தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை..!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன்மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. திருவல்லிக்கேணி, மண்ணடி, எழும்பூர், வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது.
பகல் பொழுதில் வெயில் சுட்டெரித்த நிலையில் இரவு நேர மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. திருவொற்றியூர், ராயபுரம், காசிமேடு, வண்ணாரப்பேட்டை கொடுங்கையூர், வியாசர்பாடி, கொளத்தூர், பெரம்பூர், வில்லிவாக்கம், அயனாவரம், எண்ணூர், மணலி, உள்ளிட்ட பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.
இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். பூந்தமல்லி ,செம்பரம்பாக்கம் குமணன்சாவடி, மதுரவாயல், போரூர், வானகரம், நெற்குன்றம் மற்றும் வளசரவாக்கத்திலும் இடியுடன் கன மழை பெய்தது. இதனால் பள்ளி மாணவ மாணவிகள் மழையில் நனைந்தபடியே வீட்டுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது.
அதேபோல அம்பத்தூர், ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்று மற்றும் இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கன மழை கொட்டியது. அதேபோல மதுரை மாநகரையும் மழை விட்டு வைக்கவில்லை.
கோரிப்பாளையம், அண்ணாநகர், மாட்டுத்தாவணி, சிம்மக்கல், பழங்காநத்தம், காளவாசல், ஆரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.





