கேரள சாலை விபத்தில் திண்டுக்கல் மாணவர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு!
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நடந்த சாலை விபத்தில் திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளம் மாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 7 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் கேரளாவுக்கு காரில் சென்றனர். திருச்சூர் கைப்பமங்கலத்தில் உள்ள பனம்பிக்கு என்ற இடத்தில் அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி மீது கார் மோதியது.
நள்ளிரவில் நடந்த இந்த விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. இதில் காரில் இருந்தவர்கள் அனைவரும் உள்ளே சிக்கிக்கொண்டனர். சம்பவம் அறிந்து வந்த போலீசார், காரை வெட்டி ஓட்டுநர் மற்றும் 7 மாணவர்களின் சடலங்களை மீட்டனர். சேலத்தைச் சேர்ந்த விஸ்வா, திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யா, யுவசஞ்சித், மதுரையைச் சேர்ந்த சந்தோஷ், பிரசன்னா ஆகிய மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி மீது கார் மோதியதன் பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதேநேரம், போதிய தெரு விளக்குகள் இல்லாததும், லாரி நிறுத்தப்பட்ட பகுதியில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படாததுமே விபத்துக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





