வாக்களித்த பிறகு ஆசியர்களுக்கு தேர்தல் பணி வழங்குங்க… அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள்நல கூட்டமைப்பு கோரிக்கை!
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 100% வாக்களித்த பிறகே, வாக்குச்சாவடி மையங்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் தலைவர் அருணன் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடு்படுவது வழக்கம். ஒவ்வொருமுறையும் 3 பயிற்சி வகுப்புகள் நடத்தி, பிறகு வாக்கச்சாவடி மையத்திற்கான பணி வழங்குவார்கள். அதேநேரம், அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வாக்களிக்க எந்தவொரு தேர்தலிலும், உரிய வசதிகள் ஏற்படுத்தித் தருவதில்லை.
இது தொடர்பாக, மேல்நிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், தேர்தலில் ஈடுப்படும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு கால அவகாசம் அளித்து, அனைவரும் 100% வாக்களிப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியது. இதை, இதை நாங்கள் வரவேற்கின்றோம்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ளவாறு, படிவம்-12 இல் சான்றொப்பமிடும் அலுவலர் கையொப்பம் பெற்றுத்தான் வாக்களிக்க வேண்டும் என்றால் 100% வாக்களிக்க இயலாத இயலாதநிலை ஏற்படும். சான்றொப்பம் பெற அலைக்கழிக்கப்படுவதால், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் பெரும்பாலனோர் வாக்களிப்பதில்லை.
எனவே, உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி, தேர்தல் பணியில் ஈடுப்படும் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக, தேர்தல் பயிற்சி நடத்தும் அலுவலரே சான்றொப்பம் இட்ட படிவத்துடன் தபால் வாக்கு சீட்டு வழங்கி, சுய கையொப்பம் பெற்று வாக்களிக்க வழிவகை செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் 100% வாக்களிப்பதை உறுதி செய்ய முடியும்.
மேலும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஒரே தொகுதியில் அவர்கள் பணி செய்யும் இடம் மற்றும் வசிப்பிடத்தின் பக்கத்தில் உள்ள மாநகராட்சி பகுதி ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சிகளில் பணி வழங்க வேண்டும். மாற்றுத்திறன் ஊழியர்கள் ஆசிரியர்கள், மகப்பேறு ஊழியர்கள் ஆசிரியைகள் , காசநோய், புற்றுநோய் , மூச்சுத்திணறல் பிரச்சனை, இருதய பிரச்சனை போன்ற தீவிர நோயுள்ள ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை பணியமர்த்தக்கூடாது.
வாக்குச்சாவடியில், ஊழியர்களுக்கு குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை ஏற்பாடுத்தித்தர வேண்டும். சிற்றுண்டி, மதிய உணவு இரவு உணவு பற்றாக்குறை இன்றி, தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் தலைவர் அருணன் வலியுறுத்தி உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




