கூட்டணி குறித்த கருத்துகளை காங்., திமுகவினர் பொதுவெளியில் பேசக்கூடாது..! கே.எஸ்.அழகிரி சந்திப்புக்குப் பின் மு.க.ஸ்டாலின் அறிக்கை!!

திமுக-காங்., இடையேயான கூட்டணி குறித்தான கருத்துக்களை இரு கட்சியினரும் பொதுவெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்துக்கு புறம்பாக திமுக செயல்பட்டதாக குற்றம் சாட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடந்த 10-ந் தேதி அறிக்கை விட்டார். அது முதல் இரு கட்சிகளிடையே சலசலப்பு ஏற்பட்டது. இரு கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்களிடையே வார்த்தைப் போர் ஏற்பட்டு கூட்டணிக்கு சிக்கலாகும் நிலை உருவானது. ஆனால் கே.எஸ்.அழகிரி அறிக்கை விடுத்து 10 நாட்களாகியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் அமைதி காத்து வந்தார்.

 

இந்நிலையில் இரு கட்சிகளிடையேயான பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று அடுத்தடுத்து விறுவிறுப்பான காட்சிகள் அரங்கேறின. காங். முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூட்டணி உடையாது. இரு கட்சியினரும் பேசியதை மறந்து விட வேண்டும் என குரல் கொடுத்தார். தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து சமாதான தூது விட்டார்.

 

அதன்பின் முக்கிய திருப்பம் அரங்கேறியது. திமுகவுக்கு எதிராக அறிக்கை விட்ட கே.எஸ்.அழகிரி, அண்ணா அறிவாலயம் சென்று மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். பின்னர் அழகிரி மட்டும் செய்தியாளர்களைச் அந்தித்து, தற்போதைய பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக பேசியதாகவும், இனிமேல் எந்த பிரச்னையானாலும் இருவரும் பேசித் தீர்த்துக் கொள்வோம். அதனால் திமுக -காங்கிரஸ் கூட்டணி வரும் சட்டசபை தேர்தல் மட்டுமின்றி அதன் பின்னரும் தொடரும் என்று கூறினார்.

 

கே.எஸ்.அழகிரி மட்டும் செய்தியாளர்களை சந்தித்த நிலையில், மு.க.ஸ்டாலின் பேட்டி எதுவும் கொடுக்கவில்லை. செய்தியாளர்களையும் சந்திக்கவில்லை. ஆனால் கே.எஸ்.அழகிரியுடனான சந்திப்பு முடிந்த சிறிது நேரத்தில் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது :

 

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் மக்களின் ஆதரவைப் பெற்று மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் இடங்கள் குறித்து கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், அவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தி – வெற்றி வாய்ப்புள்ள பகுதிகளின் அடிப்படையில் இடங்களைப் பகிர்ந்து கொள்வது என்று தெரிவிக்கப்பட்டு – அவ்வாறே மாவட்ட அளவில் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று, இடங்கள் ஒதுக்கீடு செய்து கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.

 

மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த இடங்களே வழங்கப்பட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, “வெளிப்படையாக” ஒரு அறிக்கையை வெளியிட்டார். சுமுகமாகப் பேசித் தீர்த்திருக்க வேண்டிய மறைமுகத் தேர்தல் இடப்பங்கீடு குறித்து, அறிக்கை மூலம் பொது வெளிக்குக் கொண்டு சென்றது, கடந்த சில நாட்களாக இரு தரப்பிலும் விரும்பத்தகாத கருத்துப் பரிமாற்றத்திற்கு வழி வகுத்துள்ளது.

 

திமுகவின் மனப்பாங்கினை உணர்ந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் அழகிரி, “தி.மு.க. – காங்கிரஸ் இடையே எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது” என்றும், “மதவாத, பாசிச சக்திகளையும் அவர்களை ஆதரித்து கைப்பாவைகளாகச் செயல்பட்டு வருபவர்களையும் எதிர்த்து தி.மு.கழகம் மேற்கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆதரவளித்து துணை நிற்கும்” என்றும் அறிக்கை வாயிலாகவும், பேட்டிகள் வாயிலாகவும் ஆக்கபூர்வமாகத் தெரிவித்துள்ளார். இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னை நேரில் சந்தித்து இதுகுறித்து பேசியும் உள்ளார்.

 

ஆகவே கூட்டணி தொடர்பாக ஏதோ ஒரு சில இடங்களில் இருதரப்பிற்கும் ஏற்பட்ட சில நிகழ்வுகளை முன் வைத்து- இரு தரப்புமே இந்த விவாதத்தை மேலும் பொதுவெளியில் நடத்திக் கொண்டிருப்பது- திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் சிறு ஓட்டையாவது விழாதா என்று ஏங்கித் தவிக்கும் “குள்ள நரி சக்திகளுக்கும்” “சில ஊடகங்களுக்கும்” மேலும் அசைபோடுவதற்கான செயலாக அமைவதை நான் ஒரு சிறிதும் விரும்பவில்லை. ஆகவே விரும்பத்தகாத இத்தகைய விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், இனியும் இவ்வாறு ஏற்பட அனுமதிக்கக் கூடாது என்பதாலும், கூட்டணி குறித்த கருத்துகளை இரு கட்சியினரும் பொது வெளியில் தெரிவிப்பதை கட்டாயம் தவிர்த்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Leave a Reply