முன்னணி நடிகர்களின் ஊதியத்திற்கு புதிய கட்டுப்பாடு..!

ஜினி, அஜித், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் ஊதியத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பல தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

 

இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் 2 தீர்மானங்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது. அவை நடிகர்கள் சார்ந்த தீர்மானங்களாக அமைந்துள்ளன. அதாவது, திரைப்படங்களில் நடித்துக் கொண்டு ஓடிடி வெப் சீரிஸ்களில் நடிக்க செல்லும் நடிகர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

அதேபோல, இனி ரஜினிகாந்த், அஜித், தனுஷ், சிம்பு, விஷால் போன்ற முன்னணி நடிகர்கள் அனைவரும் வியாபார பங்கிட்டு (Share Basic) முறையில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திரைப்படங்களில் நடிக்கும்போதே ஓடிடி தளங்களுக்கான வெப்சீரிஸ்களில் நடித்தால், திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கப்பட்ட கால்ஷீட் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

 

இதனால் மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, முன்னணி நடிகர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது. லாபத்தின் அடிப்படையில் வரும் பணத்தை நடிகர்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நஷ்டம் ஏற்பட்டால் அது சம்பந்தப்பட்ட நடிகருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

 

 

லாபம் கிடைத்தால் அது நடிகருக்கும் பயனளிக்கும். இவை உள்பட மொத்தம் 23 தீர்மானங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


கொரொனாவை விட கொடிய காக்கிகள்!? சாத்தான்குளத்தில் “இரண்டு சாத்தான்களின் அடங்காத ஆட்டம்…!” குடிமக்கள் உயிரை குடிக்க அதிகாரம் தந்ததா சட்டம்?

சாத்தான்குளத்தில் காக்கிகளின் கொடூரமான தாக்குதலில் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்த சோகச்சம்பவம், தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்று பலரின் கண்டனங்களுக்கு ஆளாகியுள்ள நிலையில், தமிழக அரசுக்கு இந்த விவகாரம் பெரும் சங்கடமாக மாறியுள்ளது. அதேநேரம், இந்த விவகாரத்தில் குற்றமிழைத்த காக்கிகளை காப்பாற்ற முயற்சி நடக்கிறதோ என்று சமூக ஆர்வலர்கள் சந்தேகத்தை கிளப்பியுள்ளனர்.

 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மொபைல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ், 31; அவரது தந்தை ஜெயராஜ் 55. கடந்த 20ஆம் தேதி இரவு, ரோந்து சென்ற சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்  பாலகிருஷ்ணன் (சாத்தான்)  மற்றும் காக்கிகள், ஊரடங்கு விதிகளை மீறிவிட்டதாகக்கூறி, இருவரையும் விசாரணைக்கு சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.

 

அங்கு நடந்த விசாரணையின்போது, தந்தை- மகன் இருவரையும் காக்கிகள், குறிப்பாக எஸ்.ஐ.க்கள் ரகுகணேஷ், (சாத்தான்) பாலகிருஷ்ணன் (சாத்தான்) மற்றும் காக்கிகள் முத்துராஜ், முருகன் ஆகியோர் காட்டு மிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். அதை தொடர்ந்து கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் இருவரும், பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காக்கிகள் கட்டவிழ்த்துவிட்ட கண்மூடித்தனமான தாக்குதலால்தான் இருவரும் மரணமடைந்ததாகக்கூறி, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அத்துடன், படுகொலைக்கு காரணமான காக்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அவர்களை சிறையில் தள்ள வேண்டுமென்று, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள், எழுத்தாளர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பல தரப்பினரும், சமூகவலைதளங்களில் தொடர்ந்து எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

 

குடிமகன்களுக்கு பாதுகாப்பு தருவதுதான் காவல்துறையினரின் கடமை; பொதுமக்களை ஸ்டேஷனில் வைத்து தாக்கி, உயிரை பறிக்கும் அதிகாரத்தை காக்கிகளுக்கு யார் தந்தது? அத்தகைய அதிகாரம் அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்படாத நிலையில், எவ்வாறு போலீசாரில் சிலர் இதுபோல் அத்துமீறுகின்றனர் என்ற கேள்வி எழுகிறது.

