எடப்பாடி அணியில் டிடிவி! * தமிழக தேர்தல் களத்தில் திடீர் திருப்பம்.. * அமித்ஷா வியூகத்தால் பலம் பெறும் என்டிஏ!

மிழக அரசியல் களத்தில் திடீர் திருப்பமாக, அதிமுக – பாஜக கூட்டணியில் அமமுக இணைந்துள்ளது. எங்களுக்குள் நடப்பது பங்காளி சண்டைதான் என்று கூறிய அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன், விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

தமிழக அரசியல் வானிலையில் திடீர் திடீரென மாற்றங்கள், சூறாவளிகள் ஏற்பட்டு வருகிறது. ‘துரோகி’ என்று எடப்பாடி பழனிசாமியை வசைபாடியை டிடிவி தினகரன், இன்று அவரை ‘பங்காளி’ என்று உரிமையோடு கூறி, பியூஷ் கோயல் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். நேற்று வரை மாறி மாறி மல்லுக்கட்டியவர்கள், இனி ஒரே மேடையில் கைகோக்கப் போகிறார்கள்.

 

ஆம், அதிமுக – பாஜக கூட்டணியில் அமமுக அதிகாரப்பூர்வமாக இணைந்துவிட்டது. “எங்களுக்குள் நடப்பது பங்காளி சண்டைதான்; விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை” எனத் தத்துவம் பேசி, எடப்பாடி தலைமையிலான அதிமுக – பாஜக கூட்டணியின் கரங்களை இறுக்கியிருக்கிறார் டிடிவி தினகரன். இது வெறும் கூட்டணியா அல்லது டெல்லி போட்ட கணக்கா?

செப்டம்பர் மாதத்தில், “யாருடனும் சமரசம் இல்லை” என என்டிஏ கூட்டணியிலிருந்து வெளியேறியபோது தினகரன் காட்டிய வேகம் இருக்கிறதே… அது தனி ரகம்! எடப்பாடி பழனிசாமியை ‘துரோகி’ எனத் தாளித்து எடுத்தார். மறுபுறம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் ரகசியப் பேச்சுகள், பொதுமேடையில் ‘தளபதி’க்கு பாராட்டு என 2026-க்கான ரூட்டை மாற்றியமைக்கப் பார்த்தார்.

ஆனால், “விஜய் தலைமையில் 3-வது அணி அமைந்தால் அதுவே மாற்று” எனத் தினகரன் போட்ட கணக்கு, கள யதார்த்தத்தில் வேறாக இருந்தது. விஜய் தரப்பிலிருந்து வந்த ‘சைலண்ட்’ ரெஸ்பான்ஸ் தினகரனை யோசிக்க வைத்தது. “என்னப்பா இது… களப்பணியே இல்லையே, எல்லாம் ‘ஒர்க் பிரம் ஹோம்’ அரசியலாக இருக்கிறதே?” என அலுத்துக்கொண்ட தினகரனுக்கு, மீண்டும் டெல்லி ரூட் வெளிச்சம் தந்தது.

இந்தத் திருப்பத்தின் பின்னணியில் இருப்பவர் அரசியல்‘சாணக்கியர்’ அமித்ஷா. எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருந்தபோது, “தனித்தனியாக நின்றால் திமுகவை வீழ்த்த முடியாது; அமமுகவை உள்ளே கொண்டுவாருங்கள்” என அமித்ஷா தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட ‘அட்வைஸ்’, எடப்பாடியை நெளிய வைத்தது. முதலில் முரண்டு பிடித்தாலும், வெற்றி இலக்கைக் கருதி அரைமனதுடன் “சரிங்க” எனத் தலையாட்டினார் எடப்பாடி. அடுத்த சில நாட்களில் தினகரனுக்கும் டெல்லி அழைப்பு பறந்தது.

டெல்லியில் நடந்த அந்த ‘உயர்நிலை’ சந்திப்பில், தொகுதிப் பங்கீடு பற்றி காரசாரமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. அமமுக தரப்பில் இரட்டை இலக்கத் தொகுதிகள் கேட்கப்பட, எடப்பாடியோ கஞ்சத்தனம் காட்டியிருக்கிறார். ஆனால், பியூஷ் கோயல் தமிழகம் வந்ததும் நிலைமை மாறியது. சென்னையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், “அதிமுக கூட்டணியில் இணைகிறோம்” எனத் தினகரன் அறிவித்தபோது தொண்டர்களே ஒரு நிமிடம் திகைத்துத்தான் போனார்கள்.

 

​“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்” – செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தத் திருக்குறளைத் தினகரன் உதிர்த்தபோது, அங்கே அரசியல் நையாண்டி தாண்டவமாடியது. எடப்பாடியை ‘இன்னா செய்தவர்’ லிஸ்டில் வைத்துக்கொண்டே, அவருக்கு ‘நன்னயம்’ செய்யத் தயாராகிவிட்டார் டிடிவி.

சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், புதன் கிழமை காலை பியூஷ் கோயல், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் முன்னிலையில் இந்த ‘பங்காளி’ உடன்படிக்கை கையெழுத்தானது. ஆண்டிப்பட்டி உள்ளிட்ட தினகரன் விரும்பிய 7 முதல் 10 தொகுதிகளை ஒதுக்க எடப்பாடி சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தக் கூட்டணியின் பலம் என்ன? கடந்த தேர்தலில் அதிமுகவின் வெற்றியை 27 தொகுதிகளில் தட்டிப்பறித்தவர் தினகரன். குறிப்பாக, தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளைத் தினகரன் பிரித்ததே அதிமுகவின் வீழ்ச்சிக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. இப்போது அந்த ஓட்டுகள் சிதறாமல் ஒரே கூடையில் விழுந்தால், அது திமுகவுக்குப் பெரும் சவாலாக அமையும் என்பதுதான் அமித்ஷாவின் மாஸ்டர் பிளான்.

டிடிவியை இழுத்துவிட்ட கையோடு, அடுத்து பிரேமலதாவின் தேமுதிகவையும் வளைக்கப் பியூஷ் கோயல் வலை விரித்துள்ளார். ஏற்கெனவே பாமகவின் அன்புமணி ராமதாஸ் உள்ளே இருக்கும் நிலையில், தேமுதிகவும் வந்துவிட்டால், ‘மெகா கூட்டணி’ ரெடி! வரும் 23-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் சென்னை பொதுக்கூட்டத்தில், இந்தத் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் தோன்றப்போகும் காட்சி, தமிழக அரசியலின் ‘கிளைமாக்ஸ்’ நெருங்குவதைக் காட்டுகிறது.

 

​பங்காளிகள் இணைந்திருக்கிறார்கள்… பகைவர்கள் மிரண்டிருக்கிறார்களா என்பது தேர்தல் முடிவில்தான் தெரியும்!


கோட்டைவிட்ட ஓ.பி.எஸ்..கொத்திக் கொண்ட திமுக! டெல்டா சிங்கம் திமுகவில் ஐக்கியம்!

ஞ்சாவூர் என்றாலே நினைவுக்கு வரும் அரசியல் முகங்களில் ஒருவரான ஆர். வைத்திலிங்கம், இன்று (ஜனவரி 21) அண்ணா அறிவாலயத்தின் வாசலில் காலடி எடுத்து வைத்தது, தமிழக அரசியலில் மற்றொரு திருப்பமாக பார்க்கப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் ‘நிழல்’ போல இருந்தவர்கள், இப்போது ‘சூரியன்’ வெளிச்சத்தைத் தேடித் தஞ்சமடைந்துள்ளனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, ஒரு மாற்று சக்தியாகத் தங்களைக் காட்டிக்கொள்ளப் போராடிய ஓ.பி.எஸ் அணி, இன்று கிட்டத்தட்ட ‘காலியான கூடாரமாக’ மாறியிருக்கிறது.

டெல்டா அரசியலில் ஒரு சூறாவளி!

வைத்திலிங்கம் – இந்த ஒரு பெயர் தஞ்சை மற்றும் டெல்டா மாவட்ட அ.தி.மு.க-வினருக்குப் பலமான அடையாளம். 2011-16 காலகட்டத்தில் அமைச்சராக வலம் வந்தவர், ஜெயலலிதாவால் ‘ஐவர் குழு’வில் ஒருவராக மதிக்கப்பட்டவர். இபிஎஸ்-ஓபிஎஸ் மோதல் வெடித்தபோது, எடப்பாடியின் ஆளுமையை ஏற்க முடியாமல் ஓபிஎஸ் பக்கம் நின்றார். ஆனால், காலம் அவருக்குக் கொடுத்த பரிசு ‘நீக்கம்’.

 

இதையடுத்து, உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் ஊர் ஊராகச் சுற்றியும், எடப்பாடி போட்ட ‘எண்ட் கார்டை’ அழிக்க முடியவில்லை. இப்போது 2026 தேர்தல் நெருங்கும் வேளையில், தனித்து நின்றால் தத்தளிக்க நேரிடும் என்பதை உணர்ந்த வைத்திலிங்கம், புத்திசாலித்தனமாக உதயசூரியனை நோக்கி நடைபோட்டுவிட்டார்.

