கொரானோ தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.500 கோடி கூடுதலாக நிதி..! முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரானோ தடுப்பு நடவடிக்கைகளுக்காக கூடுதலாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
கொரானோ அச்சுறுத்தல் தமிழகத்திலும் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. முன்னெச்சரிக்கை பணிகளுக்காக ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த வாரம் சட்டப் பேரவையில் அறிவித்தார்.
ஆனால், சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினோ, ரூ.60 கோடி ஒதுக்கீடு போதுமானதல்ல; ரூ 500 கோடி அல்லது 1000 கோடி ஒதுக்கினாலும் பரவாயில்லை என சுட்டிக்காட்டியிருந்தார். இந்நிலையில், இன்று கொரானோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் பேசுகையில், பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று தமிழகத்தில் மக்கள் ஊரடங்கை வெற்றிகரமாக்கிய அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டார்.

மேலும், கொரானோ அறிகுறி இருப்போர் உடனடியாக தாமாக முன் வந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எச்சரித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரானோ அறிகுறியுடன் யாரும் வெளியில் நடமாடுகின்றனர் என்ற சந்தேகப்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
கொரானோ தடுப்பு நடவடிக்கைகழைக்காக ஏற்கனவே ரூ 60 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதலாக ரூ.500 ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். ஏற்கனவே கொரானோ தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசும் ரூ.972 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.






