11ஆம் ஆண்டில் குற்றம் குற்றமே.. வாசகர்களின் பேராதரவால் சாத்தியம்.. மக்கள் நலனே பிரதானம் என சத்தியம்!

வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன், குற்றம் குற்றமே இதழ், இன்று தனது 11ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. மக்களின் நலனே பிரதானம் என்ற அடிப்படையில் ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்டு, எங்கு தவறு நேர்ந்தாலும் “குற்றம் குற்றமே” என்று சமரசமின்றி, நடுநிலையோடு செல்லும் எங்களின் பயணும் உங்கள் ஆதரவோடு என்றும் தொடரும்.

 

‘குற்றம் குற்றமே’ என்ற அரசியல் மற்றும் புலனாய்வு வார இதழ், தனது 10-வது ஆண்டை நிறைவு செய்து, இன்று 11ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. மக்கள் நலன் மட்டுமே பிரதானம் எனும் பயணத்தை குற்றம் குற்றமே தொடர்கிறது. வெறும் செய்திகளை மட்டும் அளிப்பதோடு நின்றுவிடாமல், சமூகத்தில் நடக்கும் அநீதிகளையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் துணிச்சலுடன் வெளிச்சத்திற்கு கொண்டுவரும் பணியை குற்றம் குற்றமே செய்து வருகிறது.

சமூகம் மற்றும் அரசியல் குறித்த ஆழமான பார்வைகளை, எளிய நடையில் வழங்குவதன் மூலம், ஒவ்வொரு வாசகரையும் சிந்திக்கத் தூண்டுகிறது. “குற்றம் குற்றமே” எனத் துணிச்சலாக வெளிப்படுத்தும் அதன் ஒவ்வொரு சொல்லும், ஜனநாயகத்தின் நான்காவது தூணாக பத்திரிக்கைத்துறைக்கு உள்ள பொறுப்பை உணர்த்துகிறது.

 

குற்றம் குற்றமே 11ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், அதன் ஆசிரியர் ஷஷ்டி கண்ணதாசன் கூறியதாவது: திருப்பூர் மக்களின் குரலாக ஒலித்துவரும் குற்றம் குற்றமே இதழ், எந்த ஒரு சார்புமின்றி, நேர்மையுடன் தொடர்ந்து செயல்படும். தவறு புரியும் அதிகாரிகள், ஆட்சியாளர்கள் என யாராக இருந்தாலும், தயக்கமின்றி விமர்சனம் செய்து, அதன் மூலம் மக்களுக்கான நீதியை நிலைநாட்ட முயற்சிப்போம் என்று உறுதி அளிக்கிறோம்.

இந்த இதழ், வரும் காலங்களிலும் இதே துணிச்சலுடனும் நேர்மையுடனும் செயல்பட்டு, சமூக மாற்றத்திற்கான பயணத்தில் தொடர்ந்து ஒளிரும். நாங்கள் செய்திகளை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், சமூகப் பொறுப்புணர்வுடனும் செயல்படுகிறோம்.

 

மக்களுக்காக இலவச மருத்துவ முகாம்கள், ரத்த தான முகாம்கள் போன்றவற்றை நடத்தி, சமூகசேவைக்கு பங்களிப்பு செய்கிறோம். இந்த சேவைகள், இந்த இதழ் ஒரு பத்திரிகையாக மட்டும் இல்லாமல், சமூக நலனில் அக்கறை கொண்ட ஒரு அமைப்பாகவும் திகழ்கிறது என்பதை நிரூபிக்கின்றன. செய்திகளைச் சேகரிப்பதில் காட்டும் அதே துணிச்சலையும் நேர்மையையும், மக்கள் நலத் திட்டங்களிலும் செய்கிறோம்.

 

குற்றம் குற்றமே இதழின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் வாசகர்கள், விளம்பரதாரர்கள், ஏஜெண்டுகள் மற்றும் பக்க துணையாக இருக்கும் தொழில் அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள், பின்னலாடை தொழில் துறையினர், அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு, குற்றம் குற்றமே நிறுவன ஆசிரியர் சஷ்டி கண்ணதாசன் தெரிவித்தார்.


காதர்பேட்டை தீ விபத்து சதியா? இட உரிமையாளரின் நடவடிக்கையால் வலுக்கும் சந்தேகம்.. வாழ்வாதரமின்றி கடை உரிமையாளர்கள் பெரும் சோகம்!!

திருப்பூர் காதர் பேட்டையில் அண்மையில் நடந்த தீ விபத்தில் ஏராளமான பனியன் கடைகள் எரிந்து சாம்பலான நிலையில், அவற்றை சரி செய்து தர ஆர்வம் காட்டாத இட உரிமையாளரின் நடவடிக்கையால், தீ விபத்து திட்டமிட்ட சதியாக இருக்குமோ என்ற சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது.