 

​திமுகவில் இணைவதற்கு முன்பாக, இன்று காலை சென்னை கோட்டைக்கு சென்ற வைத்திலிங்கம், சபாநாயகர் அப்பாவுவைச் சந்தித்து தனது ஒரத்தநாடு எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததார். இதன் மூலம், ‘தான் ஒரு தார்மீக அரசியல்வாதி’ என்ற பிம்பத்தை அவர் நிலைநிறுத்த முயன்றிருக்கிறார். ஏற்கனவே மனோஜ் பாண்டியன் ராஜினாமா செய்த நிலையில், இப்போது வைத்திலிங்கமும் வெளியேறியிருப்பது ஓபிஎஸ் அணிக்கு விழுந்த பேரிடி.

​ஏன் இந்த அணி மாற்றம்? திரைமறைவுத் திட்டங்கள்!

வைத்திலிங்கம் ஏன் திடீரென திமுகவில் இணைந்தார் என்று, குற்றம் குற்றமே தரப்பில், அறிவாலய வட்டாரங்களில் விசாரித்தோம். அப்போது சில சுவாரசியமான தகவல்கள் கிடைத்தன. தஞ்சை மாவட்டத்தில் திமுக வலுவாக இருந்தாலும், அங்கிருக்கும் செல்வாக்கு மிக்க சமூக வாக்குகளை மொத்தமாக அள்ள ஒரு ‘பலம்’ தேவைப்பட்டது. வைத்திலிங்கத்தை உள்ளே இழுப்பதன் மூலம் அந்த வெற்றிடத்தை நிரப்ப ஸ்டாலின் திட்டமிட்டு காய்களை நகர்ட்தினார்.

அதேநேரம், தவெக தலைவர் விஜய் பக்கம் செல்லவும் வைத்திலிங்கத்திற்கு அழைப்புகள் வந்தனவாம். சமீபத்தில் அதிமுகவில் இருந்து பிரிந்து தவெக-வில் இணைந்த செங்கோட்டையன், ‘பத்து தொகுதிகளை உங்கள் கட்டுப்பாட்டில் தருகிறோம், இங்கே வாருங்கள்’ எனத் தூது விட்டதாகப் பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், ‘நிச்சயமில்லாத எதிர்காலத்தை விட, நிச்சயமான அதிகாரம் மேல்’ என முடிவெடுத்த வைத்திலிங்கம், திமுகவே மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற கணிப்பில் அறிவாலயத்தை நோக்கி நகர்ந்துவிட்டார்.

 

திமுகவில் இணைந்த பின்பு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அளித்த பேட்டியில், “அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படுவது சிறந்ததாக இல்லை. முதலமைச்சரின் செயல் பாட்டை தமிழக மக்கள் போற்றுகிறார்கள் மக்களின் மனதில் தமிழ்நாடு முதல்வர் இருக்கிறார். இதனால் திமுகவில் இணைந்துள்ளேன்.

 

அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை சர்வாதிகாரமாக செயல்படுகிறது. திமுக தான் தாய் கழகம். என்னை தனிப்பட்ட முறையில் அதிமுகவுக்கு சேர அழைத்தார்கள் நான் சேர தயாராக இல்லை” என்று வைத்திலிங்கம் தெரிவித்தார்.

வெல்லமண்டி முதல் குன்னம் வரை…

வைத்திலிங்கம் மட்டுமின்றி, திருச்சி மாவட்டத்தின் முக்கிய முகமான அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் குன்னம் ராமச்சந்திரன் ஆகியோரும் திமுகவில் ஐக்கியமாகி உள்ளனர். இதன் மூலம் திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் அ.தி.மு.க-வின் பழைய வாக்கு வங்கியைச் சிதைக்கத் திமுக கச்சிதமாகக் காய் நகர்த்தியுள்ளது. ஓபிஎஸ்-ஸை நம்பி அரசியலில் இனி ஒன்றும் செய்ய முடியாது என்கிற எதார்த்தமே இவர்களை இந்த முடிவை எடுக்கத் தூண்டியிருக்கிறது.

தனித்து விடப்பட்ட பன்னீர்! அடுத்தது தாமரை?

ஒரு காலத்தில் ஜெயலலிதாவால் மூன்று முறை முதல்வர் நாற்காலியில் அமர்த்தப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், இன்று தன் அணியின் முக்கிய தளபதிகளை ஒவ்வொன்றாக இழந்துவிட்டுத் தனி மரமாக நிற்கிறார். சட்டமன்றத்தில் இவருடன் இருந்த 4 எம்.எல்.ஏ-க்களில் இப்போது மிஞ்சியிருப்பது ஐயப்பன் மட்டுமே.

 

​தற்போதைய சூழலில், ஓபிஎஸ்-ஸுக்கு இருக்கும் ஒரே பிடிமானம் பாஜக மட்டுமே. வரும் 23-ம் தேதி செங்கல்பட்டில் நடைபெறவிருக்கும் பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில், ஓபிஎஸ் முறைப்படி பாஜகவில் இணையப்போவதாகத் தகவல்கள் தீயாய்ப் பரவுகின்றன. ‘அதிமுகவின் அடையாளம்’ என்ற போர்வை இனி செல்லாது என்பதால், தேசியக் கட்சியின் நிழலில் ஒதுங்க அவர் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.


முடிவற்ற குழப்பம்… தெளிவான இலக்கு!

தமிழக அரசியல் களம் 2026-ஐ நோக்கி ஒரு பெரும் சுழலில் சிக்கியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஒருபுறம், ஆளுங்கட்சியான திமுக மறுபுறம், விஜய்யின் தவெக மூன்றாவது முனையாக உருவெடுத்துள்ளது. இந்த மும்முனைப் போட்டியில், செல்வாக்கு மிக்க மாஜிக்களை வளைப்பதில் திமுக முந்திக்கொண்டிருக்கிறது. வைத்திலிங்கம் போன்றவர்களின் வருகை டெல்டாவில் திமுகவை மேலும் பலப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

ஆனால், தன் வாழ்நாள் முழுவதும் எடப்பாடியை எதிர்ப்பதையே நோக்கமாகக் கொண்ட ஓபிஎஸ், பாஜகவில் இணைவதன் மூலம் தனது அரசியல் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தைத் தக்கவைத்துக் கொள்வாரா? அல்லது மற்றுமொரு ‘துணை’யாகவே முடிந்துவிடுவாரா? என்பதை ஜனவரி 23-ம் தேதி மோடி மேடை தீர்மானிக்கும்!


 


வசமாக சிக்கிய விஜய்? * கரூர் விவகாரத்தில் சிபிஐ கடும் நெருக்கடி..* தேர்தலை சந்திக்க தயங்கும் தவெகவினர்?

ரூர் விவகாரத்தில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான தவெக தலைவர் விஜய்யிடம் கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டதால், அவர் ஆடிப்போயுள்ளார். குற்றப்பத்திரிகையில் அவர் பெயரை சேர்த்து, அவரது தேர்தல் பணியை பாஜக முடக்க திட்டமிட்டுள்ளதாக தவெகவினர் புலம்புகின்றனர். விஜய்யை மட்டுமே நம்பியுள்ள தவெக, வரும் தேர்தலை எப்படி சந்திக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. தவெகவினரும் உற்சாகமிழந்து காணப்படுகின்றனர்.

 

கோலிவுட்டின் வசூல் சக்ரவர்த்தியாக வலம் வந்த தளபதி விஜய், இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தின் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து, அவரது ரசிகர்கள் பலரும் மனம் நொந்து புலம்புகின்றனர். ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் கட்சித் தொடங்கி, கோட்டையைப் பிடிக்கத் துடித்த விஜய்க்கு, கரூர் விவகாரம் இப்போது கழுத்தைச் சுற்றும் கயிறாக மாறியிருக்கிறது. “விஜய் வசமாகச் சிக்கிக் கொண்டார்” என்று ஒருபுறம் ஆளுங்கட்சி தரப்பு சொல்ல, “விஜய்யை மிரட்டிப் பணிய வைக்கப் பார்க்கிறது பாஜக” என மறுபுறம் திமுக தரப்பு குற்றம்சாட்டுகிறது.

 

கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் நடந்த தவெக பிரச்சாரப் பொதுக்கூட்டம், ஒரு அரசியல் மாற்றத்துக்கான தொடக்கமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்று நடந்த கூட்ட நெரிசலில் 41 உயிர்கள் காற்றில் கரைந்து போனது, ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் உலுக்கியது. “அந்த விவகாரம் ஒருவழியாக முடிந்துவிட்டது” என்று விஜய் தரப்பு நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள், உச்ச நீதிமன்றத்தின் சாட்டை அடியால் வழக்கு சிபிஐ-க்கு கைமாறியது. அங்கிருந்துதான் விஜய்யின் உண்மையான ‘க்ளைமாக்ஸ்’ காட்சிகள் ஆரம்பமாகின.

