பள்ளியில் திடீரென பற்றி எரிந்த நெருப்பை அணைத்த ஆசிரியர்கள்..!
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் திடீரென பற்றி எரிந்த நெருப்பை ஆசிரியர்களும் மாணவர்களும் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். 450 மாணவ மாணவிகள் படிக்கும் இந்த பள்ளியில் காலை பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்ற பொழுது திடீரென இரண்டாவது தளத்தில் இருந்து கரும்புகை வரத்தொடங்கியது.
பள்ளி வளாகத்தில் இருந்த மாணவ மாணவிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் ஒரு சில ஆசிரியர்களும் மாணவர்களும் வாளிகளில் தண்ணீர் எடுத்து ஊற்றி தீயை அணைத்தனர்.
தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் துரிதமாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தீயணைப்புத் துறையின் இணை இயக்குனர் ரவிச்சந்திரன் பாராட்டு தெரிவித்தார். மேலும் இந்த தீயில் புத்தக பைகளை பறிகொடுத்த 28 மாணவர்களுக்கு அவர் புதிய பைகளை வழங்கினார்.