 

பின்னலாடை நகர் என்றும் டாலர் சிட்டி என்றும் அறியப்படும் திருப்பூரின் இதயப் பகுதியாக விளங்குகிறது காதர்பேட்டை. இங்கு, சுமார் 700க்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லரை ஆடை வர்த்தகக் கடைகள் உள்ளன. இங்கு விதவிதமான வண்ணத்தில் வகை வகையான ஆடைகள், குழந்தைகள், சிறுவர், ஆண், பெண்களுக்கான அனைத்து ரகங்களில் இங்கு விற்கப்படுகின்றன. கோவை, ஈரோடு, சேலம், கரூர் போன்ற வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், குஜராத், ஒடிசா போன்ற வெளி மாநிலங்களைச் சேர்ந்த குறு, சிறு வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்கள் காதர்பேட்டையில் ஆடை ரகங்களை வாங்கிச் செல்வது வழக்கம்.

 

காதர்பேட்டையில் அமைந்துள்ள பனியன் பஜார் பகுதியில் மட்டும் ஏராளமான பனியன் கடைகள் இயங்கி வருகின்றன. அந்த பகுதியில் கடந்த ஜூன் 23ம் தேதி இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 50 கடைகள் முற்றிலும் தீயில் எரிந்து சேதமடைந்தன. மாநகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள விற்பனை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், பெரும் பரபரப்பு நிலவியது.

தீ மளமளவென அருகில் இருந்த கடைகளுக்கும் பரவியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது. தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்கள் அப்பகுதிக்கு விரைந்தன. இதனிடையே, தகவல் அறிந்ததும், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் நேரில் விரைந்து வந்தார். தானே களத்தில் இறங்கினார். அப்பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, பெரும் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதில் தீயணைப்பு வீரர்கள் மட்டுமின்றி அப்பகுதியை சேர்ந்த கடைக்காரர்களும் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

 

முதல் கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக ஒரு கடையில் ஏற்பட்ட தீ , மளமளவென அனைத்து கடைகளுக்கும் பரவியதாகக் கூறப்பட்டது. இதனால், யாரும் விபத்தின் பின்னணி குறித்து பொருட்படுத்தவில்லை. ஆனால், அதன் பின்னர் நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும் போது காதர்பேட்டையில் நடந்த தீ விபத்து, திட்டமிட்ட ஒன்றாக இருக்கக்கூடுமோ என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.

 

காதர்பேட்டையில் தீ விபத்துக்குள்ளான பகுதி, சுமார் 10 – 12 வருடங்கள் கருப்பையா என்பவரின் வசம் இருந்துள்ளது. அதன் பின் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, நவமணி ராஜேந்திரன் என்பவரின் வசம் கைமாறியுள்ளது. இவர், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சம்பந்தி என்றும் கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, தனது இடத்தில் உள்ள கடைகளை காலி செய்யும்படி நவமணி ராஜேந்திரன் கூறியுள்ளார். எனினும், வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என்ற கவலையில் கடை உரிமையாளர்கள் இருந்துள்ளனர்.

 

அதே நேரம், கடை உரிமையாளர்களுக்கு இடத்தை காலி செய்யும்படி அழுத்தம் கொடுத்தால், அவர்கள் வைத்துள்ள சங்கம் மூலம், பிரச்சனை பூதாகரமாகிவிடுமோ என்று நவமணி ராஜேந்திரன் கருதி, அந்த முடிவைக் கைவிட்டார். எனினும் வியாபாரிகள் யாரும் கடையை காலி செய்வதாகத் தெரியவில்லை. அவர்களை, எப்படி கடையை காலி செய்யச் சொல்வது என்று தெரியாமல் நவமணி ராஜேந்திரன் தீவிர யோசனையில் இருந்துள்ளார் . இந்த பின்னணியில் தான் தற்போது தீ விபத்து நடந்துள்ளது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

காதர்பேட்டையில் உள்ள கடைகளில் எப்போதும் சுமார் 3 – 5 லட்சம் ரூபாய் வரை சரக்குகள் இருப்பில் இருக்கும். தீ விபத்தில் சரக்குகள் எரிந்து சாம்பலானதால் வியாபாரிகள் நிலைகுலைந்து போயுள்ளனர். தகவல் அறிந்ததுமே, வியாபாரிகளுக்கு திருப்பூர் எம்.எல்.ஏ செல்வராஜ் கைகொடுத்து உதவியுள்ளார். கடைகளுக்கு தலா 50 ஆயிரம் வீதம் 50 கடைகளுக்கு நிவாரணம் வழங்கினார்.

 

அதே நேரம், இடத்தின் உரிமையாளர் நவமணி ராஜேந்திரன் இந்த விவகாரத்தில் எதையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார். பாதிக்கப்பட்ட வியாபாரிகளின் வாழ்வாதரம் கருதி அடுத்த சில நாட்களிலேயே ஷெட் போட்டுத் தந்திருக்க வேண்டும். ஆனால், அவர் அப்படியெல்லாம் அக்கறை காட்டவில்லை. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு காலி செய்யச் சொன்னவர், இப்போது ஷெட் அமைத்துத்தரவும் முன்வரவில்லை. தன் மீதான இந்த சந்தேகத்தை போக்க, இடத்தின் உரிமையாளர் நவமணி ராஜேந்திரன் , உடனடியாக தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு ஷெட் அமைத்து தந்து, தன் மீதான சந்தேகத்தைப் போக்க வேண்டும்; அல்லது, வியாபாரிகளுக்கு மாற்று இடம் கிடைக்கும் வரை இந்த இடத்திலேயே தற்காலிகமாக கடைகளை அமைத்து தொடர அனுமதிக்க வேண்டும் என்பதே வியாபாரிகள் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

எம்.எல்.ஏ செல்வராஜ்
எம்.எல்.ஏ செல்வராஜ்

உரிமையாளர்தான்
நடவடிக்கை எடுக்கணும்…

 

காதர்பேட்டை தீ விபத்து திருப்பூரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த துயரமான காலகட்டத்தில் இருந்து வியாபாரிகள் உடனடியாக மீண்டு வருவது கடினமான காரியம். அரசியல் தலைவர்களும், பனியன் கம்பெனி உரிமையாளர்களும் தான் வியாபாரிகளுக்கு இந்த நேரத்தில் உற்ற துணையாக இருக்க வேண்டும்.