 

தமிழகத்தில் இதுபோல் காக்களின் விசாரணையின்போது அல்லது சிறையில் இருக்கும்போது கைதிகள் மரணமடைவது என்பது, அதிகரித்து வருகிறது. இதில் தொடர்புடைய காக்கிகள் மீது பெயரளவுக்கு இடமாற்றம் என்ற கண் துடைப்பு நடவடிக்கை மட்டுமே மேற்கொள்கின்றனர்; சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை; நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரப்படுவதில்லை.

இதனால் காக்கிகளின் அராஜகம் என்பது தொடர்கதையாகவே உள்ளது. பாதிக்கப்படும் நபருக்கு அரசியல் அல்லது வலுவான சமூகப்பின்னணி இருந்தால், அங்கொன்றும் இங்கொன்றுமாக இதுபோன்ற அத்துமீறல்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. மற்றபடி அப்பாவி ஏழைகளுக்கு, சாமானியனுக்கு நடக்கும் இத்தகைய அநியாயங்கள், லாக்-அப்புக்குள்ளேயே அடைக்கப்பட்டுவிடுகின்றன.

 

சாத்தான்குளத்தில் தந்தை- மகன் இறந்த விவகாரம் நல்லவேளை வெளிச்சத்துக்கு வந்தது; இந்திய அளவில் கவனத்தை ஈர்த்து, காக்கிகளின் இன்னொரு முகத்தை காட்டி, அவர்களுக்கு எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் தவறிழைத்த காக்கிகள் தப்ப முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

 

அதேநேரம், சாத்தான்குளம் விவகாரத்தில் காக்கிகளை காப்பாற்ற, சத்தம் போடாமல் முயற்சி நடக்கிறதோ என்று, சமூக ஆர்வலர்கள் சந்தேகத்தை கிளப்பி உுள்ளனர். காக்கிகளின் மூர்க்கத்தனமான தாக்குதலில் பலத்த காயமடைந்த இருவரையும் முறையாக பரிசோதனை செய்யாமல், அரசு மருத்துவர் எப்படி ரிமாண்டுக்கு அனுப்ப முடியும் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்நிலையை பரிசோதனை செய்த விவகாரத்தில், மருத்துவர்களுக்கு போலீசார் நெருக்கடி தந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. காக்கிகள் கொடுத்த  நெருக்கடியால்தான் மருத்துவர்கள் தங்கள் பணியைச் சரிவரச் செய்யவில்லை; மருத்துவர்களுக்கு நெருக்கடி தந்து, தாங்கள் விரும்பியபடி காக்கிகள் மருத்துவச்சான்று பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

குறிப்பாக, சாத்தான்குளம் அரசு மருத்துவமனை பெண் மருத்துவர் ஒருவரிடம் காக்கி, இருவருக்கும் உடலில் காயங்கள் இல்லை என்று சான்றிதழ் கேட்டு கட்டாயப்படுத்தினார்களாம். அந்த மருத்துவர், இதற்கு சம்மதிக்கவில்லை; அதனால், மருத்துவச்சான்று பெறுவதில் பலமணி நேரம் தாமதமானது;

 

கடைசியில் தொடர்நெருக்கடி ஏற்படுத்தி, காக்கிகள்  கேட்டவாறே மருத்துவச்சான்றிதழ் வழங்கப்பட்டதாக, பெயர் வெளியிட விரும்பாத அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், சாத்தான்குளம் விவகாரத்தில் தேவையில்லாமல் மருத்துவர்களுக்கும் அவப்பெயர் உண்டாவதாக, அவர்கள் வருத்தமுடன் தெரிவித்தனர்.

