நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்ட கவுன்சிலருக்கு போட்டியிட்ட 10 அ.தி.மு.க-வினரும், 5 தி.மு.க-வினரும், 2 பா.ஜ.க-வினரும் வெற்றி பெற்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி முன்னிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற 17 பேரும் இன்று பதவியேற்று கொண்டனர்.
பா.ஜ.க மாவட்ட கவுன்சிலர் பாரத் மாதகி ஜெ எனக்கூறி பதவியேற்று கொண்டார். அ.தி.மு.க -வினர் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நன்றி தெரிவித்தும்,தி.மு.க உறுப்பினர்கள் அண்ணா வாழ்க, கலைஞர் வாழ்க, தளபதி வாழ்க எனக்கூறியும் பதவியேற்றனர்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஊரக உள்ளாட்சி தேர்தல் கோவை மாவட்டத்தில் எதிர்பார்ப்பிற்கு மேலாக நல்ல முறையில் அமைதியாக நடந்து முடிந்துள்ளது என தெரிவித்தார். மேலும்,மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் வருகின்ற 11 ம் தேதி நடைபெற உள்ளது எனவும்,மறைமுக தேர்தலில் எந்த விதமான விதிமீறலுக்கும் இடம் தராமல், நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்படும் எனவும் கூறிய அவர்,தேர்தல் விதிமீறல் தொடர்பாக 91 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.