எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த வைத்திலிங்கம்
ஒரத்தநாடு சட்டமன்ற பதவியை ராஜினானா செய்த வைத்திலிங்கம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். nஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்த வைத்திலிங்கம், அதிமுக பிளவுபட்டபோது, சசிகலாவுடன் பயணித்தார். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வந்த பின்னர் அவருக்கு ஆதரவாக பக்கபலமாக இருந்து செயல்பட்டார்.
ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் ஒருங்கிணைய வேண்டும் என்று முயற்சி எடுத்து அவர்களை ஒன்றிணைத்தார். அதன் பின்னர், மீண்டும் அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை வந்த பிறகு, எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக நின்றார்.
எடப்பாடி பழனிசாமியை தொடர்ச்சியாக கடுமையாக விமர்சித்து வந்தவர், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக ஒருங்கிணைய வேண்டுமென்ற முயற்சியை தீவிரமாக மேற்கொண்டார். ஆனால் அது கைகூடவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அண்மையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்த மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு பக்க பலமாக இருந்த வைத்திலிங்கமும் தற்போது திமுகவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று இணைந்தார்.