இதிலிருந்து ஒன்று மட்டும் தெரிகிறது, அதாவது பூதாகரமாக வெடித்துள்ள இந்த விவகாரத்தில், சம்மந்தப்பட்ட காக்கிகளை காப்பாற்ற ரகசிய வேலைகள் நடக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது. அத்துடன், வழக்கை திசை திருப்பவும் சமூக வலைதளங்களில் காக்கிகளுக்கு ஆதரவாகவும், இறந்த இருவர் குறித்து சில சர்ச்சை கருத்தைகளையும் வெளியிட்டும் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

 

அதேபோல், போலீகாரர்களுக்கு பால் வினியோகிக்க மாட்டோம் என்ற தெரிவித்த தமிழ்நாடு பால் முகவர் சங்கத்தினருக்கு எதிராகவும், போலீகாரர்களுக்கு ஆதரவாகவும் வாட்ஸ் அப்பில் தகவல்கள் பகிரப்படுகின்றன. அதில், இனி பால் முகவர்களின் வேன்களை தீவிரமாக பரிசோதிக்க வேண்டும்; உரிய ஆவணங்கள், சரியான காரணங்கள் இல்லாமல் சுற்று பால் முகவர்களை ‘கவனிக்க’ வேண்டும் என்ற ரீதியில் நீண்ட நெடிய செய்தி பகிரப்பட்டு வருகிறது.

 

இதெல்லாம் பார்க்கும் போது, சாத்தான்குளம் விவகாரத்தை சத்தம் போடாமல் திசைதிருப்ப உத்திகளை கையாள்கிறார்களோ என்ற சந்தேகம் வலுக்கிறது.

காக்கிகள் தங்களது தவறுகளை சிந்திக்க வேண்டும். பொதுமக்கள் கேள்வி எழுப்பினாலே, அவர்கள் கோபப்படுவதும், தாக்குவது எந்த வகையில் நியாயம்? எந்த ஆட்சி வந்தாலும், அவர்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்பதாலே, அதிகாரத்தை அப்பாவி மக்கள் மீது செலுத்தி வதைப்பது சரிதானா?  காக்கிகளின் இத்தகைய சட்ட அத்துமீறுதல் மன்னிக்கக்கூடாத குற்றம்.

 

சாத்தான்குளம் விவகாரத்தில் அரசுக்கும் தேவையற்ற தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது; எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு கைகட்டி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு இதை ஒரு பாடமாகக் கொள்ள வேண்டும்; தண்டனைகளே அச்சத்தை தரும் என்பது, காக்கிகளுக்கும் பொருந்தும்; வருங்காலத்தில் இதுபோன்ற அடாவடிகளை செய்ய காக்கிகள் சிந்திக்ககூடாது என்றால், தவறு புரிந்தவர்கள் சட்டப்படி கடும் தண்டனைக்கு ஆளாக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை எடுப்பது ஒன்றே, தமிழக அரசு மீதான களங்கம் போக்க ஒரேவழி.

 

 

அடுக்கடுக்காக அராஜகங்கள்!

 

கடந்த ஜூன் 12ம் தேதி, அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள உணவகம் முன்பு ரேஷர்ட் புரூக்ஸ் (27) என்ற கறுப்பின இளைஞர், அந்த நாட்டு காக்கியின் சித்ரவதையால் மூச்சு முட்டி இறந்தார். அதை கண்டித்து, அமெரிக்காவில் கலவரங்கள் வெடித்தன. கறுப்பினத்தவருக்காக இந்த உலகமே போராடியது.

 

ஜனநாயகம் செழித்தோங்கும் இந்தியாவிலும் காவல்துறையினர் இத்தகைய அத்துமீறல்களில் ஈடுபட்டு, ஜனநாயக மாண்பையும் மனித உரிமைகளையும் மீறுகின்றனர். சமீபத்தில் மதுரை மத்திய குற்றப்பிரிவு வழக்கு விசாரணைக்குச் சென்ற தவிட்டுச்சந்தையை சேர்ந்த 65 வயதான அழகர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் கணேசமூர்த்தி, 29 என்பவர், காக்கி தாக்கியதில் மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 

இதே சாத்தான்குளம் காவல் நிலையத்தில், கடந்த பிப்ரவரி 21-ம் தேதி ஒரு சம்பவம் அரேங்கேறி இருக்கிறது. பழனியப்பபுரத்தைச் சேர்ந்த மதபோதகரான லாசர் பர்னபாஸ் உள்ளிட்ட 9 பேர் புளியங்குளம் கிராமத்தில் ஜெபக் கூட்டம் நடத்தியுள்ளனர். அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாகக்கூறி, அவர்களை அழைத்து வந்து காக்கிகள் கடுமையாக தாக்கிய தகவலும் வெளியாகியுள்ளது.