 

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததுமே தெற்கு எம்.எல்.ஏ செல்வராஜ், வழக்கம் போல் மின்னல் வேகத்தில் வந்து மீட்புப் பணிகளை பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு தற்காலிக நிவாரண உதவி வழங்கினார்.

 

இது குறித்து எம்.எல்.ஏ செல்வராஜ் கூறுகையில், “தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததுமே சம்பவ இடத்திற்கு சென்று பார்த்து தேவையான உதவிகளைச் செய்துள்ளேன். பாதிக்கப்பட்ட கடைக்காரர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கடைகளை கட்டித் தர வேண்டியது கடமைதான். அதே நேரம், இது இடத்தின் உரிமையாளர் சார்ந்த விஷயம் என்பதால், மேற்கொண்டு தலையிட முடியவில்லை” என்றார்.

 

மேயர் தினேஷ்குமா
மேயர் தினேஷ்குமார்

திருப்பூர் மேயர் தினேஷ்குமாரிடம் கேட்டபோது, “காதர்பேட்டையில் தீ விபத்து நடந்த சமயத்தில் நான் வெளியூரில் இருந்தேன். இந்த விபத்து எதிர்பாராத சோகமான ஒன்று. அதே நேரம், பனியன் வியாபாரிகள் சம்மதித்தால், பனியன் சிட்டியை ஏற்படுத்தித் தர தயாராக இருக்கிறோம். அங்கு பனியன், பின்னலாடை வியாபாரங்களை வியாபாரிகள் மேற்கொள்ளலாம். இது குறித்த திட்டங்கள் கூட வகுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த விஷயத்தில் வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தவும் தயார். அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்” என்றார்.

 

அமைச்சர் சாமிநாதன்
அமைச்சர் சாமிநாதன்

இச்சம்பவம் குறித்து,  அமைச்சர் சாமிநாதன் கூறும்போது, திருப்பூர் காதர்பேட்டை தீவிபத்தில் சேதமான 50 கடைகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் அறிக்கை தயாரித்து அரசுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பார். வணிகர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் உடனே கடைகளை அமைக்கும் பணி தொடங்கப்படும்” என்றார்.


இப்போதைக்கு இல்லை…
நழுவும் இட உரிமையாளர்!

 

காதர்பேட்டையில் கடைகள் எரிந்து சாம்பலான பகுதியில் உரிமையாளர் நவமணி ராஜேந்திரனை, “குற்றம் குற்றமே” தரப்பில் அணுகி, அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டோம். அதற்கு அவரோ “இப்போதைக்கு ஒன்றும் செய்வதற்கு வாய்ப்பில்லை. இது குறித்து ஆலோசனை செய்துதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பிடி கொடுக்காமல் பதிலளித்து, நழுவினார்.

 

இதன் மூலம், காதர்பேட்டையில் பாதிப்புக்குள்ளான கடை உரிமையாளர்களுக்கு, இனி அரசுத் தரப்புதான் உரிய உதவிகளைச் செய்து மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 

மேலும் பல விரிவான தகவல்களுடன் வரும் இதழில் பாா்ப்போம்….


 


அல்லக்கையின் அழுகுணி ஆட்டம்! திருப்பூரில் சமூக ஆர்வலர் போர்வையில்  ‘சூனாபானா’ நரித்தனம்! நிருபர்களுக்கு சவால்விடுத்த பதிவை நீக்கி கோழைத்தனம்..

மோகன் கார்த்திக் குறித்த  “குற்றம் குற்றமே” இணையதளத்தில் செய்தி வெளியாகி திருப்பூரை பரபரப்பாக்கிய நிலையில், அல்லக்கைகள் சிலரின் அழுகுணி ஆட்டம், அவருக்கு தலைகுனிவை ஏற்படுத்துவதாக உள்ளது. நிருபர்களை சகட்டுமேனிக்கு விமர்சித்துவிட்டு,  பின்னர் பயந்து போய் பதிவை  நீக்கிவிட்ட கோழைகளுக்கு, பத்திரிகையாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

 

நமது “குற்றம் குற்றமே” வார இதழ் மற்றும் இணையதளம், என்றைக்கும் நீதியின் பக்கம், நேர்மையின் பக்கமே நின்று வருகிறது. விருப்பு வெறுப்பின்றி, குற்றம் புரிபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் செயல்பாடுகளை நெஞ்சில் துணிவோடு உரக்கச் சொல்வதே,   “குற்றம் குற்றமே”  இதழின் அசைக்கமுடியாத பலம்.  பணத்திற்கோ, மிரட்டலுக்கோ, அதிகார வர்க்கத்தின் அதட்டலுக்கோ ஒருபோதும் அடிபணிந்ததில்லை என்பதில் இருந்தே, கரைபடியாத கரம் என்பதை பத்திரிகை உலகமும்,  “குற்றம் குற்றமே” வாசகர்களும் நன்கு அறிவார்கள்.