 

ஜனவரி 12-ம் தேதி நடந்த முதல் கட்ட விசாரணைக்குப் பிறகு, ஜனவரி 19 அன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் மீண்டும் ஆஜரானார் விஜய். காலை 11 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடந்த அந்த ஐந்து மணி நேர ‘கிடுக்கிப்பிடி’ விசாரணையில், அதிகாரிகள் கேட்ட கேள்விகள் விஜய்யை நிலை குலையச் செய்ததாக டெல்லி வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

“மக்களின் உயிருக்கு யார் பொறுப்பு?” என்ற ஒற்றைக் கேள்வியை மையமாக வைத்து, சிபிஐ அதிகாரிகள் கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளனர். குறிப்பாக, ஏழு மணி நேரம் தாமதமாகப் பிரச்சார வாகனத்தில் வந்தது ஏன்? கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடுகிறது என்ற தகவல் உளவுத்துறை மூலமாகத் தெரிந்தும், பிரச்சார வாகனத்தை முன்னேற்றிச் சென்றது ஏன்? என வரிசையாகக் கேட்ட கேள்விகளுக்கு விஜய்யிடம் தெளிவான பதில்கள் இல்லையாம். பல கேள்விகளுக்கு “கால அவகாசம் தேவை” என்று கேட்டுவிட்டு விஜய் வெளியே வந்திருப்பது, தவெக கூடாரத்தையே கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

இன்னொரு பக்கம், விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் தராமல் இழுத்தடிப்பது வேறு, விஜய்க்கு பெரும் குடைச்சலாக உள்ளது. இது, பாஜகவின் திட்டமிட்ட அழுத்தம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஓசூரில் பேசும்போது, “கூட்டணிக்காக விஜய்யை பாஜக மிரட்டுவது வெளிப்படையாகத் தெரிகிறது” என்று போட்டு உடைத்தார். அதாவது, ‘கூட்டணிக்கு வா, அல்லது வழக்கைச் சந்திக்கத் தயாராகு’ என்பதுதான் கமலாயம் போடும் ஸ்கெட்ச் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

 

தவெக இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் போன்றவர்கள், “விஜய் விட்னஸ் சம்மன் அடிப்படையில் தான் ஆஜரானார், அவர் முழு ஒத்துழைப்பு தருகிறார்” என்று சமாளித்தாலும், கட்சியினரின் உற்சாகம் வடிந்து போயிருக்கிறது. விஜய்யை மட்டுமே ஒரு ‘மேஜிக் மேன்’ போல நம்பி வந்த தொண்டர்கள், இப்போது அவர் சிபிஐ விசாரணைக்கே நேரம் ஒதுக்குவதால், தேர்தல் பணிகள் என்னாகும் என்று மலைத்துப் போயுள்ளனர்.

விமர்சகர்களோ இன்னும் காரமாகப் பேசுகிறார்கள். “விஜய்யின் அரசியல் நடவடிக்கை என்பது ‘Work From Home’ மாடல் போலவே இருக்கிறது. அவ்வப்போது அறிக்கை விடுவதோடு முடிந்துவிடுகிறது. களத்தில் இறங்கி மக்களைச் சந்திப்பதில் அவருக்குப் பெரும் சுணக்கம் இருக்கிறது” என்கிறார்கள். இப்போது சிபிஐ அழுத்தம் காரணமாக, விஜய் இன்னும் ஒதுங்கிப் போக வாய்ப்புள்ளதாகவும், ஒருவேளை தேர்தல் களத்திலிருந்தே அவர் பின்வாங்கக் கூடும் என்றும் ஒரு கவலை தவெக-வின் சில தலைவர்களிடையே நிலவுகிறது.

 

விஜய் இப்போது ஒரு நெருப்பு ஆற்றைக் கடக்க வேண்டிய சூழலில் இருக்கிறார். கையில் இருக்கும் மூன்று மாதங்களில், அவர் தன் மீதான விமர்சனங்களைத் தவிடு பொடியாக்கி, தமிழகம் முழுவதும் புயலெனச் சுழன்று பிரச்சாரம் செய்ய வேண்டும். இல்லையெனில், “அனுபவமின்மை மற்றும் நெருக்கடிகளுக்கு அஞ்சி ஒதுங்கிவிட்டார்” என்ற முத்திரை அவர் மீது விழுந்துவிடும்.

 

கரூர் வழக்கு என்னும் சுருக்குக் கயிறு விஜய்யின் அரசியல் வாழ்வை முறிக்குமா? அல்லது டெல்லி தர்பார் போடும் சவால்களை முறியடித்து அவர் வெற்றிக் கொடி நாட்டுவாரா? திரைக்கதையை விட விறுவிறுப்பாக நகர்கிறது விஜய்யின் அரசியல் ஆட்டம்.


தேமுதிகவினர் காதில் பூ! *பேரம் படியாததால் பிரேமலதா கூட்டணி சஸ்பென்ஸ்..! * உப்பு சப்பின்றி முடிந்த தேமுதிகவின் கடலூர் மாநாடு

தேர்தலில் யாருடன் கூட்டணி என்று ஜனவரி 9ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று இதுவரை பூச்சாண்டி காட்டி வந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, வழக்கம்போல் கூட்டணியை அறிவிக்காமல் மாநாட்டை நடத்தி முடித்துள்ளார். இதனால், தேமுதிக தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பேரம் படியாததால்தான் தேமுதிக தனது கூட்டணியை அறிவிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.

 

ஜனவரி 9 ஆம் தேதி…! தமிழ்நாட்டு அரசியல் ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், மற்றும் குறிப்பாக தேமுதிக தொண்டர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நாள். காரணம், “தேர்தலில் எங்கள் கூட்டணியை ஜனவரி 9-ம் தேதி கடலூர் மாநாட்டில் அறிவிப்பேன்!” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இத்தனை மாதங்களாகச் சொல்லி வந்த வாக்குறுதி!

 

ஆனால், கடலூர் மாநாடு முடிந்தது; தேமுதிகவின் தொண்டர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன்தான் வீடு திரும்பினர். எந்த கூட்டணியில் சேரப்போகிறது தேமுதிக என்று கடைசிவரை பிரேமலதா சொல்லவே இல்லை! வழக்கம்போல, ஆளும் கட்சியையும், ஆண்ட கட்சியையும் சாடிவிட்டு, “நாங்கள் தான் கிங் மேக்கர்! நாங்க கூட்டும் கூட்டணிதான் ஆட்சியை அமைக்கும்!” என்ற ரீதியில் அதே பழைய பஞ்சாங்கத்தை வாசித்துவிட்டுப் போயிருக்கிறார். தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றமா, எரிச்சலா என்று பிரித்து அறிய முடியாத ஒரு கலவையான உணர்வு.

பேரம் படியல… பில்டப் குறையல!

 

உண்மையில், “பேரம் படியாததால்தான் தேமுதிக கூட்டணியை அறிவிக்கவில்லை,” என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் பரவும் லேட்டஸ்ட் ஹாட் நியூஸ். சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாமக, அதிமுக அணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்த பின்னரும், தேமுதிக மட்டும் மதில்மேல் பூனையாக ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தது.

 

திமுக, அதிமுக என இரு திராவிடக் கட்சிகளுமே தேமுதிகவின் 4 முதல் 5% வாக்கு வங்கியை சத்தமில்லாமல் உள்ளிழுக்கத் துடித்தன. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, காங்கிரஸ் ஒரு பக்கம் தலைவலி கொடுக்க, தேமுதிக வந்தால் கொஞ்சம் ‘சப்போர்ட்டாக’ இருக்கும் என்ற எண்ணம். அதேபோல, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கோ, எப்படியும் திமுகவுக்கு எதிரான சக்திகளை ஒன்றிணைத்து ஸ்டாலினை வீழ்த்தியாக வேண்டும் என்ற கட்டாயம். எப்படியும் தேமுதிகவை இழுத்தால் கணிசமாக வெல்லலாம் என்பது அவரது அரசியல் கணக்கு.

 

திடீர் மவுசு கூடிவிட்டதால், தேமுதிகவின் ‘பேரம் பேசும் குரலும்’ உயர்ந்தது. பிரேமலதா மற்றும் அவரது மகன் விஜயபிரபாகரன் ஆகியோரின் ‘ரவுசும்’ அதிகரித்தது. “அதிக தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட், அத்துடன் ஆட்சியில் பங்கு” – இதுதான் பிரேமலதாவின் இப்போதைய எதிர்பார்ப்பு.

 

இரு கட்சிகளை சாடிய பிரேமலதா

 

தேர்தல் பேரம் பேசுவதற்கு முன், தன் பலத்தை நிரூபிக்க பிரேமலதா ஒரு ‘செண்டிமெண்ட் அஸ்திரத்தை’ கையில் எடுத்தார். அதுதான் விஜயகாந்த் முதலில் வெற்றி பெற்ற கடலூர் மாவட்டம் விருத்தாசலத்துக்கு அருகில் நடந்த மாநாடு.

 

ஜனவரி 9-ம் தேதி கடலூர் பாசாறு கிராமத்தில் நடந்த மாநாட்டில், பிரேமலதா வழக்கம்போல் அனல் தெறிக்கப் பேசினார். “இந்த கடலூர் மாவட்டம், விஜயகாந்தின் கோட்டை. தேமுதிக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது; தேமுதிக எங்கு கூட்டணி வைக்கிறதோ அவர்கள்தான் ஆட்சி அமைக்க முடியும்,” என ஒரு பக்கம் ஓவர் பில்டப் ஏற்றினார்.