 

காவல் நிலையத்தில் நடக்கும் அத்துமீறல்களுக்கு, சாத்தான்குளம் சம்பவம் முடிவு கட்ட வேண்டும்.

ரஜினி, விஜய், அஜீத் கப்-சிப்!

கல்நெஞ்சம் கொண்டவர்களையும் சாத்தான்குளம் சம்பவம் கரைய வைத்துள்ளது. இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தேசியத்தலைவர்களும், திரைத்துறையினரும், கிரிக்கெட் பிரபலங்களும் காக்கிகளின் அராஜ போக்கை கடுமையாக கண்டித்துள்ளனர்.

 

ராகுல் காந்தி, ஸ்டாலினில் தொடங்கி, டிடிவி தினகரன், வைகோ, ஹெச். ராஜா, கமல்ஹாசன், நடிகர்கள் சூர்யா, ஜெயம் ரவி, விஷால், விவேக், நடிகைகள் குஷ்பு, டாப்ஸி மாளவிகா மோகனன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஹன்சிகா, இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இமான், யுவன் ஷங்கர் ராஜா, அத்துடன் பா. ரஞ்சித், கிரிக்கெட் பிரபலங்கள் ஹர்பஜன், ஷிகர் தவான், அஷ்வின் ரவிச்சந்திரன் என, இந்த கொடூர கொலைக்கு எதிர்ப்பை பதிவு செய்தவர்களின் பட்டியல் நீள்கிறது.

 

ஆனால், தூத்துக்குடி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த், இந்த விவகாரத்தில் எந்த கருத்தையும், இக்கட்டுரை அச்சேறும் வரை தெரிவிக்கவில்லை. 2018-ம் ஆண்டு சென்னையில் ஐ.பி.எல். போட்டிகள் நடத்தக்கூடாது என்று கூறி, போராட்டங்கள் நடந்தபோது போலீஸ்காரர் ஒருவர் தாக்கப்பட்டார்.

 

அப்போது ஆவேசமாக பொங்கிய ரஜினி, இப்போது மவுனம் காப்பது, பலருக்கும் அதிருப்தியை தந்துள்ளது. முன்னணி நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஜய் சேதுபதி போன்றவர்களும் இந்த விவகாரம் பற்றி வாய் திறக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


படையப்பா பேச்சு… கொரொனாவால் போச்சு! தேர்தலில் களமிறங்க ரஜினி தயக்கம்… அரசியல் பணிகளில் நீடிக்கும் சுணக்கம்!

தமிழகத்தில் எழுச்சி உருவாகட்டும், அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்ன ரஜினி, கொரோனாவின் தாக்கத்தால், இனி 0அரசியல் கட்சி தொடங்கும் முடிவில் இனி உறுதியாக இருப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர் அரசியலுக்கு வருவது சந்தேகம் தான் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

 

அதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று அரசியலுக்கு கண்ணாமூச்சி காட்டி வந்த நடிகர் ரஜினிகாந்த், 2021 சட்டசபை தேர்தலில் போட்டி உறுதி என்று சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தார். எனினும் அரசியல் கட்சி தொடங்குவதற்கான எந்தவொரு அறிகுறியும் அவரிடம் தென்படவில்லை. வழக்கம் போல் அவரது பேச்சு, காற்றோடு போச்சு என்று ரசிகர்கள் புலம்பத் தொடங்கினார்.

