தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுமி ஒருவருக்கு இளைஞர்கள் செல்போன் மூலம் பாலியல் தொல்லை தொடர்ந்து கொடுத்து வந்ததால் மனமுடைந்த சிறுமி தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்திருக்கிறார். தவறு யார் மீது? சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்யும் அளவிற்கு இளைஞர்கள் சிலர் செல்போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் அந்த 17 வயது சிறுமி. பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு மகளிர் சுய உதவி குழு கடன் வழங்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடன் வழங்குவது தொடர்பாக களத்தில் இறங்கி வேலை பார்க்க வேண்டிய சூழல் காரணமாக சிறுமிக்கு சில இளைஞர்கள் சரவணன், வேலுச்சாமி, குகன் உள்ளிட்டவர்கள் நண்பர்களாக அறிமுகம் ஆகியுள்ளன.
சிறுமி அவர்களிடம் நட்பாக பழகி வந்த நிலையில் இளைஞர்கள் அவரை வேறு கண்ணோட்டத்துடன் பார்த்து வந்துள்ளனர். அச்சத்தில் இருந்த சிறுமியின் தாய் இளைஞர்களோடு பேச வேண்டாம் என கண்டிக்கவும் சிறுமியும் அவர்களிடம் இருந்து விலகியுள்ளார்.
இதை அறிந்த இளைஞர்கள் சிறுமியின் செல்போன் எண்ணுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு தங்கள் பாலியல் இச்சைக்காக தனி இடத்திற்கு வரும்படி நேரடியாக அழைத்து தொந்தரவு கொடுத்துள்ளனர். கடந்த 8 ஆம் தேதியன்று சிறுமி வீட்டில் இருந்தபோது சரவணன் என்ற இளைஞன் சிறுமியை தொடர்பு கொண்டு வெளியே வரும் படியும் இல்லாவிட்டால் தீ வைத்து கொளுத்தி விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
பின்னர் சிறுமியின் தெருவிற்கு வந்து சத்தம் போட்டுவிட்டு வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்ததால் சிறுமி பயந்து போய் வீட்டிற்குள் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டவர்கள் உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக குளத்தூர் காவல் நிலைய போலீசாரிடம் மூன்று இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதில் ஒரு இளைஞர் சிக்கியுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நட்பாக பழகிய சிறுமியுடன் தவறான நோக்கத்துடன் பழகிய இளைஞர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் சிறுமி தீ குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.