பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்..!
குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி காணப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்துவருகிறது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் அடித்த நிலையில் மாலை 6 மணிக்கு திடீரென பலத்த மழை பெய்தது. திருவாரூரில் விடிய விடிய மழை பெய்தது.
இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்தது.காரைக்கால் பகுதியில் தொடர் மழை பெய்துவருவதை அடுத்தும், இன்றும் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தஞ்சை மாவட்டத்திலும் சில இடங்களில் பரவலாக மழை பெய்துவருவதை அடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவெடுக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.






