--- --:--:-- --

விஜயின் பெரம்பூர் தொகுதியில் சென்னை மாநகராட்சி மெகா பிளான்..!

3

முதலமைச்சர் விஜயின் பெரம்பூர் தொகுதிக்கான பகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்காக, ரூ.48 லட்சம் மதிப்பிலான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான டெண்டரை பெருநகர சென்னை மாநகராட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்தத் திட்டத்தில் வாகன நிறுத்துமிடம், மிதிவண்டிப் பாதைகள், அகலமான நடைபாதைகள், தூய்மையான வடிகால்கள், கூடுதல் பூங்காக்கள், மேம்பட்ட குடிநீர் விநியோகம் மற்றும் வெள்ளப் பாதிப்புத் தடுப்புத் திட்டம் ஆகியவை அடங்கும்.

 

 

மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இத்தொகுதியில் உள்ள சுமார் 20 கி.மீ நீளமுள்ள தெருக்களில், ஒரே நேரத்தில் பல நகர்ப்புறப் பிரச்சனைகளைச் சரிசெய்யும் நோக்கில் மேம்படுத்தப்பட உள்ளது. கட்டுமான பணிகள் நடைபெறுவதற்கு முன்பு ஆலோசகர்கள் வெள்ளப்பெருக்கு அதிகம் உள்ள இடங்கள், கழிவுநீர் கால்வாய்கள், போக்குவரத்து நெரிசல்கள், ஆக்கிரமிப்புகள், பாதுகாப்பற்ற பாதசாரிக் கடைகள், வாகன நிறுத்துமிடப் பற்றாக்குறை மற்றும் பொதுப் பயன்பாட்டு வசதிகளுக்கு இடையேயான முரண்பாடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

 

 

இந்த விரிவான திட்ட அறிக்கையில், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களுக்கான இணைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும், குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலச் செயலாக்க உத்திகளும் அடங்கும். ஆலோசகர் ஜி.ஐ.எஸ் ஆய்வுகள் மற்றும் கள ஆய்வுகளைப் பயன்படுத்தி தொகுதியின் ஒவ்வொரு அம்சத்தையும் வரைபடமாக்குவார். ஆலோசகர் 3 மாதங்களில் அறிக்கையைச் சமர்பித்த உடன் கட்டுமான பணிகள் நடைபெறும்.

 

 

இதுகுறித்து, ஜி.சி.சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் கூறியதாவது, “இந்த முன்னெடுப்பானது, உள்கட்டமைப்பு மேம்பாடுகளை மேம்படுத்துதல், பருவநிலை மாற்றங்களைத் தாங்கும் வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட பொது இடங்கள், தொழிலாளர்களுக்கு உகந்த வசதிகள் மற்றும் சிறந்த வாகன நிறுத்துமிட மேலாண்மை ஆகியவற்றுடன் இணைத்து, நீண்ட காலத்திற்கு உள்கட்டமைப்பைத் தக்கவைப்பதற்கான வருவாய் ஆதாரங்களைக் கண்டறிவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது” என்றார். முதலமைச்சர் விஜய் தனது புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைத் திறந்து வைப்பதற்காக, இந்த மாத இறுதியில் பெரம்பூருக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon