இஸ்ரோ முன்னாள் இயக்குனர் பத்மஸ்ரீ மயில்சாமி அண்ணாதுரை மதுரை குயின்மீரா சர்வதேசப்பள்ளியில் பேட்டி..!
நவம்பர் 14 குழந்தைகள் தின விழா மட்டுமல்ல, இன்றுதான் 2008 அன்று சந்திரன் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது என இஸ்ரோ முன்னாள் இயக்குனர் பத்மஸ்ரீ மயில்சாமி அண்ணாதுரை மதுரை குயின்மீரா சர்வதேசப்பள்ளியில் பேட்டி அளித்துள்ளார்.
மதுரை கோச்சாடையில் உள்ள குயின்மீரா சர்வதேசப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழாவில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்றார். பிறகு, மாணவர்களிடயே பேசினார். அப்போது பள்ளிப்படிப்பை முடித்து விட்டாலும், கல்லூரி படிப்பை முடித்து விட்டாலும் கற்றுக் கொள்வதை நிறுத்தக்கூடாது. ஒவ்வொன்றையும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். வாய்ப்புகள் நிறைய கொட்டி கிடக்கின்றது. ஒரு காலத்தில் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் 5,6 கிலோமீட்டர் பயணம் செய்து பயிலவேண்டி இருந்தது. ஆனால் தற்போது உங்களுக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

நிறைய வாய்ப்புகள் உள்ளதைப்போல போட்டிக்களும் நிறைய உள்ளது.வாய்ப்பை சரியாக பயன்படுத்தியதால் தான் தொழில்நுட்பத்தில் சாதிக்க முடிந்தது. வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் கற்றுக் கொண்டே இருப்பவர்களுக்கு, அவர்களுக்கான உயரம், பணி காத்துக்கொண்டே இருக்கிறது. வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ஏங்க வேண்டாம். மனிதர்களாக நாம் பிறந்ததே மிகப்பெரிய வாய்ப்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

*இந்தியா விண்வெளித் துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. வாழ்நாள் முழுவதும் கற்றல் என்பது முக்கியமான ஒன்று. கற்றலின் பரிணாமத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
*இன்னும் நம் குழந்தைகள் சாதிப்பதற்கு தேவையான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.
*குலசேகரன் பட்டினத்தில் ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் ஆரம்ப கட்ட பணி நடைபெற்று வருகின்றது.
*கொரோனா மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படுத்தியது. ஆனால் அதைத் தாண்டி வந்திருக்கிறோம் என்றால் தொழில்நுட்ப வளர்ச்சி அறிவியல் வளர்ச்சி தான்.
*விண்வெளித் துறைக்கு எப்படி பொறியாளர் தேவைப்படுகிறார்களோ அதுபோலவே விவசாயத்திற்கும் பொறியாளர்கள் தேவை. அப்போது புதிய தொழில் நுட்பங்களை கையாள முடியும்.
எனவும் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தனது பேட்டியில் கூறினார்.





