தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை..!
தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசியில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, திருப்பூர் மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருச்சி, கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
வரும் 19ஆம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக கனமழை வாய்ப்புள்ளது எனவும், சென்னையில் இரு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