 

ஆனால், கூட்டணி அறிவிப்பு குறித்துப் பேசியபோதுதான் பிரேமலதாவின் உண்மையான ‘நெருக்கடி’ வெளியே தெரிந்தது. “தேமுதிகவை வெச்சு ஜெயிச்சுப்பீங்க… பயன்படுத்துவீங்க… ஆனால் தேமுதிகவுக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்கமாட்டீங்களா?” என்று அவர் பேசியது, திராவிடக் கட்சிகள் தங்கள் பேச்சுவார்த்தையில் எதிர்பார்த்த தொகுதிகளைக் கொடுக்க மறுத்துவிட்டன என்ற ஏமாற்றத்தையே அப்பட்டமாகக் காட்டியது.

 

“ஆண்ட கட்சியும் ஆளும் கட்சியும் கூட்டணி குறித்து அறிவிக்காத போது நாமும் நின்று நிதானமாக அடிப்போம். தெளிவாக சிந்தித்து விரைவில் மகத்தான வெற்றி கூட்டணியை அறிவிப்போம். இதுவரை சத்ரியனாக இருந்தோம்; இனி சாணக்கியனாக இருப்போம்” என்று கூறி, தன் வாக்குறுதியில் இருந்து நழுவி, சஸ்பென்ஸ் வலையை மேலும் நீட்டிவிட்டார்.

 

அடுத்து, பிரேமலதாவின் வாரிசு விஜயபிரபாகரன் பேசியதுதான் உச்சகட்ட ஹைலைட். இணையத்தில் அவரது உரையைத் தேடிப் பார்த்தால், “தேமுதிக என்றாலே பேரம் என்று பேசுகிறீர்கள். யாருடா நீங்கள் எல்லாம். ஆமாம் நாங்கள் பேரம் பேசுகிறோம். அது சீட்டு பேரம் ” என்று மாநாட்டில் கொந்தளித்தார். இந்த பேச்சுகள், ‘விஜயபிரபாகரன் இவ்வளவு அழுத்தமாகப் பேசுவதற்கு என்ன காரணம்? உண்மையில் பேரம் படியவில்லையா?’ என்ற கேள்வியை எழுப்பியது.

 

ஈகோவும், நோட்டுப் பேரமும்!

கூட்டணி அறிவிப்பு ஏன் வரவில்லை என்று தேமுதிக வட்டாரங்களில் விசாரித்தால், திராவிடக் கட்சிகள் இரண்டும் பிரேமலதா எதிர்பார்த்த தொகுதிகளை வழங்க மறுத்துவிட்டன. “ஆட்சியில் பங்கு” என்ற பேச்சுக்கே வாய்ப்பில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறிவிட்டனராம். ராஜ்யசபா சீட் பற்றிப் பேசுவதையும் இரு கட்சிகளுமே தவிர்த்ததால், பிரேமலதா வெறுப்படைந்து மாநாட்டில் தன் ஆதங்கத்தை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.

 

அதேபோல, நடிகர் விஜயின் தவெகவுடன் கூட்டணி சேர்வதிலும் பிரேமலதாவுக்கு ஈகோ. “நேற்று வந்த விஜயுடன் நாங்கள் கூட்டு சேருவதா?” என்று அவர் தரப்பு சத்தமில்லாமல் புலம்புகிறதாம். தேர்தல் சீட்டுப் பேரம் மட்டுமின்றி, “நோட்டுப் பேரமும்” இன்னமும் படியாததால்தான் மாநாட்டை நடத்தி முடித்தாலும் கூட்டணியை அறிவிக்க முடியாமல் தேமுதிக தலைமை திணறுகிறது என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

 

இப்படி அனைத்து கட்சிகளிடமும் ‘ஓவர் பில்டப்’ காட்டி, “கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை” என்ற கதையாக பிரேமலதாவும், விஜயபிரபாகரனும் பேசியது, திமுக-அதிமுக தலைவர்கள் மத்தியில் லேசான எரிச்சலைத்தான் ஏற்படுத்தியிருக்கிறதாம்.

 

எப்படியோ, ஜனவரி இறுதிக்குள் தேசிய ஜனநாயகக் கூட்டணியை இறுதி செய்ய பாஜக தலைமை முடிவு செய்துள்ளதால், பொங்கலுக்குப் பிறகு, தேமுதிகவின் ‘மதில்மேல் பூனை’ நிலை மாறுமா, இல்லையா என்பது தெரிந்துவிடும்! அதுவரை, தொண்டர்களுக்கு சஸ்பென்ஸும், தலைவர்களுக்குத் தொடர் ‘பேரம் பேசும் காய்ச்சலும்’ நிச்சயம்.


காங்கிரஸ் உடையுமா? * தொடரும் குடைச்சலால் திமுக பலே திட்டம்..* கூட்டணி பிளவுபடாமல் இருக்க புது வியூகம்!

திமுக கூட்டணியில் அதிகாரப் பங்கு, அதிக சீட் வேண்டுமென்று தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணி குடைச்சல் அளித்து வருகிறது. மறுத்தால் தவெகவுடன் கூட்டு சேர கதர் சட்டையினர் விரும்பும் நிலையில், காங்கிரஸ் கட்சியை உடைக்க, திமுக அதிரடி வியூகத்தை வகுத்துள்ளது. இதனால், தமிழக அரசியல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.

 

அண்ணா அறிவாலயத்தில் ஆளும் கட்சியான திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சில மாதங்களாகத் தலைவலியும் வயிற்றெரிச்சலும் ஒரே நேரத்தில் வந்துவிட்டது. காரணம், கண்முன்னே நடக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளால் அல்ல, கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் அட்டகாசத்தால்.

 

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் நான்கே மாதங்கள் இருக்கும் நிலையில், தி.மு.கவின் தேர்தல் வியூகத்தின் அஸ்திவாரத்திலேயே மண்ணை அள்ளப் பார்க்கிறது ராகுல் காந்தியின் காங்கிரஸ். ‘நம்ம பலமே கூட்டணிதான்…’ என்று நம்பிக்கொண்டிருக்கும் தி.மு.கவின் உச்சகட்டக் கோபத்திற்குப் பின்னே, ஒரு அதிரடி ‘ஆபரேஷன்’ திட்டம் இருப்பதை அறிவாலய வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

 

குடைச்சல் தரும் கதர் கோஷ்டி: தைரியம் தந்த தவெக!

தமிழக அரசியல் களம் இப்போது அனலாய் இருப்பது உண்மை. வலுவான கூட்டணியைக் கட்டி, இரண்டாம் முறை வெற்றியை ருசித்துவிடலாம் என்று முதல்வர் ஸ்டாலின் கணக்குப் போட்டால், அதைச் சிதைக்க உள்ளிருந்தே குரல்கள் கிளம்புகின்றன. ‘அதிகாரப் பங்கு வேண்டும், அதிக சீட் வேண்டும்!’ என்று காங்கிரஸ் தரப்பு தொடர்ந்து தி.மு.கவை மிரட்டுவதின் பின்னால், இப்போது புதிதாக அரசியல் களமிறங்கியுள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) துணிச்சல் ஒளிந்திருக்கிறது.

 

‘திமுக கைவிட்டால் என்ன… நமக்கு தவெக இருக்கிறது!’ என்ற அதீத நம்பிக்கையில்தான், காங்கிரஸின் பிடிவாதம் அதிகரித்துள்ளது. சட்டமன்றக் கட்சித் தலைவர் ராஜ்குமார் முதல், நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வரை தி.மு.கவுக்கு அன்றாடத் தலைவலியைத் தந்து கொண்டிருக்கிறார்கள். தி.மு.கவோ, ‘பா.ஜ.கவுக்கும் கம்யூனிஸ்ட்களுக்கும் இருக்கும் செல்வாக்கு கூட இவர்களுக்கு இல்லை; நாம் கொடுப்பதே அதிகம்!’ என்று கறாராக மறுக்கிறது. இந்த ஈகோ யுத்தத்தில், தி.மு.க – காங்கிரஸ் உறவில் புகை மண்டலம்தான் தெரிகிறது.

 

டெல்லி ஆடும் ‘டபுள் கேம்’: ராகுலின் மௌனம்

 

விவகாரம் உள்ளூர் தலைவர்களோடு நிற்கவில்லை. டெல்லி மேலிடம் ஆடும் ‘டபுள் கேம்’ தான் ஸ்டாலினின் கோபத்தின் உச்சம். ராகுல் காந்தி உள்ளிட்ட டெல்லி நிர்வாகிகள் விஜய்யின் தவெகவுடன் தொடர்பில் இருப்பது, தி.மு.கவுக்குப் பெரும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் உச்சகட்டமாக, காங்கிரஸ் தேசிய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி, தி.மு.க அரசின் பொருளாதாரக் கொள்கையை, புள்ளி விவரங்களோடு கடுமையாக விமர்சித்தார். கூட்டணி தர்மத்தை மீறிய இந்தப் பேச்சுக்கு, வி.சி.க, ம.தி.மு.க., இடதுசாரிகள் என தி.மு.கவின் சகாக்கள் வரிசையாகக் கண்டனம் தெரிவிக்க… இங்கேதான் ஒரு திருப்பம்!

