காங்கிரஸ் நாட்டை அவமதிக்கிறது– அமைச்சர் கிரண் ரிஜிஜு
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார். அதில், ஹரியானா தேர்தலில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாக பல்வேறு ஆதாரங்களை அவர் வெளியிட்டார். இந்தச் சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது; “அவர் (ராகுல் காந்தி) ஜென்சி (இளம் தலைமுறையினர்) தூண்டுவது பற்றிப் பேசுகிறார். நம் நாட்டு மக்கள் புத்திசாலிகள். உலகம் பொருளாதார மந்தநிலையைச் சந்தித்து வரும் நிலையில், இந்தியா 7%க்கும் மேலான பொருளாதார வளர்ச்சியில், பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால், இளம் தலைமுறையினர் பிரதமர் நரேந்திர மோடியுடன் நிற்கின்றனர்.
இதைத் திசைதிருப்பவும், நம் நாட்டை அவமதிக்கவும், ராகுல் காந்தி தேச விரோத சக்திகளுடன் சேர்ந்து இந்தச் சதித்திட்டங்களை செய்கிறார். இந்தச் சதித்திட்டங்கள் ஒருபோதும் வெற்றிபெறாது.நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது, அனைத்து நீதிபதிகளும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டனர்.
தற்போது, நீதிபதிகள் கொலீஜியம் முறை மூலம் நியமிக்கப்படுகிறார்கள். காங்கிரஸ் காலத்தில், நீதிபதிகள், தேர்தல் ஆணையம், சிபிஐ இயக்குனர் என அனைத்தையும் காங்கிரஸ் அரசு நியமித்தது. ஆனால், பாஜக ஒருபோதும் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை எனக் கூறியதில்லை என தெரிவித்துள்ளார்.