 

அதேநேரம், நகரங்கள், கிராமங்கள் வரை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமித்து, கட்சிக்கான அமைப்பை அவர் வலுப்படுத்தி இருப்பதாக சில செய்திகள் கசிந்தன. மேலும், புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில், அதிமுக- திமுக போன்ற பெரிய கட்சிகளுக்கு சற்றும் சளைக்காமல் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பலரையும் ஆச்சரியப்பட வைத்தனர். தற்போதைய கொரொனா வைரஸ் ஊரடங்கு முடக்கத்தின் போதும், பல மாவட்டங்களில் ரஜினி ரசிகர்கள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சேவை புரிந்து வந்தனர்.

 

எல்லாமே, ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கையில், ரசிகர்கள் உற்சாகமாக களத்தில் பணி புரிந்து வருகின்றனர். ஆனால், ரஜினி இனி அரசியலுக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்ற பேச்சு, கொரொனா பீதிக்கு மத்தியில் அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பி விட்டிருக்கிறது.

கடந்த மார்ச் 12ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், மாற்று அரசியல் என்ற முழக்கத்தை முன்வைத்தார். அப்போது, முதல்வர் பதவியில் தான் ஒருபோதும் அமரப்போவதில்லை என்று அறிவித்து, ரசிகர்களுக்கு “ஷாக்” தந்தார். அந்த சந்திப்பிலும், அரசியல் கட்சியின் பெயரையும் அறிவிக்காததால், அவரது ரசிகர்கள் வழக்கம் போல் ஏமாற்றத்துக்குள்ளாகினர். அரசியல் வருகை குறித்து ரஜினி குறிப்பிடும் போது, ‘மக்களிடம் எழுச்சி வரட்டும். அப்போது அரசியலுக்கு வருகிறேன்’என்றார். அதாவது, மலையை தூக்கத் தயார்; ஆனால், மலையை தூக்கி தோளில் வையுங்கள் என்ற கதையாகிப் போனது, ரஜினியின் அறிவிப்பு.

 

மார்ச் 12ம் தேதி ரஜினியின் பேட்டி வெளியான சில நாட்களில் கொரொனா அச்சுறுத்தல் இந்தியாவை ஆட்கொள்ள தொடங்கியது. மார்ச் இறுதி வாரத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்ததது. அன்று தொடங்கி இன்று வரை, ஒட்டுமொத்த இந்தியாவும், உலக நாடுகளும் இயல்பு வாழ்க்கைக்கு இன்னமும் திரும்பவில்லை.

 

இந்த கொரொனா பாதித்த அசாதாரண நாட்களில் கூட, தான் சார்ந்த திரைத்துறையை தவிர மற்றவர்களுக்கு ரஜினி ஒன்றும் பெரிதாக செய்துவிடவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ரஜினியை விட ஸ்டார் வேல்யூ குறைந்த நடிகர்கள் கூட அள்ளித் தந்தார்கள். அவ்வளவு ஏன், ரஜினியை குருவாக ஏற்றுக் கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ், கொரொனா பாதிப்பால் பொருளாதாரம் முடங்கிய மக்களுக்கு தாராளமாக உதவிக்கரம் நீட்டினார்.

 

தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஓராண்டு கூட இல்லாத நிலையில், கொரொனாவால் அரசியல் களம் பரபரப்பின்றி உள்ளது. ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களுக்கு பிறகே வழக்கமான அரசியல் நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம். அதன் பிறகு, சட்டசபை தேர்தலுக்கு ஆறு மாத அவகாசம் கூட இல்லாத நிலையில், கட்சியே ஆரம்பிக்காத ரஜினி என்ன செய்யப் போகிறார்? அவர் எப்போது கட்சி தொடங்கி, 234 தொகுதிகளையும் வலம் வந்து மக்களை சந்திப்பார்? அதிமுக- திமுக என்ற இரு பலம் பொருந்திய கட்சிகளை சமாளித்து அவரால் வெற்றிவாகை சூட முடியுமா? என்பதெல்லாம், அவரது ரசிகர்கள் பலரையும் குடையும் கேள்விகள்.