 

விதிமீறல்கள், முறைகேடுகள்  எங்கு நடந்தாலும் அதை தோலுரித்துக் காட்டுவதோடு, அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்க போராடுவதில் “குற்றம் குற்றமே” உறுதியாக உள்ளது. இப்பணியில் எண்ணற்ற சவால்கள், மிரட்டல்கள் வந்தபோதும், கொண்ட கொள்கையில் இருந்து இம்மியளவும் விலகாது பயணித்து வருகிறது.

 

அவ்வகையில் தான், திருப்பூரை சேர்ந்த பிரபலமானவர் என்று அறியப்படும் மோகன் கார்த்திக் குறித்த செய்தியை,
‘விளம்பர’ மோகம் (ன்) காா்த்திக்!  தன்னார்வலர் கூட்டம் மூலம் பள்ளிக்கு பப்ளிசிட்டி.. திருப்பூர் மேயர் பெயரை வைத்து அட்ராசிட்டி..!!’ என்ற தலைப்பில்,  ‘குற்றம் குற்றமே’ இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.

 

அதில், “சுய விளம்பர நோக்கில், தனது பள்ளி வளாகத்தில் தனக்கு வேண்டப்பட்ட தன்னார்வலர்களை அழைத்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். இது, உண்மையான இன்னொரு தரப்பு சமூக ஆர்வலர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. மேயர் பெயரை பயன்படுத்தி வெளியிட்ட பதிவில், மேயரின் ஒப்புதல் இல்லாமலேயே விளம்பர நோக்கில் தனது பள்ளி வளாகத்தை சேர்த்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.  இந்த கருத்தை, எள்ளளவும் மோகன் கார்த்திக் தரப்பினர் மறுக்க முடியாது. இது அவர்கள் அறிந்ததே.

 

இக்கட்டுரை வெளியானதுமே சமூக வலைதளங்களில் “குற்றம் குற்றமே” இணையதளத்தை விமர்சித்தும், ஆதரித்தும் பதிவுகள் வெளியாகின. ஜனநாயக நாட்டில், செய்தியை விமர்சிக்கும் உரிமை எல்லா குடிமகன்களுக்கும் உள்ளது. அதே நேரத்தில், விமர்சனம் என்ற பெயரில் மோகன் கார்த்திக்கை குஷிப்படுத்தும் நோக்கில் அவரது அல்லக்கைகள் சிலரின் ஆட்டம்,  பலரை முகம் சுழிக்கச் செய்துள்ளது.

 

மோகன் கார்த்தியின் காலடியை சுற்றித் திரிந்து, தானும் ஒரு சமூக ஆர்வலர் என்று கூறிக் கொண்டு ஆதாயம் பார்க்கும் ஒருசில அல்லக்கைகளில் முக்கியமானவர், சூனா பானா என்று அறியப்படும் சுந்தரபாண்டியன் முக்கியமானவர்.  

 

சூனா பானா, தனது வாரிசை, மோகன் கந்தசாமியின் மகளது பள்ளியில் கட்டணமின்றி படிக்க வைத்து வருகிறாராம்.  அதற்கு நன்றிக்கடனான, அவரையே  சுற்றிச்சுற்றி வந்து ‘ஜால்ரா’போட்டு வருவதாக, இங்குள்ள பத்திரிக்கையாளர்கள் சிலர் நம்மிடம் கூறினர்.

 

இந்த ஆசாமி, ஒரு விளம்பரப் பிரியர். டுபாக்கூர் சமூக ஆர்வலர் என்று திருப்பூரின் உண்மையான சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அவா்களே வெளிப்படையாக கூறுவதுண்டு.  தனக்கென்று எந்தவொரு வேலையும்  இல்லாத நிலையில்,  பிடிமானத்திற்கு ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டார். வாழ்க்கையை காலம் தள்ள, மனைவியின் வருவாயை நம்பி இருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில்தான், தனது அந்தஸ்துக்காக சமூக ஆர்வலர் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு, சூனா பானா நாடகமாடத் தொடங்கினார்.  சமூக ஆர்வலர் என்ற பெயரில் திருப்பூர் பிரபலங்களுடன் நெருங்கி நின்று போட்டோ எடுத்துக் கொள்வது; அதை காட்டி மற்றவகளிடம் ‘எனக்கு அவரை தெரியும்; எனக்கு இவர் ரொம்ப தோஸ்து’ என்று கதைவிட்டு, தான் சொன்னால் எல்லாம் நடக்கும் என்ற பிம்பத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

 

வசமாக சிக்கிக் கொண்ட  சூனா பானா

 

இந்த போலி பிம்பம் மட்டுமில்லை; போலி பத்திரிகையாளராகவும் நடித்து வசமாக சிக்கிக் கொண்டுள்ளார்.  பிரபல செய்தித் தொலைக்காட்சி ஒன்றின் நிருபர் என்று கூறிக் கொண்டு,  பூமலூர் பகுதியில் ஒரு நிகழ்வின் போது கையும் களவுமாக சிக்கினார். பின்னர், அந்த தொலைக்காட்சி நிர்வாகம் எச்சரித்ததும், அரண்டு மிரண்டு போனார்.

