்கை அணிக்கு புள்ளிகள் வழங்கப்பட்டன. இது அவர்கள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற உதவியது.

 

2003 உலகக் கோப்பையின் போது, ​​இருதரப்பு பதட்டங்கள் காரணமாக இங்கிலாந்து ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியைப் புறக்கணித்தது. அதே தொடரில், பாதுகாப்பு கவலைகள் இருந்தபோதிலும், ஐ.சி.சி போட்டி நடைபெறும் இடத்தை மாற்ற மறுத்ததால், நியூசிலாந்து கென்யாவுக்கு எதிரான லீக் போட்டிக்காக நைரோபிக்கு பயணிக்கவில்லை. 2009 டி20 உலகக் கோப்பை தொடரில், அரசாங்கத்துடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக ஜிம்பாப்வே இங்கிலாந்துக்கு பயணிக்க மறுத்தது.