 

ஆனால், இந்த டென்ஷன் எல்லாம் ரசிகர்களுக்கு தான். ரஜினியோ, எந்த கவலையும் இல்லாமல் தனது வீட்டில் குடும்பத்தாருடன் ஓய்வை கழித்து வருகிறார். இந்த கொரொனா ஊரடங்கு காலத்தில், சேவை செய்து வரும் தனது ரசிகர்களை டிவிட்டர் மூலம் ஒருமுறை பாராட்டியதை தவிர, அவர் எதையும் செய்யவில்லை; அவரால் செய்யவும் முடியாது.

 

வயதாகிவிட்ட ரஜினிக்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் படங்களை நடித்தாலும் முன்பிருந்த கம்பீரம் மிஸ் ஆகிவிட்டது. இந்த சூழ்நிலையில் தான் அரசியல் பக்கம், அவரது பார்வை திரும்பியது; அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். ஆகஸ்டில் மாநாடு, செப்டம்பர் மாதத்தில் இருந்து தமிழகத்தில் சுற்றுப்பயணம் என்று ரஜினி திட்டங்களை வகுத்து வைத்திருந்தாராம். ஆனால், கொரோனாவால் எல்லா திட்டமும் பணால் ஆகிவிட்டது.

ஏற்கனவே முடித்துத்தர வேண்டிய படங்கள் இன்னமும் உள்ளன. அதுதவிர, அரசியல் சுற்றுப்பயணத்திற்கு முன்பாக அமெரிக்கா சென்று ஒருமுறை மருத்துவப்பரிசோதனை செய்து கொள்ளவும் ரஜினி திட்டமிட்டிருந்தாராம். இனி, படங்களை நடித்துக் கொடுப்பதா, அமெரிக்கா செல்வதா அல்லது தேர்தலுக்கு ஆயத்தமாவதா என, மூன்றில் ரஜினி எதை தேர்வு செய்வார்? நிச்சயம் அரசியலுக்கு வரும் முடிவைத்தான் ரஜினி கைவிட வாய்ப்புள்ளதாக, அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவிக்கின்றனர்.

 

ரஜினியின் உடல் நிலையை கருத்தில் கொண்டும், தற்போதுள்ள கொரொனா அபாயம் கருதியும், சில மாதங்களுக்கு ரஜினியை பொதுவெளியில், பொது நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டாமென்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளார்களாம். ரஜினி அரசியலுக்கு வரும் போது, நிதித்தேவைகளை பூர்த்தி செய்து தருவதாக வாக்குறுதி அளித்த சில தொழிலதிபர்களின் தொழிலை, கொரொனா புரட்டிப் போட்டதால், அவர்களிடம் இருந்து நிதி உதவி கிடைக்குமா என்பதும் இனி சந்தேகம்தான். ரஜினியின் நெருங்கிய நண்பர்களான அமிதாப்பச்சன், தெலுங்கின் சிரஞ்சீவி போன்றவர்கள் எல்லாம் கூட, துடிப்புடன் இருந்த காலத்தில் அரசியலில் நுழைத்து, சூடு பட்டக் கொண்டனர். அரசியலுக்கு வர வேண்டாமென்று, ரஜினிக்கும் அவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

 

ரஜினி, 70 வயதான நிலையில், சமூக இடைவெளியை கடைபிடித்து, தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் போய் பேசி, கட்சியை வளர்ப்பது என்பது, கொரொனாவுக்கு பிந்தைய சூழலில் சாத்தியமில்லை என்பதை ரஜினியும் உணரத் தொடங்கிவிட்டாராம். எனவே, கொரொனா வைரஸ் சூழலை காரணம் காட்டி, அரசியலில் இறங்கும் முடிவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்பதும் ரஜினியின் யோசனையாக இருக்கிறதாம்.

 

எனவே, வரும் சட்டசபை தேர்தலில் நடிகர் ரஜினிகாந்தோ அல்லது அவரது கட்சியோ களம் காண்பது என்பது சந்தேகமே என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. “எனக்கு கட்சியும் வேணாம், எந்த கொடியும் வேணாம்” என்ற ரஜினியின் ராஜாதிராஜா படத்தின் பாடல் வரிகள் தான் நிஜமாகும் போல் தெரிகிறது.