 

‘கூட்டணிக் கட்சியினர் உள்கட்சி விவகாரங்களில் தலையிடக் கூடாது. லட்சுமண ரேகையைத் தாண்டி மூக்கை நுழைக்கக் கூடாது!’ என்று காட்டமாகப் பதிவிட்டு, காங்கிரஸின் எம்.பி. மாணிக்கம் தாகூர், தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளுக்கே வெளிச்சம் போட்டுக் காட்டினார், ‘நாங்கள் சமாதானத்தில் இல்லை!’ என்று.

 

இத்தனைக்கும், பிரவீன் சக்கரவர்த்திக்கு எதிராக ராகுல் காந்தி தரப்பில் இருந்து எந்தக் கண்டனக் குரலும் எழவில்லை. இது, அவர் தவெகவுடன் கூட்டணி சேரும் டெல்லி மேலிடத்தின் முடிவுக்கு ஆதரவாகவே செயல்படுகிறார் என்பதைக் காட்டுகிறது. தி.மு.கவை எரிச்சல் ஊட்டும் தலைவர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, தி.மு.கவுக்கு டெல்லி கொடுக்கும் ‘ரெட் சிக்னல்’ ஆகவே பார்க்கப்படுகிறது.

 

தி.மு.கவின் விசுவாச கோஷ்டி: ‘சிதம்பர’ ரகசியம்!

இப்படியான பூசல்களுக்கு மத்தியில், தி.மு.கவுக்கு விசுவாசமாக இருக்கும் ஒரு கோஷ்டியும் காங்கிரஸில் உண்டு. காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், எம்.பி. விஜய் வசந்த் உள்ளிட்டோர் வெளிப்படையாகவே முதல்வர் ஸ்டாலினின் புகழ்பாடி பஜனை செய்கிறார்கள். இவர்கள், பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்தை எதிர்த்தது மட்டுமின்றி, ‘தி.மு.க கூட்டணியை விட்டு வெளியேறி, தவெக பக்கம் சாய்வது தற்கொலைக்குச் சமம்!’ என்றும் எச்சரித்துள்ளனர்.

 

இந்தப் பிரிவினர் புத்தாண்டை முன்னிட்டு, முதல்வரைச் சந்தித்து தங்கள் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். ப.சிதம்பரத்தின் நிலைப்பாட்டுக்குப் பின்னால் ஒரு கச்சிதமான அரசியல் கணக்கு இருக்கிறது. ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கும் அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு நிறைவடைகிறது. மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் நீடிக்க வேண்டுமென்றால், தி.மு.கவின் தயவு கட்டாயம் வேண்டும். இந்த ஒற்றைக் காரணத்துக்காக, ஸ்டாலின் எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்பட அவர் தயாராக இருக்கிறார் என்கிறார்கள்.

 

அறிவாலயத்தின் பலே ‘ஆபரேஷன்’ பிளான்!

 

சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் கூட்டணி பலம் குறையக்கூடாது என்ற உறுதியுடன் இருக்கும் ஸ்டாலின், டெல்லி மேலிடத்தின் ‘டபுள் கேம்’ கண்டு வெகுவாக அதிருப்தியடைந்துள்ளார். கூட்டணிக் கட்சிகளின் வெற்றியே தமது வெற்றி என நம்பும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, தனது வியூகத்தை மாற்றியாக வேண்டிய கட்டாயம்.

 

அதனால்தான், தி.மு.கவின் சீனியர் நிர்வாகிகளுடன் ஆலோசித்த ஸ்டாலின், ஒரு அதிரடி ‘ஷாக் ட்ரீட்மென்ட்’க்குத் தயாராகி விட்டதாக அறிவாலய வட்டாரங்கள் ரகசியம் பேசுகின்றன. காங்கிரஸ் தலைமையே கூட்டணியை விட்டு வெளியேற முடிவு செய்தால், அந்தக் கட்சிக்கு ‘ஆப்ரேஷன்’ செய்து, ‘உடைக்க’ முடிவெடுத்துள்ளது தி.மு.க. அந்த ‘பலே’ வியூகம் என்ன தெரியுமா? முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில், மீண்டும் ‘காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை’யை ஆரம்பிப்பது!

 

முன்னர், ஜி.கே. மூப்பனார், காங்கிரஸில் இருந்து வெளியேறி ‘தமிழ் மாநில காங்கிரஸ்’ தொடங்கினார். அப்போது சிதம்பரம் உள்ளிட்டோர் மூப்பனாருடன் இருந்தனர். பின்னாளில் அ.தி.மு.கவுடன் தமாகா கூட்டணி சேர்ந்ததை எதிர்த்து, ப.சிதம்பரம் வெளியேறினார். பின்னர், ஜனநாயகப் பேரவை ஒரு கட்சியைத் தொடங்கி, தி.மு.க கூட்டணியில் இணைந்தார். பிறகு, தேசிய அளவில் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி உருவானதும் தனது கட்சியை இணைத்துக்கொண்டார்.

பழைய பார்முலாவை கையில் எடுக்கும் திமுக!

 

இப்போது அதே ‘பழைய ஃபார்முலாவை’ கையில் எடுத்து, தி.மு.கவுக்கு விசுவாசமான ப.சிதம்பரத்தை வைத்து, மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தி.மு.க அனுதாபிகளை அந்தக் கட்சிக்கு இழுக்க அறிவாலயம் வலை விரித்துள்ளதாம்.

 

தேசிய அளவில் பா.ஜ.கவை எதிர்க்க காங்கிரஸ் கூட்டணி தேவை என்றாலும், உள்ளூரில் தவெகவின் தயவில் தி.மு.கவுக்குத் தொடர்ந்து தலைவலியைத் தரும் காங்கிரஸ் தலைமையின் பிடிவாதம் நீடித்தால், தமிழகத்தில் காங்கிரஸ் உடைவது உறுதி என்கிறார்கள் திமுக பெருந்தலைகள்.

 

இதனால், தமிழக அரசியல் களம் விறுவிறுப்படையத் தொடங்கியுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சி பிளவுபட்டு, தி.மு.கவின் விசுவாச கோஷ்டி தனியாகப் பிரிந்து வருமா? அல்லது ஒன்றுபட்ட காங்கிரஸாகத் தொடர்ந்து தி.மு.க கூட்டணியில் நீடிக்குமா? இந்தக் கேள்விகளுக்கான பதில், இன்னும் சில வாரங்களில், தை மாதத்தில் தெரிந்துவிடும்!


அதிமுக-பாமக கூட்டு! *திடுதிடுப்பென இபிஎஸ்-ஐ சந்தித்த அன்புமணி..* ராமதாஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன் நிலை என்ன?

மிழக அரசியல் களம் எப்போதும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாததுதான். ஆனால், தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இன்று (ஜனவரி 7) நடந்த ஒரு சந்திப்பு ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ‘அதிமுக – பாமக கூட்டு!’ என்னும் இந்த அதிரடி அறிவிப்பு, தமிழகத்தின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒரு பெரிய பாய்ச்சலைக் காட்டியிருக்கிறது.

 

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி வியூகங்களை வகுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தச் சூழலில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடுதிடுவெனச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதுதான் இன்றைய ஹாட் நியூஸ். இந்தச் சந்திப்பு நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஆனால், அதன்பிறகு இரு தலைவர்களும் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

 

“அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது” – இதுதான் எடப்பாடி பழனிசாமியும், அன்புமணி ராமதாஸும் இணைந்து அறிவித்த செய்தி. தொகுதிப் பங்கீடு குறித்த முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று இபிஎஸ் அறிவிக்க, அன்புமணி ராமதாஸ் இன்னும் ஒரு படி மேலே போய், இது ‘வலுவான கூட்டணி’ என்றும், “மக்கள் விரோத, சமூக நீதிக்கு எதிரான திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காகவே இணைந்துள்ளோம்” என்றும் முழங்கினார். பாமக தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணி இது என்றும் அவர் குறிப்பிட்டது, இந்த முடிவு பாமகவின் தலைமை மட்டத்தில் ஒருமித்த கருத்துடன் எடுக்கப்பட்டதையே காட்டுகிறது.

இந்தக் கூட்டணியில் ஒரு சிக்கல் இல்லாமலில்லை. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பு என பாமகவில் இரண்டு பிரிவுகள் உள்ளன. இந்தக் கூட்டணி முடிவுக்கு ராமதாஸின் ஆசி இருக்கிறதா? அல்லது அன்புமணி தரப்பு மட்டும் இபிஎஸ்ஸுடன் கைகோர்த்துள்ளதா? என்பதே அரசியல் விமர்சகர்களின் தற்போதைய கேள்வி.

