மருத்துவர்கள் முழுநேரம் பணியில் இருக்க அறிவுறுத்தல் – மா.சுப்பிரமணியன்
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ‘டித்வா’ புயலின் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றமும், பலத்த காற்றுடன் கூடிய கனமழையும் தீவிரமடைந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வரும் நிலையில், புயலின் நகரும் வேகம் தற்போது அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘டித்வா’ புயலின் தாக்கத்தினால் ராமேஸ்வரம் மற்றும் காரைக்கால் போன்ற கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் கடுமையாக உள்ளது.
இதன் எதிரொலியாக, தமிழகத்தில் உள்ள 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டு, அபாய நிலை குறித்து மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், ஏற்கெனவே கடலுக்குச் சென்றவர்கள் உடனடியாக கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கக்கடலில் இலங்கை அருகே மையம் கொண்டுள்ள ‘டித்வா’ புயல், தற்போது தமிழகத்தை நோக்கி மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதன் தீவிரத்தின் காரணமாக, காவிரிப் படுகை மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, ‘டித்வா’ புயல் சென்னையிலிருந்து சுமார் 560 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, இந்தப் புயல் வரும் நவம்பர் 30ஆம் தேதி அதிகாலை வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவின் இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை நெருங்கும் போது, அதன் தாக்கம் மேலும் அதிகமாக இருக்கும் என்பதால், கடலோர மாவட்ட நிர்வாகங்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.