அதன் பின்னர் தான், பத்திரிகையாளர்கள் என்றாலே, சூனா பானாவுக்கு ஆகாதாம்.  நம் வண்டவாளத்தை வெளிக் கொண்டுவந்த பத்திரிகையாளர்களை விடக்கூடாது என்று கங்கணம் கட்டி, தருணம் பார்த்து பத்திரிகையாளர்களை வசைபாடி தீர்த்தார்.

 

இதற்கு சமீபத்திய உதாரணம் ஒன்றை சொல்லலாம். தனது சமூகவலைதள பக்கத்தில், திருப்பூரின் பிரபல நாளிதழின்  வார இதழில் வெளியான ஒரு பகுதியை சுட்டிக்காட்டி, ”கிறுக்குத்தனமான கட்டுரைகளை போட்டு, தரத்தை கெடுத்துக்காதிங்க” என்று பதிவிட்டிருந்தார்.  தனக்கு முக்கியத்துவம் தரவில்லையே என்பதால், இதேபோல், பல தருணங்களில் பத்திரிகையாளர்களை பார்த்தாலே சூனா பானா-வுக்கு நடுக்க ஆரம்பித்துவிடுமாம்.  மோகன் கார்த்திக்கின் அல்லக்கை தானே என்பதால், பத்திரிகையாளர்களும் இதை பொருட்படுத்தவில்லை.

 

ஆனால், மோகன் கார்த்திக் குறித்த “குற்றம் குற்றமே” இணையதளச் செய்திக்கு பின்னர், சூனா பானா வெளியிட்ட பதிவுதான், மோகன் கார்த்திக்கிற்கு  கொஞ்சம் நஞ்சமிருந்த பெயரையும் கெடுக்கும் வகையில் அமைந்துவிட்டது.  அந்த பதிவில், ” பத்திரிக்கைகாரர்களுக்கு மணி கட்டுவது யார்?  இனி உன்னோட ஜாதகத்தையே தோலுரித்து தொங்க விடுறோம்.. வேடிக்கை மட்டும் பாரு?” என்ற ரீதியில் பகீரங்க மிரட்டல் விடுத்த சூனா பானாவுக்கு, என்ன பயம் வந்ததோ தெரியவில்லை; பின்னர் அந்த பதிவை நீக்கிவிட்டார்.

 

அதுமட்டுமின்றி, பொறுப்பான  நல்ல பிள்ளை போல, சமூக வலைதளப்பக்கத்தில், சமூக சேவை செய்து வரும் தம்மை, விமர்சனம் செய்து வருவதாக ஒரு பதிவை போட்டு, அனுதாபம் தேடிக் கொள்ள முற்பட்டுள்ளார்.  பதிவை போடும் முன்பே விளைவுகளை பற்றி யோசிக்காமல், கோழைத்தனமாக பதிவை நீக்கிவிட்டதாக, திருப்பூர் பத்திரிகையாளர்கள் சிலர் கிண்டலாக பேசிக் கொள்கிறார்.

 

சூனா பானாவின் கோழைத்தனமான பதிவுக்கு, திருப்பூர் பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இப்பதிவுக்கு அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   பிச்சை எடுப்பது போன்ற வார்த்தைகளுக்கு , நிச்சயம் தகுந்த விலையை தந்தாக வேண்டுமென்று அவர்கள் கூறியுள்ளனர்.

 

எது எப்படியானாலும்,  அல்லு சில்லுகளின் மிரட்டல்கள், “குற்றம் குற்றமே” வார இதழுக்கு கால் தூசிக்கு சமம்.  உருட்டல், மிரட்டல்களுக்கு எப்போதுமே அஞ்சியது கிடையாது. அதேநேரம், விமர்சனம் என்ற பெயரில், பதறிப்போய்  அவதூறுகளை  அள்ளி வீசியதன் மூலம், “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற கதையாக, தங்கள் பக்கம் அநீதி உள்ளதை ஒப்புக் கொண்டுள்ளனர் என்பது புலனாகிறது.  அதுபற்றி தீவிரமாக புலனாய்வு செய்து, முழு  விவரங்களும்  “குற்றம் குற்றமே” வார இதழில் அடுத்தடுத்து வெளியாகும்.


ஆக்கிரமிப்பு இடத்தில் கிட்ஸ் கிளப் பள்ளி!?

 

திருப்பூர் ஷெரீப் காலனியில் கிட்ஸ் கிளப் பள்ளி உள்ளது.  இப்பள்ளியின் சில பகுதிகள், நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும், நீர்வழிப்பாதையில் இருந்த குடியிருப்பாளர்களை விரட்டிவிட்டு, அங்கு கட்டிடம் கட்டப்பட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

 

சாரணர் மற்றும் சாரணியர் இயக்கத்தின் புரவலராக ஆளுனர், துணைப் புரவலராக  கல்வி அமைச்சர் மற்றும் மாவட்ட பொறுப்புகளில் பலர் நியமிக்கப்படுகின்றனர். சாரண சாரணியர் இயக்கத்தில் மோகன் கார்த்தி மகளுக்கு  பொறுப்பு வழங்கப்பட்ட பின்னணியில் விதிமீறல் உள்ளதா என்ற சந்தேகத்தை சிலர் கிளப்பியுள்ளனர்.

