நேபாள நாட்டின் மிக இளம் வயது பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்பு..!
நேபாள நாட்டின் மிக இளம் வயது பிரதமராக 35 வயதேயான பாலேந்திர ஷா பதவியேற்றுக் கொண்டார். கடந்த ஆண்டு நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலிக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் நிலைமை கட்டுக்குள் இல்லாமல் சென்றது.
இதையடுத்து பிரதமர் பதவியை கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்தார்.
ஜென்ஸி இளைஞர்கள் போராட்டத்தால் சர்மா ஒலி தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி கவிழ்ந்து அந்நாட்டின் இடைக்கால தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுஷீலா கார்கி நீடித்து வந்தார். இந்த நிலையில் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மார்ச் 5 ஆம் தேதி நடைபெற்றது.
இதில் பாலேந்திர ஷாவின் ராஷ்டிரிய சுதந்திரக் கட்சி மொத்தம் உள்ள 275 இடங்களில் 182 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஜாபா-5 தொகுதியில் போட்டியிட்ட பாலேந்திர ஷா, முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியை விட 49,614 வாக்குகள் அதிகம் பெற்று அவரைத் தோற்கடித்தார். இந்நிலையில், முன்னாள் மேயரும் ராப் பாடகருமான பாலேந்திர ஷா நேபாளத்தின் இளம் பிரதமராக பதவியேற்றுள்ளார்.
பாலேந்திர ஷாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தமது ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியா-நேபாளம் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை இன்னும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லவும், உங்களுடன் நெருக்கமாக பணியாற்றவும் ஆவலுடன் உள்ளதாக பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




