இந்து தீவிரவாதி என்று கூறி, விஷத்தை கக்கி, அமைதியை கெடுக்கும் கமலஹாசனின் நாக்கு அறுபடத்தான் போகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக குறிப்பிட்டார்.
அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில், மக்கள் நீதிமய்யம் வேட்பாளரை ஆதரித்து அதன் தலைவர் கமலஹாசன் பேசும் போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து தான். முஸ்லீம்கள் இங்கு அதிகம் இருப்பதான் நான் அப்படி பேசவில்லை. இங்குள்ள காந்தி சிலை முன்பு இப்படி சொல்கிறேன் என்றார்.
இதற்கு, பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. சமூக வலைதளங்களிலும் கமலை விமர்சனம் செய்து பலரும் பதிவிட்டு வருகின்றனர். தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை, சுப்ரமணியன் சுவாமி, நடிகர் விவேக் ஓபராய் உள்ளிட்ட பலரும் கமலை கடுமையாக சாடியுள்ளனர்.
இந்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விஷம் கக்கி உளறிக் கொட்டும் கமலின் நாக்கு அறுபடத்தான் போகிறது என்று, தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடியில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
கமலஹாசனின் கொழுப்பெடுத்த நாக்கை அடக்க வேண்டும். அவருக்கு நாக்கில் சனி இருக்கிறது. தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது; தீவிரவாதம் தீவிரவாதம் தான். சிறுபான்மையினர் ஓட்டுக்காக, மத நல்லிணக்க அமைதியை கெடுக்க, கமல் விஷம் கக்கியிருக்கிறார். இவ்வாறு நடிக்கும் கமலஹாசனின் நாக்கு, ஒருகாலத்தில் அறுபடத்தான் போகிறது.
யாரையோ திருப்திபடுத்துவதற்காக, கமலஹாசன் இவ்வாறு பேசுகிறார். ஏன் இப்படி வார்த்தை உளறி கொட்டி, நஞ்சை கமலஹாசன் விதைக்கிறார்? அவர் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, அரவக்குறிச்சியில் இன்று மேற்கொள்ளவிருந்த பிரசாரத்தை கமலஹாசன் ரத்து செய்துள்ளார்.