 

அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை, ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரின் நிலைமை என்ன என்ற கேள்வியும் இப்போது பூதாகரமாக எழுந்துள்ளது. அதிமுகவின் பிளவுபட்ட தலைவர்களாக இவர்கள் தனித்துக் களமாடி வந்தாலும், பாஜக இவர்களைக் கூட்டணியில் சேர்ப்பதற்கு மறைமுகமாக விரும்பியது. அதே நேர்ம, பாமகவின் திடீர் உள்ளீர்ப்பு, இபிஎஸ்ஸுக்கு மேலும் பலத்தைக் கொடுத்திருக்கிறது.

 

பாமகவின் வருகை, இபிஎஸ்ஸை இன்னும் அசைக்க முடியாத தலைவராக நிலை நிறுத்தியுள்ளது. வட மாவட்டங்களில் பாமகவின் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியை இபிஎஸ் உறுதி செய்துள்ளதால், கூட்டணியின் மையப்புள்ளி இபிஎஸ்ஸின் கைகளில் இன்னும் உறுதியாகியிருக்கிறது. எனவே, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் போன்றோர் இனி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கு, எடப்பாடி பழனிசாமியின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

 

ஒருவேளை இபிஎஸ்ஸை பகைத்துக்கொண்டு இவர்கள் தனித்துச் சென்றால், அது திமுகவுக்கு சாதகமாகிவிடும் என்று பாஜக தலைமை அறிந்தே இருக்கிறது. இந்தச் சூழலில், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறையவே வாய்ப்புள்ளது. இனி இவர்கள் இருவரும் இபிஎஸ்ஸிடம் ‘சரணடைவதா’ அல்லது தனித்துப் போட்டியிட்டு தங்கள் இருப்பைக் காட்டுவதா என்ற தர்மசங்கடமான நிலையில் உள்ளனர்.

 

அதிமுக, பாஜக, மற்றும் இப்போது பாமக என வலுவான ஒரு கூட்டு அமைந்திருப்பதால், 2026 சட்டமன்றத் தேர்தல் களம் மேலும் விறுவிறுப்பாகியுள்ளது. ஆளும் திமுகவுக்கு இந்த கூட்டணி ஒரு பெரும் சவாலை நிச்சயமாக அளிக்கும்.


மேயருக்கு எதிராக வீசிய அம்பு! *குப்பை விவகாரத்தில் செல்வராஜின் சாதுர்யம்* மக்களுடன் கைகோர்த்ததால் மேயருக்கு சங்கடம்!

திருப்பூர் மாநகராட்சியில் நிலவும் குப்பை பிரச்சினை, திமுக மேயர் தினேஷ்குமாருக்கு பெரும் தலைவலியாக உள்ள நிலையில், மேயருக்கு எதிராக சாதுர்யமாக காய் நகர்த்தி உள்ளார், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ். குப்பை அள்ள வேண்டுமென்று மக்களுடன் மக்களாக தர்ணாவில் ஈடுபட்டார். இதன்மூலம் மக்கள் ஆதரவு மற்றும் மேயருக்கு எதிராக அரசியல் அம்பு என ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடித்துள்ளார் செல்வராஜ்.

 

திருப்பூர் என்றாலே பனியன் வாடை அடிக்கும் காலம் போய், இப்போது குப்பை வாடை தான் பிரதானமாக இருக்கிறது. ஆனால், அந்த குப்பை நாற்றத்தையும் தாண்டி, தற்போது அங்கே பலமான அரசியல் ‘புகைச்சல்’ கிளம்பியிருக்கிறது. ஆளுங்கட்சிக்குள்ளேயே ஒரு ‘உளகுத்து போர்’ வெடித்திருப்பது தான் இப்போது மெகா ஹாட் டாபிக்.

 

ஒரு பக்கம் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மறுபக்கம் திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ-வும், தி.மு.க மத்திய மாவட்டச் செயலாளருமான செல்வராஜ். இவர்களுக்கு இடையிலான பனிப்போர், இப்போது குப்பை விவகாரம் மூலம் நடுத்தெருவுக்கு வந்து நாறிக் கொண்டிருக்கிறது.

 

திருப்பூர் மாநகராட்சியில் குப்பை மேலாண்மை என்பது பல மாதங்களாகவே எட்டாக்கனியாக இருக்கிறது. பாறைக்குழிகளில் குப்பை கொட்டுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்க, நகரமே ஒரு குப்பைத் தொட்டியாக மாறியிருக்கிறது. பாஜக இதை திமுகவுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தி பெரும் போராட்டத்தை நடத்தியது. அண்ணாமலையே வந்து தலைமையேற்று போராட்டத்தில் கைதானதால், தமிழக அளவில் திருப்பூர் குப்பை பிரச்சினை கவனம் பெற்றது.

இந்தச் சூழலில் தான், மேயர் தினேஷ்குமாருக்கு செக் வைக்கும் விதமாக ஒரு ‘மாஸ்டர் பிளான்’ போட்டார் எம்.எல்.ஏ செல்வராஜ். அதுவும் எப்படி? எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டிய வேலையை, ஒரு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வே கையில் எடுத்து தர்ணாவில் குதித்தது தான் திருப்பூர் உடன்பிறப்புகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

 

வெள்ளியங்காடு, முத்தையன் கோவில் எனச் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு மாதங்களாகக் குப்பை மலைபோலக் குவிந்து கிடக்கிறது. துர்நாற்றம் குடலைப் பிடுங்க, மக்கள் கொதித்துக் கொண்டிருந்தனர். இந்தச் சமயம் பார்த்து, தனது ஆதரவாளர்களுடன் களத்தில் இறங்கினார் தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ்; குப்பை அகற்றக்கோரி, தர்ணாவில் ஈடுபட்டார்.

 

ஆளுங்கட்சி மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வே போராட்டம் என்று திருப்பூர் விவகாரம், தொலைகாட்சிகளில் முக்கிய இடம் பிடித்தன. லைவ் டெலிகாஸ்ட் ஒருபுறம் ஓட, விஷயம் அறிந்து பதறிப்போய் ஓடிவந்த மாநகராட்சி அதிகாரிகள், “இது வெறும் மூணு நாள் குப்பை தான் சார்” எனச் சமாளிக்கப் பார்த்தனர். அங்கேயே தான் செல்வராஜின் விஸ்வரூபம் ஆரம்பமானது.

 

சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு, அந்த நாற்றமெடுக்கும் குப்பை மேட்டுக்குள் விறுவிறுவென நடந்தார் எம்.எல்.ஏ. “இது மூணு நாள் குப்பையா? பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு வேண்டாமா? இதையெல்லாம் அள்ளுற வரைக்கும் நான் தண்ணி கூடக் குடிக்க மாட்டேன். நாளைல இருந்து ஒவ்வொரு வார்டா போய் உட்காருவேன்” என அவர் ஆவேசப்பட, அதிகாரிகள் கதி கலங்கிப் போய்விட்டார்கள். மேலிடத்து உத்தரவுக்காகக் காத்திருக்காமல், உடனடியாகத் தூய்மைப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு குப்பைகள் போர்க்கால அடிப்படையில் அகற்றப்பட்டன.

வெளியில் பார்க்க இது மக்கள் நலப் போராட்டமாகத் தெரிந்தாலும், இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் கணக்குகள் தான் மிக முக்கியமானது. மேயர் தினேஷ்குமாருக்கும், மாவட்டச் செயலாளர் செல்வராஜுக்கும் இடையே நீண்ட நாட்களாகவே ஏழாம் பொருத்தம் நிலவி வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் மேயரின் பிடியில் இருக்கும்போது, அங்கே நிர்வாகச் சீர்கேடு நிலவுகிறது என்பதைக் கோடிட்டுக் காட்டவே செல்வராஜ் இந்த அதிரடி ஆட்டத்தைத் தொடங்கியதாக உடன்பிறப்புகள் பேசிக்கொள்கிறார்கள்.

 

செல்வராஜ் தரப்போ வேறு விதமான விளக்கத்தைக் கொடுக்கிறது. “அண்ணன் எப்போதுமே அப்படித்தான். காலேஜ் ரோட்டில் டாஸ்மாக் கடையை அகற்ற மக்கள் போராடியபோது, ஆளுங்கட்சி என்று பார்க்காமல் அவரோடு சேர்ந்து நின்றார். பூ மார்க்கெட் விவகாரத்திலும் மக்களின் குரலாகவே ஒலித்தார். இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை” என்கிறார்கள்.

 

ஆனால், இதைப் பழுத்த அரசியல்வாதிகள் ஏற்பதாக இல்லை. தேர்தல் நெருங்கும் வேளையில், மேயரின் ‘டல்லான’ இமேஜை இன்னும் டேமேஜ் செய்து, தன் கை ஓங்கியிருப்பதை அறிவாலயத்திற்கு உணர்த்தவே செல்வராஜ் இந்த அம்பு வீசியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

 

எம்.எல்.ஏ செல்வராஜை, குற்றம் குற்றம் குற்றமே தரப்பில் அணுகி பேச்சு கொடுத்தோம். அவர் நம்மிடம் “யார் எதைச் சொன்னாலும் எனக்குக் கவலை இல்லை. மக்களுக்குச் சேவை செய்வதுதான் என் வேலை. மாநகராட்சி கமிஷனரிடம் பலமுறை சொல்லியும் வேலை நடக்கவில்லை, அதான் களத்தில் இறங்கினேன். இதில் யார் மீதும் எனக்குத் தனிப்பட்ட வருத்தம் கிடையாது.

