3.34 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல் !!!

கோவை அரசு மருத்துவமனையில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போலியோ சொட்டு மருந்து முகாமினை துவக்கி வைத்தார்.

 

கோவை அரசு மருத்துவமனையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை துவக்கி வைத்தார். இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் ஜெயசித்ராவினை, அமைச்சர் வேலுமணி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.மேலும், நோயாளிகளிடம் நலம் விசாரித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மருத்துவமனையை சுத்தமாக வைத்திருக்குமாறு மருத்துவமனை முதல்வர் அசோகனிடம் அறிவுறுத்தினார்.

இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்ற ஆண்டு 3.33 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதாகவும், இந்த ஆண்டு 3.34 இலட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கோயமுத்தூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 1202 மையங்களும், நகர்ப்புறங்களில்379 மையங்களும் என மொத்தம் 1581 போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும்,பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களில் உள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 30 மையங்கள் மற்றும் 18 நடமாடும் மையங்கள் சிறப்பு மையங்களாக அமைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.

 

மேலும்,போலியோ சொட்டுமருந்து வழங்கும் பணியில் 6536 பேர் ஈடுபட்டுள்ளதாகவும், அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது, பாதுகாப்பானது எனவும் கூறிய அவர், அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.


Leave a Reply