 

குழந்தைகளுக்கான இலவச  கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- 2009, பிரிவு 12(1) (சி)-ன்படி, சிறுபான்மை அல்லாத அனைத்துத் தனியார் பள்ளிகளிலும், நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.  கிட்ஸ் கிளப் பள்ளியில் இது பின்பற்றப்படுகிறதா? இக்கேள்விகளுக்கு விடைதேடி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் “குற்றம் குற்றமே” தரப்பில் கோரப்பட்டுள்ளது.  இது குறித்த முழு விவரங்கள், “குற்றம் குற்றமே” வார இதழில் விவரமாக வெளியிடப்படும்.


சூனா பானாவால் பாதித்தவரா நீங்கள்?

 

சமூக ஆர்வலர் என்ற போர்வையில் வலம் வரும் சுந்தர பாண்டியன் பின்னணியை அலசி ஆராய்ந்த போது, அவரால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. எனினும்,  சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் உள்ள நபரின்  அல்லக்கை என்பதால், சிலர் வெளிப்படையாக சொல்வதற்கு  தயங்குவது தெரியவந்துள்ளது.

 

அத்தகையவர்கள், தாராளமாக “குற்றம் குற்றமே” வார இதழை தொடர்பு கொள்ளலாம். உரிய ஆதாரங்களுடன் தொடர்பு கொண்டால், அதை விசாரித்து ஆதாரங்களுடன் வெளியிட தயாராக உள்ளோம். உங்களது பெயர் உள்ளிட்ட விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.


 


திடீர் “விசிட்”- அதிரடி திட்டங்கள் தென்மண்டலத்தை கைப்பற்ற இபிஎஸ் அதிரடி வியூகம் ஓரம்கட்டப்படுகிறாரா ஓபிஎஸ்?

திமுகவிற்குள் இபிஎஸ்-ஓபிஎஸ் நிழல்யுத்தம் மீண்டும் நிஜத்திற்கு வருகிறது. வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? இதுதான் தற்போதைய தமிழக அரசியலின் “டாக் ஆஃப் தி டவுன்” சங்கதி.

 

இபிஎஸ் ஒரு முறை என்றால், ஓபிஎஸ் மூன்று முறை முதல்வர் பதவியை ருசித்தவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின்னர் சசிகலாவுடனான பிணக்கே ஓபிஎஸ் முதல்வர் பதவிக்கான வாய்ப்பை இழக்கச் செய்தது. சசிகலாவிடம் சரியாக காய்நகர்த்தி அந்தப் பதவியை இபிஎஸ் தக்கவைத்துக் கொண்டார்.

 

முதல்வர் பதவிக்கு யார்?

சசிகலா- இபிஎஸ்-க்கு எதிராக ஜெயலலிதாவின் சமாதியில் அமர்ந்து தர்மயுத்தம் நடத்தி துணை முதல்வர் பதவியையும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியையும் தக்கவைத்துக் கொண்டார் ஓபிஎஸ். ஆட்சியில் அதிகாரம் இபிஎஸ்-க்கு என்றால், கட்சியில் அதிகாரம் ஓபிஎஸ்-க்குத்தான். எந்த தேர்தலில் யாரை கட்சியின் சார்பில் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பது கட்சித்தலைமையின் கையில்தான் இருக்கிறது என்பதால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் பதவிக்கு போட்டியிடப்போவது யார்? என்ற கேள்வி தமிழகத்தை வளைய வருகிறது.

 

 

ஓபிஎஸ்-அரசியல் சதுரங்கம்

இபிஎஸ் முதல்வர் அரியணையேறியதும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் இபிஎஸ் அணிக்கு தாவிவிட்டனர். இன்னும் பலர் மறைமுகமாக இபிஎஸ்-ஐ ஆதரித்து வருகின்றனர். ஜெயலலிதாவிடம் நேரடி அரசியல் பயின்ற ஓபிஎஸ் தனது பாணியில் அரசியல் சதுரங்கத்தை ஆடத்தொடங்கியிருக்கிறார். தனது மூத்த மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தை எம்.பி.யாக்கி மத்திய அரசுடனான இணக்கத்திற்கு அனுப்பிவிட்ட அவர், தற்போது தனது இரண்டாவது மகன் ஜெயபிரதீப்பை மாநில அரசியலுக்கு தயாராக்கி வருகிறார்.

 

வாயைக் கொடுத்து புண்ணாக்கிக் கொண்ட கதையாக ஜெயபிரதீப்பை பற்றி வாய்க்கு வந்ததெல்லாம் பேசி அவரை வளர்த்துவிட்டு அவரது அரசியல் பிரவேசத்திற்கு அடித்தளமிட்ட பெருமையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டதுதான் மிச்சம். தற்போது உதயநிதி ஸ்டாலினை விட ஜெயபிரதீப் அதிகப்படியாக வைரலாகி வருகிறார்.

