தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் உயர்ந்துள்ளது.
ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும் இருந்தது.
தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36–39° செல்சியஸ், வட தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35-37° செல்சியஸ், தென் தமிழக கடலோரப்பகுதிகளில் 34-35° செல்சியஸ், மலைப்பகுதிகளில் 20-28° செல்சியஸ் பதிவாகியுள்ளது.இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அதன்படி தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 13-ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும்.