 


தமிழகத்தில் ஆளுமைக்கான வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் – அடித்து சொல்கிறார் மு.க. அழகிரி

தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு உள்ள வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.

 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய மு.க. அழகிரி தமிழகத்தில், ஆளுமையான தலைமைக்கு, வெற்றிடம் உள்ளதாக ரஜினி கூறியது உண்மை தான் என்றார். அந்த வெற்றிடத்தை நடிகர் ரஜினிகாந்த் நிரப்புவார் என்று மு.க. அழகிரி குறிப்பிட்டார்.

 

அண்மையில் பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தில் ஆளுமைக்கான வெற்றிடம் இன்னமும் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

 

இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வெற்றிடம் இல்லை என்றார்; இதேபோல், வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்று, துரைமுருகன் தெரிவித்திருந்தது என்பது நினைவுகூறத்தக்கது.


ஸ்டாலின் ஒரு காற்று! எதற்காக துரைமுருகன் இப்படி சொன்னார் தெரியுமா?

மு.க.ஸ்டாலின் ஒரு காற்று; தமிழகத்தில் நிலவிய வெற்றிடத்தை அவர் நிரப்பிவிட்டார் என்று, திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு அரசியல் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். தமக்கு காவிச்சாயம் பூசும் முயற்சி நடக்கிறது. எனக்கும் திருவள்ளுவருக்கும் காவிச்சாயம் பூசும் முயற்சிக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்.

 

அத்துடன், தமிழகத்தில் இன்னமும் சரியான ஆளுமைக்கான வெற்றிடம் உள்ளது என்றும் ரஜினி கூறியிருந்தார். அவரது இந்த கருத்து, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், திமுக பொருளாளர் துரைமுருகன், இதற்கு பதிலடி தந்துள்ளார். அவர் கூறியதாவது:

 

ரஜினி, தமக்கு காவி சாயம் பூசப் பார்க்கிறார்கள்; சிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். அது, அவருடைய கருத்து. அவர் மீது யார் காவி சாயம் பூசினார்கள் என்பதும் எங்களுக்கு தெரியாது. அவர் யாருக்கு இவ்வாறு, பதில் சொல்லியிருக்கிறார் என்றும் தெரியவில்லை.

விரைவில் கட்சியை தொடங்குவேன் என்று ரஜினி சொல்லியிருக்கிறார். அவர் கட்சி தொடங்கட்டும் அப்போது பார்க்கலாம். தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.

 

வெற்றிடத்தை காற்று நிரப்பியே தீரும் என்பது, விஞ்ஞான தத்துவம். அந்த வெற்றிடத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்ற காற்று நிரப்பிவிட்டது என்று, துரைமுருகன் குறிப்பிட்டார்.


கமல்ஹாசன் பிறந்தநாள் – ரஜினிகாந்த், திரைப்பிரபலங்கள் வாழ்த்து

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு இன்று, 65வது பிறந்தநாள் என்பதால், நடிகர் ரஜினிகாந்த் உள்பட பிரபலங்கள், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

இன்று பிறந்த நாள் கொண்டாடும் கமல்ஹாசனுக்கு நடிகர் ரஜினிகாந்த், தொலைபேசி வழியாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல், திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினரும், கமலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகைகள் குஷ்பு, கஸ்தூரி உள்ளிட்டோர், தங்களது டுவிட்டர் பக்கம் வாயிலாக, கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். நடிகர் கமல், தனது பிறந்த நாளை முன்னிட்டு குடும்பத்தினரை சந்தித்து, வாழ்த்து பெற்றார்.

 

இதற்கிடையே, தற்போது நாட்டிற்கு இன்னொரு சுதந்திரப் போர் தேவை; போக்கிடம் இல்லாமல் தாம் அரசியலுக்கு வரவில்லை என்று, கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.