சென்னையில் கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொலை..!
சென்னையில் காரை ஏற்றி கல்லூரி மாணவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் திமுக பிரமுகரின் பேரன் கைது செய்யப்பட்டுள்ளார். திருமங்கலம் பள்ளி சாலையில் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சொகுசு கார் ஒன்று மோதியதில் அயனாவரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நித்தின் சாய் உயிரிழந்தார். பைக்கில் இருந்த மற்றொரு இளைஞர் அபிஷேக் என்பவர் காயமடைந்தார்.
இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்துக் காவலர்கள் வழக்கு பதிவு செய்த நிலையில் இறந்த மாணவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கொலை நிகழ்ந்ததாக குற்றம்சாட்டினார். இந்த புகாரை அடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ரேஞ்ச் ரோவர் சொகுசு காரை வைத்து வேண்டுமென்றே விபத்தை நிகழ்த்தி நித்தின் சாய் கொல்லப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பெண் தொடர்பான காதல் விவகாரத்தில் கொலை நிகழ்ந்தது உறுதியாகியுள்ளது. பிரணவ் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவர் சார்பாக இரு கும்பல்கள் மோதிக்கொண்டதில், பிரணவ் சார்பாக சொகுசு காரில் வந்த திமுக பிரமுகர் தனசேகரின் பேரன் சந்துரு உள்ளிட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முதலில் வெங்கடேசன் என்பவரை காரை வைத்து வேகமாக விரட்டி மோத முயற்சித்துள்ளனர். பின்பு, யாரேனும் ஒருவரை கொன்றால்தான் நாம் யார் என தெரிய வரும் என ஆத்திரத்தில் கூறிக் கொண்டே தாறுமாறாக காரை ஓட்டியபோது, இருசக்கர வாகனத்தில் சென்ற நித்தின் சாய், அபிஷேக் மீது கார் மோதியுள்ளது.
இதில் நித்தின் சாய் உயிரிழந்த நிலையில் சந்துரு கைது செய்யப்பட்டார். 5 பிரிவுகளில் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.





