வீரருடனான மோதலில் கிரிக்கெட் பயிற்சியாளர் உயிரிழப்பு..!
இந்திய கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இலங்கை சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்தத் தருணத்தில் வீரர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, கிரிக்கெட் பயிற்சியாளர் உயிரிழந்ததும் அதனைத் தொடர்ந்து வீரர் கைதும் செய்யப்பட்டிருக்கிற சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்தது இலங்கையில் தான். இலங்கை அணியின் ஒருநாள் போட்டிகளின் கேப்டன் குசல் மெண்டிஸ் உட்பட பல முன்னணி வீரர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்தவர் இலங்கையைச் சேர்ந்த 62 வயதான பயிற்சியாளர் சுமித் பெர்னாண்டோ. இவர் சில தினங்கள் முன் புளூம்பீல்ட் கிரிக்கெட் கிளப்பில் வீரர்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது, அங்கிருந்த கிரிக்கெட் வீரர்கள் சிலர் கிளப்பில் இருந்த தண்ணீர் குழாய்க்கு சென்று தண்ணீர் அருந்த சென்றுள்ளனர். ஆனால் குழாயில் தண்ணீர் வரவில்லை என்பதால் பயிற்சியாளர் பெர்னாண்டோவிடம் அது குறித்து விஷயத்தைக் கூறியிருக்கின்றனர். பயிற்சியாளர் என்பதைத் தாண்டி அவர் இந்த கிளப்பின் காப்பாளராகவும் பணியாற்றி வந்திருக்கிறார்.
அப்போது அவர்களுக்குள் விவாதம் ஏற்பட்டிருக்கிறது. வாக்குவாதம் முற்ற, பெர்னாண்டோ ஒரு வீரரை தாக்க முற்பட 17 வயது வீரர் ஒருவர் பதிலுக்கு பெர்னாண்டோவைத் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் பயிற்சியாளர் பெர்னாண்டோ உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பெர்னாண்டோ உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 17 வயது வீரரை இலங்கை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரின் தாக்குதலால் தான் பயிற்சியாளர் மரணமடைந்தாரா என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. ஏனென்றால், பெர்னாண்டோவுக்கு முன்பே இதய நோய் இருந்ததாக மருத்துவ அறிக்கைகள் சொல்லப்பட்டுள்ளன. அது காரணமா அல்லது தாக்குதல் காரணமா என்பது தொடர்பாக நீதிமன்ற அறிவுறுத்தலுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