 

மாநில அரசியலில் காய் நகர்த்த நம்பகத்தன்மையான ஒரு இடத்தை மகனுக்காக ஏற்படுத்திக் கொடுத்து வருகிறார் ஓபிஎஸ். இதற்கான திமுக எதிர்ப்பு அரசியல், அதிமுக உட்கட்சி அரசியல் வியூகங்களையும் அவரே வகுத்துக் கொடுக்கிறார். எம்ஜிஆர்-ஜெயலலிதா சமாதிகள் தினமும் மலர்களால் அலங்கரிப்பு, மனிதநேய பணிகள் என ஜெயபிரதீப் அரசியல் தூள்பறக்கிறது. ஜெயபிரதீப்பின் இந்த திடீர் அரசியல் விஸ்வரூப நடவடிக்கைகள் இபிஎஸ் தரப்புக்கு கிலியை ஏற்படுத்தி விட்டது.

 

இபிஎஸ்- சக்கர வியூகம்

இதனால் கடந்த 3 ஆண்டுகளாக இலைமறை காய்மறையாக புகைந்து கொண்டிருந்த நிழல் யுத்தம், கொரோனா பேரிடர் காலத்தில் விம்மி வெடித்துள்ளது. தென்மண்டலங்களில் உள்ள 9 மாவட்டங்களிலும் ஓபிஎஸ்-க்கு செல்வாக்கு கணிசமாக அதிகரித்திருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் புள்ளி விவரங்களை அளித்துவிட்டனர்.

 

எட்டுவழிச்சாலை பிரச்னையால் ஏடாகூட இடியாப்ப சிக்கலில் தவிக்கும் இபிஎஸ் தனது செல்வாக்கை நேர்செய்ய கொங்கு மண்டலத்தைத் தாண்டி, பாண்டிய (தென்) மண்டலத்தில் ஓபிஎஸ் கோட்டையை சரிக்க தனது சக்கர வியூகத்தை வியாபிக்க தொடங்கியிருக்கிறார்.

 

கொரோனா நோய் தடுப்பு மீட்பு பணிகள் ஆய்வு என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை வடிவமைத்து, கடந்த ஜூலை 15ம் தேதி கொங்கு மண்டலத்தில் பயணத்தை தொடங்கி திடீரென தென்மண்டலத்திற்கு பயணத்தை திசை திருப்பியுள்ளார்.

“நூற்றுக்கணக்கான கோடிகளில் நலப்பணி..”

செல்கிற வழிகளிலெல்லாம் நூற்றுக்கணக்கான கோடிகளில் முடிவுற்ற நலப்பணிகளையும், புதிய திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டுதலையும் தொடங்கி வைத்து தென் மாவட்ட நிர்வாகிகள், வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்க பிரயத்தனம் செய்து வருகிறாராம். இந்த சுற்றுப்பயணத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ்-க்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவரது ஆதரவாளர்கள் கொதித்துப் போய் உள்ளனர்.

 

இந்த குற்றச்சாட்டை நிரூபிப்பது போன்றதான போஸ்டர்கள் இபிஎஸ் வருகையின் போது மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பளிச்சிட்டன. கொரோனா பேரிடர் காலத்தை பொருட்படுத்தாமல் இபிஎஸ் மேற்கொண்டுள்ள இந்த திடீர் சுற்றுப்பயணம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என அரசியல் விமர்சகர்களும் குறிப்பிட தவறவில்லை.

 

“இபிஎஸ்-ஓபிஎஸ் பனிப்போர்”

இந்த நிலையில் கட்சி அதிகாரத்தை கையில் வைத்துள்ள ஓபிஎஸ் தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் சரிபாதி தனது ஆதரவாளர்களை களமிறக்க முடிவு செய்து விட்டார். இதனால் ஊரடங்கில் அமைதியாக உள்ள தமிழகத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் பனிப்போர் உள்ளங்கை நெல்லிக்கனியாக வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது.

 

ர.ர.க்கள் உற்சாசம்!

சமூக வலைதளங்களிலும் ஓபிஎஸ் ராணுவம், ஓபிஆர் ராணுவம் என்ற பெயர்களிலெல்லாம் ஓபிஎஸ் ஆதரவு மற்றும் அரசியல் செய்திகள், படங்கள் மற்றும் வீடியோக்களை தெறிக்க விடுகின்றனர். இபிஎஸ் தரப்பிலும் இதற்கான தனியாக தொழில்நுட்பப் படை உருவாக்கப்பட்டு படுஜரூராக பணிகள் நடந்து வருகின்றன. மக்கள் மத்தியிலும் அதிமுக அரசியல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த பரபரப்பிலும், சலசலப்பிலும் திமுக முன்னெடுக்கும் திட்டங்கள் மங்கிப்போய் விடுவது உ.பி.க்களை உற்சாகமிழக்க வைத்துள்ளது. ர.ர.க்கள் உற்சாசத்தில் மிதக்கின்றனர்.

 

இந்த பிரச்னைகளுக்கிடையே சசிகலாவின் விடுதலை பரபரப்பாக பேசப்பட்டாலும், அவரது மீள்பிரவேசம் அதிமுகவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது சந்தேகம்தான். அவரது சிறைவாசத்திற்கு பிந்தைய இடைவெளியில் தென்மாவட்டத்தில் ஓபிஎஸ் மீது அதிருப்தி கொண்டிருந்த அவரது சமுதாயம் சார்ந்தவர்களை கிட்டத்தட்ட நெருக்கிப்பிடித்து சமரசத்திற்குள் கொண்டு வரும் முயற்சி பலனளிக்கத் தொடங்கியிருக்கிறது.

