மாவட்ட செயலாளர்களுடன் தினகரன் இன்று ஆலோசனை..!
தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக மாவட்டச் செயலாளர்களுடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளன. எனினும், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை கூட்டணியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.
ஆனால், கூட்டணியில் டிடிவி தினகரன் சேர்க்கப்படுவாரா என்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதில் அளிக்கவில்லை. எனினும், அமித்ஷாவை டிடிவி தினகரன் சந்தித்து பேசியது தொடர்பான கேள்விக்கு மதுரையில் பதில் அளித்த செல்லூர் ராஜூ, டிடிவி தினகரனுடன் பாஜக கூட்டணி குறித்து பேசுவதில் தவறில்லை என்றார்.
எனவே அதிமுக- பாஜக கூட்டணியில் அமமுகவும் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூட்டணி பற்றி உரியவர்கள் அறிவிப்பார்கள் என டிடிவி தினகரன் கூறியிருந்தார். இந்நிலையில், பாஜக தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிதின் நபீனுக்கு டிடிவி தினகரன் வாழத்து தெரிவித்துள்ளார்.
இது கவனம் பெற்றுள்ள நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 80 மாவட்ட செயலாளர்களுடன் இன்று காலை 10 மணி அவசர ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை அடையாறில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.





