கோலாகலமாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை!
உலகம் முழுவதும் அத்தப்பூ கோலமிட்டும், புத்தாடை அணிந்தும் மகாபலி மன்னனை வரவேற்று மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
பாதாள லோகத்தை ஆளும் அரசன் மகாபலி, ஒரு நாள் பூமிக்கு வந்து, தான் ஆட்சி செய்த மக்களை பார்த்து செல்வது தான் ஓணமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய திருநாளை கேரள மக்கள் புதிய ஆடைகளை உடுத்தியும், வீட்டின்முன் அத்தப்பூ கோலமிட்டும் வரவேற்பது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள திருக்காக்கரா கோயிலில் ஓணம் கொண்டாட்டங்கள் களைகட்டின. உத்திராட சதயம் மற்றும் உத்திராட பூரண விழா கொண்டாடப்பட்டதையொட்டி கோயிலில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். விழாவுக்காக, யானைகள் அலங்கரிக்கப்பட்டு நிற்க வைக்கப்பட்டிருந்தன.
கோயிலில் நடந்த சிறப்பு இசை நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான செண்டை மேள கலைஞர்கள் ஒன்றாக இணைந்து இசைத்து அசத்தினர். விழாவில் பங்கேற்ற அனைருக்கும் கோயில் சார்பில் ஓணம் சிறப்பு விருந்து பரிமாறப்பட்டது.
கேரளாவில் வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து, ஓணம் கொண்டாடுவதில்லை என கேரளா அரசு அறிவித்தது. இதனால் கேரளாவில் அரசு சார்பாக ஓணம் பண்டிகையை கொண்டாடவில்லை.