Subscription

“ஆடுபுலி ஆட்டம்”

அதேபோல் அந்த சமுதாயத்திற்கு நிகராக உள்ள நாடார் சமுதாயத்தினரின் கோரிக்கைகளையும் நிறைவேற்றி அவர்களது ஆதரவையும் பெற ஓபிஎஸ் தரப்பு படாதபாடு பட்டு வருகிறது. இதனால் நாடார்களின் முக்கிய கோரிக்கையான பனை வெட்ட தடைச்சட்டம், கள்ளுக்கான தடை நீக்கம், பனை பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கு உத்திரவாதம் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் அமைதியாக காட்சியளித்த ஓபிஎஸ்-ன் இந்த அதிரடி ஆடுபுலி ஆட்டத்தைக் கண்டு இபிஎஸ் தரப்பு மிரட்சியில் உள்ளது.


“எரிச்சலின் உச்சத்தில் ஸ்டாலின்!”

இத்தனை அதிரிபுதிரி அரசியல் சாணக்கியத்தனங்களுக்கு மத்தியில், தமிழகத்தில் யாருக்கும் திறமையே இல்லாதது போலவும், அரசியல் தந்திர வித்தைகளை தமிழர்கள் யாரும் அறிந்திராதது போலவும், பாவனை செய்து குருட்டுப் பூனை விட்டத்துல ஏறின கதையாக சில நூறு கோடிகளை கொட்டிக் கொடுத்து வடமாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்த பிரசாத் கிஷோர் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் அதிமுகவிற்கு சாதகமாகி விடுவதால் மு.க.ஸ்டாலின் எரிச்சலின் உச்சத்திற்கே சென்று விட்டார்.

 

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாகி விட்டது அவரது தற்போதைய நிலைமை. காலம் காலமாக வெற்றி வாய்ப்பிற்காக கூட்டணி தர்மத்தை மட்டுமே கடைபிடிக்கும் கட்சிகள் அரசியல் ஆடுகளத்தில் வெற்றிவாய்ப்புள்ள கட்சித்தலைமையை எதிர்நோக்கி பார்வையை திருப்பியுள்ளனர்.


“ஆச்சரியமில்லை?”

போகிற போக்கைப்பார்த்தால் ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற பழமொழியை மாற்றி கூத்தாடிக்கு ஆப்பு வைத்து விட்டு ரெண்டுபட்டவர்கள் மீண்டும் அரியணை ஏறி ஆட்சியை பங்கிட்டுக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதாக தெரிவிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.


தமிழகத்தில் இன்று 106 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 1075 ஆனது..!! திருப்பூரில் ஒரே நாளில் 35 பேருக்கு பாதிப்பு!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று ஒரே நாளில் 106 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிப்பு எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் திருப்பூரில் மட்டும் அதிகபட்சமாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று வரை 969 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, உயிரிழப்பும் 10 ஆக இருந்தது. இந்நிலையில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 

தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 969 லிருந்து 1075 ஆக அதிகரித்துள்ளது.

 

கொரோனா காரணமாக தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 11 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா அறிகுறியுடன் 39,041 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும்,162 பேர் அரசு முகாம்களிலும் உள்ளனர்.

 

58,189 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 10,655 மாதிரிகள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் 1075 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 8 மருத்துவர்களும் அடங்குவர்.

 

தமிழகத்தில் தற்போது துரித கொரோனா பரிசோதனை செய்ய போதிய கருவிகள் உள்ளன. தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்வோருக்கான கட்டணச் செலவை தமிழக அரசே ஏற்கும் என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

 

இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் திருப்பூரில் அதிகபட்சமாக 35 பேரும், கோவையில் 22 பேரும், சென்னையில் 18 பேரும் அடங்குவர் எனவும் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

 

திருப்பூரில் ஏற்கனவே 25 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 35 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. பின்னலாடை தொழிலில் இந்தியாவில் முதன்மை நகரமான திருப்பூருக்கு வெளிநாட்டு பிரதிநிதி கள் பலரும் அடிக்கடி வருகை தருவது வழக்கம்.

 

இதேபோல் திருப்பூர் தொழில் அதிபர்களும், உயர் நிர்வாகிகளும் வெளிநாட்டுப் பயணம் செய்வது சகஜம். அது மட்டுமின்றி திருப்பூரில் வெளிமாநில தொழிலாளர்களும் ஆயிரக்கணக்கில் பணியாற்றி வந்தனர். இதனால் கொரோனா பாதிப்பும் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் திருப்பூர் வாசிகள் உறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

அது மட்டுமின்றி திருப்பூரைச் சுற்றியுள்ள கோவையில் 119 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 64 பேரும் பாதிக்கப்பட்டு, சென்னைக்கு அடுத்தபடியாக, இந்த மாவட்டங்களும் 2, 3, 4 ஆகிய இடங்களைப் பிடித்துள்ளதால் கொங்கு மண்டலமே கொரோனா அச்சத்தில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.