 

மேயர்தான் இதையெல்லாம் முன்னின்று கவனித்திருக்க வேண்டும். அவர் செய்யாததை நான் செய்கிறேன். அந்த வார்டு மக்களும் என்னை ஓட்டுப் போட்டுத் தான் தேர்ந்தெடுத்தார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும்” என மிகவும் நயமாக அதேசமயம் நறுக்கென்று மேயருக்குப் பதில் தந்துள்ளார்.

 

தற்போது திருப்பூர் மாநகராட்சிக்குள் ஒரு விசித்திரமான சூழல் நிலவுகிறது. மேயர் ஒரு பக்கம், எம்.எல்.ஏ.,ஒரு பக்கம் என தி.மு.க இரண்டாக உள்ளது. “நிர்வாகம் சரியில்லை” என எம்.எல்.ஏ சொல்வது மறைமுகமாக மேயரின் தோல்வியைச் சுட்டிக்காட்டுவதாகவே அமைகிறது. மேயருக்கு எதிராக வீசப்பட்ட இந்த ‘குப்பை அம்பு’, இப்போது நகர் முழுக்க அரசியல் வாடையைப் பரப்பிக் கொண்டிருக்கிறது.

 

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சிக்குள்ளேயே அரங்கேறும் இந்த அதிகாரப் போட்டி திருப்பூரில் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது. மேயர் தினேஷ்குமார் இதற்கு எப்படிப் பதிலடி கொடுக்கப் போகிறார் என்பது ஒருபுறமிருக்க, “முதல் சுற்றில் செல்வராஜ் அண்ணன் ஸ்கோர் பண்ணிட்டார்” என அவரது ஆதரவாளர்கள் நமுட்டுச் சிரிப்புடன் வலம் வருகிறார்கள். கோஷ்டிப் பூசல் எனும் குப்பையை தி.மு.க தலைமை எப்படி அகற்றப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


போலீஸ் உதவியாளரின் காமலீலை.. “அல்லக்கை” நோட்டீஸுக்கு அஞ்சமாட்டோம்” தொடர்ந்து தோலுரிப்போம்!

திருப்பூரில் ஊர்க்காவல் படையின் பெயரைப் பயன்படுத்தி, பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முகமது யாகத் அலிகான் என்பவனின் கேவலமான லீலைகளை, ‘குற்றம் குற்றமே’ வார இதழ் இனியும் மிகத் தீவிரமாக அம்பலப்படுத்தும் என்பதில் இம்மி அளவும் ஐயமில்லை!

 

செய்தியை வெளியிட்டு ஒரு மாதம் கழித்து, அந்த நபர் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி பத்திரிகை சுதந்திரத்தை அச்சுறுத்தலாம் என்று கனவு காண்கிறார். ஆனால், அவனது அந்தக் கனவு ஒருபோதும் நனவாகாது! அலிகானின் அனைத்து லீலைகளையும், அடாவடித்தனங்களையும் ஆணிவேர் வரை தோண்டி வெளிச்சத்திற்குக் கொண்டு வர, ‘குற்றம் குற்றமே’ இதழ் சிறிதும் தயங்காது!

 

ஊர்க்காவல் படை உதவியாளர் என்ற போர்வையில், இளம் தம்பதியினரை மிரட்டிப் பணம் பறிப்பது, பெண்களின் மொபைல் எண்களைப் பெற்றுக்கொண்டு அத்துமீறிய மெசேஜ்களை அனுப்புவது, கணவரைப் பிரிந்த பெண்கள், பனியன் கம்பெனி பெண்களை அச்சுறுத்துவது என முகமது யாகத் அலிகானின் அராஜகங்கள் எல்லை மீறிப் போயுள்ளன.

 

 

காக்கிச்சட்டை போர்வையில் ஒரு கயவன்! பெண்களை வலைத்து தினமும் சல்லாப லீலை.. போலீஸ் உதவியாளரால் திருப்பூரில் தொல்லை!

இந்த சைக்கோத்தனத்திற்கு யார் மணி கட்டுவது? என்று பலரும் குமுறிக்கொண்டிருந்த நிலையில் தான், ‘குற்றம் குற்றமே’ கயவர்களின் மறுபக்கத்தைத் வெளியிட்டு தோலுரித்தது . தனது குட்டு அம்பலமாகிவிட்டதே என்று பதறிப்போன யாகத் அலி, என்ன செய்வது என்று தெரியாமல் ‘ரூம் போட்டு யோசித்திருக்கிறான்’ போல! அந்தப் பயத்தின் விளைவாகத்தான், இப்போது இந்த வெற்று வழக்கறிஞர் நோட்டீஸ் நாடகம்!

 

குற்றம் புரிவது யார்? அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம் என யாருடைய மிரட்டல்களுக்கும் அஞ்சாத பத்திரிகை நமது ‘குற்றம் குற்றமே’. எங்களுடைய அடிப்படைக் கொள்கைமே, நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாமை என்பதுதான்.

 

அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம் உள்ளிட்ட பலரின் மிரட்டல்களையே பார்த்துவிட்ட குற்றம் குற்றமே இதழுக்கு, பெண்கள் பணத்தில் ஓசி டீ வாங்கி குடித்து , உல்லாசத்திற்கு ஊர் சுற்றித் திரியும் இவனை போன்ற அல்லக்கையின் அச்சுறுத்தல் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அடங்கிப்போனது கிடையாது.

 

இனிவரும் நாட்களில் முகமது யாகத் அலிகானின் அக்கிரமங்கள் மேலும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு, அவை பட்டியலிடப்படும். எனவே, அச்சுறுத்தும் வேலைகளை உடனடியாக நிறுத்திக்கொண்டு, ஆக்கபூர்வமாக யோசிப்பதே  புத்திசாலித்தனம்!

 

வாசகர்கள், நேர்மையான அரசியல்வாதிகள், தலைசிறந்த காவல் துறையினர், வியர்வை சிந்திப் பாடுபடும் தொழில் முனைவோரின் வலுவான ஆதரவு எங்கள் பக்கம் இருக்கும்போது, ‘குற்றம் குற்றமே’ இதழ் குற்றவாளிகளுக்கு ஒருபோதும் தலைவணங்காது! தொடர்ந்து நீதியின் பக்கமே என்றும் பயணிக்கும்!


மகளிர் மாநாடு சாதித்ததா? சறுக்கியதா? திமுகவின் வியூகம் மேற்கில் எடுபடுமா? எதிர்பார்த்த அறிவிப்புகளின்றி ஏமாற்றம்..!

ல்லடம் அருகே காரணம்பேட்டையில் திமுகவின் மேற்கு மண்டல மகளிர் மாநாடு வெளித்தோற்றத்திற்கு பிரம்மாண்டமாக தெரிந்தாலும் எதிர்பார்த்த கூட்டம் சேரவில்லை; எதிர்பார்த்த அறிவிப்புகளும் இல்லை என்ற முணுமுணுப்பு உடன்பிறப்புகள் மத்தியில் உள்ளது. எனினும், மகளிருக்கு திமுக செய்த சாதனைகளை பட்டியலிட்டு, மாநாட்டை பிரசாரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்திக் கொண்டார். திமுகவின் கொங்கு மண்டல மாநாடு, தேர்தலில் கைகொடுக்குமா என்பதை பார்ப்போம்.

 

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை, எப்போதும் பரபரப்பாக இருக்கும் கோயம்புத்தூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையானது, டிசம்பர் 29ஆம் தேதி திங்களன்று மதியத்தில் இருந்தே, ‘கருப்பு – சிவப்பு’க் கடலாக மாறியிருந்தது. “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” எனும் தலைப்பில் தி.மு.க.வின் மேற்கு மண்டல மகளிரணி மாநாடு பிரம்மாண்டமாய் நடந்தேறியது. கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை எனச் சொல்லப்படும் நிலையில், அதைத் தகர்க்க தி.மு.க. போட்ட அஸ்திரம்தான் இந்த மகளிர் மாநாடு.

 

தொண்டர்கள் மத்தியில் மாநாடு பிரம்மாண்டமாகத் தெரிந்தாலும், ‘எதிர்பார்த்த கூட்டம் இல்லையே’, ‘புது அறிவிப்புகள் ஏதுமில்லையே’ என்ற முணுமுணுப்புகள் காற்றில் மிதக்காமல் இல்லை. ஆனால், தி.மு.க. தரப்பின் உற்சாகம் ஒரு படி மேலேதான் இருந்தது. குறிப்பாக, இந்த மாநாட்டின் மொத்த ஏற்பாடுகளையும் கவனித்த கரூர் டீம், கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பெண்கள் கலந்துகொள்வார்கள் என சொல்லி அசத்தினார்கள். இதற்காகவே, 150 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுத் திடல், 4000 பேருந்துகள் நிறுத்தும் வசதி என ஏற்பாடுகள் உச்சத்தில் இருந்தன.

மகளிர் அணியினர் கருப்பு, சிகப்பு நிறங்களில் சேலை மற்றும் சுடிதார் அணிந்து வந்ததைக் காண, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இதை கவனித்த உள்ளூர் அ.தி.மு.க.காரர்கள், “பல்லடம், திருப்பூரில் உள்ள சில கம்பெனிகளில் இருந்து வட மாநிலத் தொழிலாளிகள், கல்லூரி மாணவிகள் எல்லாம் அழைத்து வரப்பட்டிருக்காங்க. அதுமட்டுமில்லாம, கட்சித் தலைமையே கலந்துகொள்ளும் மாநாட்டிற்கு, சேலை, சுடிதார் கொடுத்து ‘டிரெஸ் கோட்’ வேற வெச்சு இருக்காங்க!” என சமூக வலைதளங்களில் கமெண்டுகளை தெறிக்க விட்டனர்.

 

மாநாட்டுக்கு வருபவர்களுக்கு அடிப்படை வசதிகளில் தி.மு.க. எப்போதுமே டாப்தான். அந்த அக்கறை பல்லடத்திலும் தெரிந்தது. 350 மொபைல் கழிவறைகள், தாய்மார்களுக்கான தனி அறைகள், மினி கிளினிக் என அசத்தி இருந்தனர்.

 

மாநாட்டுக்கு வந்த பெண்களுக்கு, பிஸ்கட், மிக்சர், இனிப்பு, குளிர்பானம், தண்ணீர் பாட்டில் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன. முன்னதாக, மாநாட்டுக்கு வந்தவர்களுக்கு மதிய உணவும், மாநாடு முடிந்து திரும்பும்போது இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுமட்டுமல்லாமல், பங்கேற்பாளர்களுக்கு பணமும் வழங்கப்பட்டதாக சில கிசுகிசுக்கள் எழாமல் இல்லை.

 

திறந்தவெளி வாகனத்தில் மாநாட்டு திடலுக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு, இரு சக்கர வாகனத்தில் மகளிர் படையினர் ஊர்வலமாகச் சென்று வரவேற்பளித்தனர். “கருப்பு – சிகப்பு கடல்போல லட்சக்கணக்கான பெண்கள் ஒரே இடத்தில் கூடியது வரலாறே இருக்காது!” என நெகிழ்ந்த முதல்வர், தன் பேச்சை முழுக்க முழுக்க தி.மு.க.வின் மகளிர் நலத் திட்டங்களை விளக்கும் பிரசார மேடையாகவே பயன்படுத்திக் கொண்டார். மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண் என அடுக்கடுக்காகப் பட்டியலிட்டார்.

மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “உங்களைப் பார்க்கும்போதே, பவர்ஃபுல்லாக இருக்கிறது. பெண்கள் சக்தியால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர உள்ளது.தேர்தல் அறிக்கை தான் திமுகவின் கதாநாயகன். அதை தயாரிக்கும் பொறுப்பை கனிமொழி ஏற்றுக்கொண்டுள்ளார்.வரும் சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றி பெறப்போகிறோம். அது உறுதி. மகளிர் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்” என்றார்.

 

மேலும், “திராவிட இயக்கத்தினால், பெண்கள் வளர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் பெண்கள் ஆண்டிராய்டு மொபைல் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டதாக செய்தி வந்தது. ஆனால், தமிழகத்தில் ஐபோன்களை பெண்கள் உற்பத்தி செய்கின்றனர். பெண்களுக்கு சொத்துரிமை அளித்தது திமுக. பெண்கள் சமையல் அறையை தாண்டி செல்லக்கூடாது என கட்டுப்பாடு விதித்தனர். ஆனால், இதனை உடைத்தது திராவிட இயக்கம்” என்று பெருமிதத்துடன் ஸ்டாலின் பேசினார்.

 

அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ஜ.க.வின் 100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றம் ஆகியவற்றை தனது உரையில் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். “ஆண்கள் வாசல் வரைதான் பிரசாரம் செய்ய முடியும். பெண்கள், வீட்டுக்குள், ஏன் சமையல் அறை வரை செல்ல முடியும்!” என முடித்த முதல்வர், வீட்டிற்குள் சென்று கட்சித் திட்டங்களைச் சேர்க்கும் பொறுப்பை மகளிரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார்.

கனிமொழி பேசும்போது, “இந்தியாவிலேயே அதிகமாக, 47% வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு. கோவை, கரூர், நீலகிரி உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில் தொடங்கிய 2,682 ஸ்டார் அப்களில் 56% பெண்கள் தொடங்கி இருக்கிறார்கள்.

 

எதிர்க்கட்சிகள் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்ற ஒரு கருத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக என்னென்ன கொடுமைகள் வன்முறைகள் நடந்தது என்று நாம் எல்லோருக்கும் தெரியும். நம்முடைய போராட்டத்திற்கு பிறகு தான் பொள்ளாச்சி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. நம்முடைய ஆட்சியில் தான் அந்த பெண்களுக்கு நியாயம் கிடைத்தது. இப்படிப்பட்ட நிலையில் நம்மை பார்த்து பாஜகவினர் பேசுகிறார்கள்” ஒரு பிடிபிடித்தார் கனிமொழி.

 

துணை முதல்வர் உதயநிதி பேசும்போது, “நம் கூட்டத்தைப் பார்த்து, சங்கிகள் கூட்டமும் அடிமைக் கூட்டமும் புலம்புகின்றன; பதறுகின்றன. இங்கு பல்லடத்தில் கூடியுள்ள மாநாட்டுக் கூட்டத்தைப் பார்த்தால், சங்கிகள் கூட்டமும் அடிமைக் கூட்டமும் 10 நாட்களுக்கு தூங்க மாட்டார்கள். நாட்டின் மகளிரின் உரிமைக் குரலாக முதலமைச்சர் விளங்குகிறார். 1989-ல் மகளிருக்கு பாதிச் சொத்து கொடுக்க வேண்டும் என்று ஆணை இட்டவர் கருணாநிதி. பெண்களுக்கு ஆட்சியில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்ததும் அவர்தான்” என்றார்.

 

மாநாட்டில் கனிமொழிக்குக் கிடைத்த முக்கியத்துவம், குடும்பத்துக்குள் இருந்த மனத்தாங்கல்களை ஸ்டாலின் சாமர்த்தியமாகத் தீர்த்திருக்கிறார் என்பதைக் காட்டியது. உதயநிதிக்குக் கிடைத்த முக்கியத்துவத்தால் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்ட குமுறல்கள் தீர்ந்துவிடும் விதமாக, நாடாளுமன்ற குழுத் தலைவர், துணைப் பொதுச் செயலாளர் பொறுப்புகளுக்குப் பிறகு, இப்போது தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுத் தலைவர் மற்றும் மேற்கு மண்டல மாநாட்டுப் பொறுப்பு என அடுத்தடுத்து ‘பொறுப்புகளை’க் கொடுத்து ‘குஷி’ப்படுத்தியுள்ளார் முதல்வர்.

 

கொங்கு மண்டலத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில், கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்குக் கிடைத்தது வெறும் 14 இடங்கள் மட்டுமே. அ.தி.மு.க. 22 இடங்களைப் பிடித்து கொங்கு கோட்டையைத் தக்க வைத்துக் கொண்டது. இந்த நிலைமையை மாற்றி, கொங்குவை தன் வசமாக்க, தி.மு.க. மகளிர் அணியை களமிறக்கியதில் அரசியல் வியூகம் உள்ளது.

 

ஆனால், திருவண்ணாமலையில் நடந்த தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டில் இருந்தது போன்ற எழுச்சியோ, இளம் தலைமுறை புதிய வாக்காளர்களைக் கவரும் கவர்ச்சிகரமான அம்சங்களோ பல்லடம் மாநாட்டில் மிஸ்ஸிங்! புது அறிவிப்புகள் ஏதுமின்றி, ஏற்கெனவே செய்த சாதனைகளைப் பட்டியலிட்டது, தேர்தல் பிரசாரக் கூட்டம்போலவே இருந்தது. பிரம்மாண்ட மேடை, ஆயிரக்கணக்கான விளம்பரப் பலகைகள் என வெளித்தோற்றத்திற்குப் பிரமாண்டமாகத் தெரிந்தாலும், ‘அ.தி.மு.க. கோட்டையில் ஓட்டை போட’ எந்தவொரு உறுப்படியான வியூகமும் வகுக்கப்படவில்லை என்பதே அரசியல் விமர்சகர்களின் பொதுவான கருத்து.

 

மகளிர் எழுச்சி, கட்சி வளர்ச்சி, அரசியல் தாக்கம் என எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், கடைசியில், கொங்கு மண்டலத்துத் தாய்மார்கள், ‘சுவையான விருந்து, கையில் கொஞ்சம் மிக்சர், வீடு திரும்பும்போது வாழைத்தார்…’ என திருப்தியோடு சென்றார்கள். இதில், அரசியல் பேசிய ஸ்டாலினின் குரல் எந்த அளவுக்கு ஆழமாகப் பதிந்திருக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.